Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

40 & 41. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
அத்தியாயம் – 40

நிரஞ்சன் அன்னை சொன்னவற்றை சிந்தித்தவாறு அவனது அறையில் சற்று நேரம் உலாவிக் கொண்டிருந்தான். ஆக இதற்கும் பாட்டிதான் காரணம், ஏன் இத்தனை தூவேஷம் இந்த பாட்டிக்கு? மனிதர்களுக்கு எது அத்தியாவசியம், சமயத்தில் எது கைகொடுக்கும், மனிதாபிமானம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லையா? ஆத்திரம் உண்டான போதும் அதை கட்டுப்படுத்திக் கொண்டான். மாலை ஆறு மணிக்கு தான் மலர்வதனி கிளம்புவாள். அதனால் நிறைய நேரம் இருக்கிறது. சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் தான், அந்த கறார் கண்ணாத்தாளிடம் போராடி ஜெயிக்க முடியும், என்று நினைத்தவாறே படுக்கையில் சாய்ந்தான்.
அதே போல அங்கே வடிவுக்கரசி இன்னொரு விதமாக நிம்மதியுடன் படுக்கையில் கண்ணயர்ந்திருந்தாள்.

ஆனால் சாப்பிட்டதும் அறைக்குள் நுழைந்து விட்ட மலர்வதனிக்கு ஓய்வு எடுக்க முடியாமல் சிந்தனைகள் அலைக்கழித்தது. வீட்டில் பேச்சு சப்தங்கள் அடங்கி அமைதியாக இருப்பதை உணர்ந்தாள். அவளது கைப்பையை எடுத்து அதில் இன்னும் கொஞ்சம் தேவையான பொருட்களை சேகரித்து வைத்துவிட்டு, வெள்ளை சல்வாருடன் அடர் சிவப்பில் இருந்த சுடிதார் ஒன்றை உடுத்திக்கொண்டாள். அவளுக்கு என்று தைத்தது போலிருந்தது. எப்படித்தான் அத்தை இத்தனை அழகாக வாங்கினாளோ? வளர்ந்த பிறகு அத்தை அவளை அழைத்துப் போய் உடை எடுத்து தருவது தான் வழக்கம். ஆனால் அவளிடம் சொல்லாமல் எடுத்த இந்த உடைகள் யாவுமே அவளுக்கு பிடித்திருந்தது. எல்லாமும் எடுத்து போக முடியாததோடு, இனி அவளது சம்பாத்தியத்தில் வாங்கிக் கொள்வதுதான் சரி, எண்ணங்கள் மனதில் ஓட, தலை சீவி இறுகப் பின்னலிட்டு, முகத்தை சீராக்கிக் கொண்டு மணியை பார்த்தால் நாலாகிவிட்டிருந்தது. அத்தை எழுவதற்கு இன்னும் அரைமணிநேரம் இருக்கிறது. அதனால் இப்போது கிளம்பினால் தான் அவள் பாண்டிச்சேரிக்கு விரைவில் சென்று சேரமுடியும், என்று மெல்ல கதவைத் திறந்து வெளியே மாடி வெராந்தாவை நோட்டம் விட்டாள். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, மடமடவென்று பின்புறமாக செல்லும் படிகளில் இறங்கி, பணியாளர்கள் குடியிருப்பு பக்கமாக செல்லாமல் அதற்கு பக்கவாட்டில் இருந்த தோட்டத்தின் வழியே விரைந்து நடக்கையில் அன்றைக்கு நிரஞ்சன் அவளை அணைத்து உருண்ட இடம் வரவும், அந்த நினைவில் கண்ணில் கோர்த்த நீரை சுண்டிவிட்டபடி இன்னும் நடையை துரிதப்படுத்தி பின் பக்கத்து மதில் கதவை அடைந்தவள், சிலகணங்கள் நின்று வீட்டை திரும்பிப் பார்த்துவிட்டு, சட்டென்று அங்கிருந்த வெளியேறினாள்.

ஆங்காங்கே விளை நிலங்களுடன் ஒன்றிரண்டு வீடுகளே இருந்ததால் அவளை கவனித்து பார்க்க யாரும் இருக்கவில்லை. சற்று தூரம் சென்றால் தான் கடைகளும் கோர்வையாக தெருக்களும் வரும்... அங்கே தான் அந்த நூலகம் இருந்தது. மலர்வதனி அங்கே சென்று எடுத்திருந்த புத்தகங்களை தந்து கணக்கு முடித்து மறுபடியும் தெருவில் இறங்கி நடந்தாள். அப்போது அந்த வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி, பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று அவள் சொன்னது அங்கே அடுத்து இருந்த பெட்டிக்கடையில் பத்திரிகை படிக்கும் பாவனையில் நின்ற மனிதனின் காதில் விழுந்தது. உடனே கைப்பேசியில் யாருக்கோ தகவல் சொன்னான்.
☆☆☆
ஆனால் ஆட்டோவில் ஏறிய பிறகே மலர்வதனிக்கு முன்தினம் நர்ஸ் ரீமாவிடம் கொடுத்திருந்த பையின் நினைவு வந்தது. அதனால் வண்டியை அங்கே விடச் சொன்னாள். ஆட்டோ ஓட்டுனர் வெயிட்டிங் நிற்க முடியாது என்றதால் பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு மருத்துவமனைக்குள் சென்று ரீமாவிடம் கொடுத்திருந்த பையை பெற்றுக்கொண்டு, அவள் வந்தது பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று வாக்கு வாங்கிக் கொண்டாள்.
மருத்துவமனைக்குள் நோயாளியை இறக்கிவிட்டு திரும்பிய வேறு ஒரு ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையம் சென்ற மலர்வதனி...ஏற்கனவே பயணச்சீட்டு வாங்கி விட்டிருந்ததால் பிரதான வாயிலிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டாள்.
☆☆☆
நிரஞ்சன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். திடுமென அவனது கைப்பேசி ஒலிக்கவும், திடுக்கிட்டு விழித்தான். ஆனால் அவனுக்கு சுற்றுப்புறத்தை உணர சிலகணங்கள் பிடித்தது. அதற்குள்ளாக மணி ஒலித்து அடங்கி, மீண்டும் ஒலிக்கத் தொடங்க, சட்டென்று எழுந்து போய் எடுத்து பார்த்துவிட்டு, காதுக்கு கொடுத்தான், "என்னாச்சு? என்றதும் எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில் வெகுவாக அதிர்ந்தவன், உடனடியாக கைக்கு கிடைத்த ஒரு டிஷர்ட்டை எடுத்து, விரைவாக உடையை மாற்றியபடியே உத்தரவுகளை பிறப்பித்தான்.
அவசரகதியில் முகம் அலம்பிவிட்டு, ஓட்டமும் நடையுமாக போர்டிகோவிற்கு வந்தபோது அங்கே கார் இல்லை. உடனே பணியாளை விளித்து பைக் சாவியை எடுத்துவரச் சொல்லிவிட்டு வாகனத்திடம் ஓடிப்போனான்.
☆☆☆
அவள் போக்கில் விட்டு பிடிக்கலாம் என்று எண்ணினால், இப்படி மொத்தமாக மோசம் செய்யத் துணிவாள் என்று அவன் கொஞ்சமும் எண்ணவில்லை. இப்போது அவள் கிடைப்பாளா என்று தவிப்பாக இருந்தது.
இத்தனை காலமாக அவன் செய்து வைத்திருந்த குளறுபடியால் மாமன் மகளிடம் இயல்பாக பேசிப் பழக அவனுக்கு துணிவில்லை. ஆகவே தான் அவளுடன் பழகும் வகை தெரியாமல் குழம்பியிருந்தான். அப்போது தான் அன்னையிடம் அவளைப் பற்றி பேசினான். அன்னை தெரிவித்த விஷயங்கள் கொஞ்சமே என்றாலும் அதில் முக்கியமானது மலர்வதனியின் படிப்பு. அதனால் அவளை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். இடையில் இந்த விபத்து நேர்ந்த காரணத்தால் அந்த வேலை சற்று தாமதமான போதும், ஜாஸ்மின் அந்தப் பணியை ஏற்று, அன்று காலையில் தான் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு சென்று, மலர்வதனியின் சான்றிதழ்களை காட்டி, சேருவதற்கான விதிமுறைகளை எல்லாம் கேட்டு வந்து தெரிவித்தாள். அதை சொல்லத்தான் அவன் மதியமே வீடு வந்ததும். அவன் வந்த சமயம் மலர்வதனி தூங்கப் போனதாக தெரியவும், மாலையில் அவளை தடுக்கும் விதமாக அந்த விஷயத்தை தெரிவிக்க நினைத்திருந்தான். இப்போது எல்லாம் கனவாகிப் போகுமோ என்று கலங்கினான்.

காலையிலேயே அவனுக்கு உள்ளூர மலர்வதனி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிடுவாளோ என்று ஒரு சின்ன கலக்கம் உண்டாகி இருந்ததால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, முதல் வேலையாக மலர்வதனியை கண்காணிக்க துப்பறியும் நிறுவனத்திடம் இரண்டு ஆட்களை அனுப்பச் சொல்லியிருந்தான். அதன்படி இன்று காலை முதல் அவர்கள் அவளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். இப்போது அதன் விளைவாகவே அவள் கிளம்பிய செய்தி கிடைத்திருந்தது. ஆனால் என்ன ஒன்று அவள் ஏறிச் சென்றபோது கண்காணித்த ஆளிடம் வாகனம் இருக்கவில்லை. வீட்டின் முன் பகுதியில் இருந்த இன்னொரு ஆளிடம்தான் கார் இருந்தது. இருவருமாக இணைந்து கிளம்ப முடியாமல் ஒருவர் மட்டுமே தொடர்ந்து செல்ல, அடுத்த ஆளை அழைத்துக்கொண்டு நிரஞ்சன் பேருந்து நிலையம் விரைந்தான். ஆனால் அவர்கள் அங்கே சென்று சேர்ந்த போது மலர்வதனி எங்கேயும் தென்படவில்லை.
நிரஞ்சன் உண்மையில் வெகுவாக கலங்கிப் போனான். அங்கே அன்னையை எப்படி சமாளிப்பது? இன்னும் என்று மேலே யோசித்தவாறு எதிர்திசையில் பார்த்தவனின் விழிகள் பிரகாசமானது. மலர்வதனி அப்போதுதான் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். அவன் சென்று அழைத்தால் மறுத்து பொது இடத்தில் ராசாபாசமாகிவிடும் என்று தோன்ற ஒரு திட்டத்துடன் அவளை தொடர்ந்து சென்றான்.
☆☆☆
மலர்வதனிக்கு தன்னை யாரும் தொடரக்கூடும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாததால் பதற்றமில்லாமல், அவள் ஏற வேண்டிய பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்று நின்றாள். சட்டென நினைவு வந்தவளாக கைப்பேசியை எடுத்து சைலண்ட் மோடில் வைத்து பைக்குள் போட்டுக் கொண்டாள். அவளது அத்தை போன் செய்து அவள் எடுக்காவிட்டால் கூட அத்தனை கலங்க மாட்டாள். ஆனால் இணைப்பு கிடைக்காமல் போனால் துடித்துப் போவாள்... இப்போது அவள் காணாமல் போனதை அறியும் போது, அத்தை எப்படி தாங்கப் போகிறாளோ என்று தவிப்பாக இருந்தது. அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று மனதார வேண்டிக் கொண்டபோது...இனி அத்தையை பார்க்க முடியாது என்ற நினைப்பும் சேர விழிகள் கலங்கியது. பொது இடம் என்று உணர்ந்து கண்ணீரை கைக்குட்டையால் துடைத்தபடி, பேருந்து வரும் திசையை பார்த்தாள்.
அப்போது திடுமென மலர்வதனியின் கைப்பையை ஒரு பதினைந்து வயது சிறுவன் பறித்துக்கொண்டு ஓடினான். ஒருகணம் ஸ்தம்பித்தவள், சுதாரித்து "ஏய்... கத்தியபடியே அவனை தொரத்திக்கொண்டு ஒடினாள். அக்கம்பக்கத்தினர் ஒரிருவர் திரும்பிப் பார்த்தனரே தவிர யாரும் உதவ முன் வரவில்லை. துரத்தி சென்றவள், பையை கைப்பற்றி, அவனை எச்சரித்து அனுப்பிக் கொண்டிருந்த, நிரஞ்சனை பார்த்து ஒருகணம் ஆசுவாசம் ஆனாள். ஆனால் உடனேயே இவன் எங்கே திடீரென்று இங்கே வந்தான்? என்று திகைத்து நின்றாள்.

அதற்குள்ளாக அவளை அணுகி,"வதனி" என்ற அழைப்பில் நிகழ்வுக்கு திரும்பிய மலர்வதனி"நீ இங்கே என்ன பண்றே? என்று தொடர்ந்து கேட்டதும் தான், அவள் அங்கே வந்த காரணம் நினைவு வந்தது.

"நேற்றே சொன்னேனே? என்று முகமும் குரலும் இறுகக் கூறியவள்,அவளது கைப்பை இன்னமும் அவன் கையில் இருப்பதை கவனித்து,"அதை கொடுங்க, எனக்கு நேரமாகிறது" என்று கையை நீட்டினாள்.

"வதனி, இப்போது நீ என்னோடு வா. எனக்கு உன்னிடம் சற்று பேசவேண்டும். நான் சொல்வதை கேட்ட பிறகும், நீ போயே ஆகவேண்டும் என்றால் நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்" என்றவாறு கைப்பையை அவளிடம் கொடுத்தான் நிரஞ்சன்.

"இன்னும் என்ன பேசுவது? பேசுவதற்கு எதுவும் இருப்பதாக அவளுக்கும் தோன்றவில்லை. மறுபடியும் அவளை போகவேண்டாம் என்று தடுக்க, அத்தையை தான் காரணம் காட்டுவான். ஆனால் அத்தைக்காகக் கூட அவள் திரும்பப் போக முடியாதே, பாட்டியிடம் வாக்கு கொடுத்துவிட்டாளே, அதை எல்லாம் என்னவென்று இவனிடம் விளக்குவது?அவன் என்ன சொன்னாலும் அவள் ஏற்கப்போவதில்லை. இதையே அவன் மிரட்டியோ அதட்டியோ கேட்டிருந்தால் அவள் திடமாக மறுத்திருப்பாள். ஆனால் தன்மையாக கேட்கும்போது, முகத்தில் அறைந்தார் போல பேசமுடியவில்லை.

"சரி பேசலாம். ஆனால் வீட்டில் போய் பேசுவது என்றால் நான் வரவில்லை என்றாள் மலர்வதனி.

அந்த மட்டில் அவள் சம்மதித்ததே போதும் என்று நிம்மதி பெற்றவனாக,"இல்லை வதனி, அங்கே உன்னை அழைத்து போகவில்லை. கோவிலுக்கு போகலாம்"என்றதும் ஏனோ

மலர்வதனிக்கு மனதுக்குள் என்னவோ செய்ய, மேலே பேசாமல் அவனுடன் சென்றாள்.
கோவிலில் கூட்டம் அதிகமில்லை. பேசுவதற்கு வந்தபோதும் கடவுளை வணங்கிய பிறகே, சற்று ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தனர்.
சிலகணங்கள் எப்படி தொடங்குவது என்று திணறிவிட்டு,பிறகு "மதியம் நீ சாப்பிட்டாயா வதனி? என்று கேட்டான்.

என்னவோ பேசவேண்டும் என்றுவிட்டு இதென்ன சம்பந்தமே இல்லாத கேள்வி என்று எண்ணிய போதும், "சாப்பிட்டேன்"என்று உரியவிதமாக பதில் சொன்னாள்.

"வதனி, உன்னை பற்றிய சில விஷயங்கள் எனக்கு தாமதமாகத்தான் தெரிய வந்தது. உனக்கு டாக்டராக விருப்பம் என்று அம்மா சொன்னாங்க. இத்தனை வசதிகள் இருந்தும் நீ சொல்லாமல் விட்டுவிட்டாயே? என்றான் வருத்தமான குரலில்.

"அந்த வசதி எதுவும் எனக்கு சொந்தமில்லையே. நான் வருத்தபடவும் இல்லை. அது முடிந்து போன கதை. இப்போது எதற்கு? என்றாள்.

"உனக்கு மருத்துவ கல்லூரி ஒன்றில் சேருவதற்கு நுழைவுத் தேர்வுக்கான படிவத்தை வாங்கியாயிற்று வதனி. அதனால் நீ அதை ஏற்று படிக்க ஒப்புக்கொள்ள வேண்டும். உன் அத்தையோட ஆசை, என்னோட ஆசையும் அதுதான்....
"அன்றைக்கு நீ டாக்டர் அறையில் இருந்து சென்றுவிட்ட பிறகு, அவர் ஒரு விஷயம் சொன்னார். அதிர்ச்சியான எந்த விஷயமும் அது அதிக சந்தோஷமோ துக்கமோ சொல்லக்கூடாது என்றார். அதைச் சொன்னால் அதையே நினைத்து நீ வருந்துவாய் என்றுதான் சொல்லவில்லை. இப்போது சொல்வதற்கு காரணம் உனக்கு புரிகிறதல்லவா வதனி? உன்னை பிரிந்தால் அம்மா உயிரோடு இருக்க மாட்டார்கள் வதனி"

"ஐயோ அத்தான் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று அவள் கண்ணீருடன் பதற, அதை கேளாதது போல பாவித்து..... தொடர்ந்து பேசினான் நிரஞ்சன்.

"எனக்கு இத்தனை வருடங்களுக்கு பிறகு அம்மாவின் அருமை தெரிந்திருக்கிறது வதனி, அவர்களும் என் அன்பிற்காக ஏங்கியிருக்கிறார்கள். அதனால் எனக்காக என் அம்மா இன்னும் சிலகாலம் வாழவேண்டும். இத்தனை காலம் கொடுக்கத் தவறிய அன்பையும் அரவணைப்பையும் கொடுக்க ஆசைப்படுகிறேன் வதனி. ப்ளீஸ் என் அம்மாவை பிரித்து விடாதே மா.. நீ அந்த வீட்டில் இருக்க வேண்டாம். இந்த ஊருக்குள் இருந்தால் போதும்.. அதாவது அம்மாவின் பார்வையில் படுகிறபடி .. எனக்கு இதை தவிர வேறு வழியும் தெரியவில்லை வதனி" என்ற நிரஞ்சனின் குரல் கரகரத்தது... கண்களும் கூட கலங்கி சிவந்து போயிற்று.

மலர்வதனி பேச்சற்றுப் போனாள். இப்படி கேட்கும்போது அவளால் எங்ஙனம் மறுக்க இயலும்? அதுவும் அவன் சொன்னது யாவும் சத்தியமே. மருத்துவர் குறிப்பிட்டதாக சொன்னது மிகையாக இருந்தாலும், அத்தையின் இதயம் பலகீனமாக இருப்பதாக சொன்னதை அவளே கேட்டிருப்பதால்.. நம்பாமல் இருக்க முடியாது. ஊருக்குள் இருக்க வேண்டும் என்கிறானே? பாட்டிக்கு தெரிந்தால்... அவள் யோசிப்பதைப் பார்த்து,

"நான் அம்மாவுக்காக மட்டுமாக உன்னை இருக்கச் சொல்லவில்லை. எனக்காகவும்தான் வதனி. அம்மாவையும் உன்னையும் நான் ரொம்ப காயப்படுத்திவிட்டேன். நீ என் சொந்த மாமன் மகள். அதை நான் ஊர் அறியும்படி செய்வேன். அதற்கும் நீ இந்த ஊரில் இருப்பது அவசியம் வதனி. அதனால்தான் நீ இங்கே இருந்தே ஆகவேண்டும் என்று நான் உன்னிடத்தில் வேண்டுகிறேன் வதனி. முடிவு உன் கையில் தான். உனக்கு இன்னமும் போகத்தான் வேண்டும் என்றால் சொல், உன்னை இன்று இரவே பஸ் ஏற்றிவிடுகிறேன்" என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.

மலர்வதனிக்கு மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை. அன்னையும் பிதாவுமாக வளர்த்த அத்தையின் உயிரை விட இந்த உலகில் வேறு எதுவுமே பெரிதில்லை என்று தோன்றியது. அதையே உரைத்து அவளது முடிவை மாற்றிக்கொள்ள சம்மதம் சொன்னதும்,"ரொம்ப நன்றி வதனி" என்ற நிரஞ்சன் உணர்ச்சிவசப்பட்டு, சட்டென்று அவளது கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக்கொள்ள, கைகளில் ஈரத்தை உணர்ந்து ஒருகணம் பிரமித்துப்போனாள்.

யாரோ கோவில் மணியை அடிக்க, அந்த ஒலியில் சுற்றுப்புறம் உணர்ந்தவனாக மெல்ல கைகளை விடுவித்துவிட்டு எழுந்து கொண்டு "உனக்கு ஒரு அதிசயத்தை காட்டப்போகிறேன், சொல்லப்போனால், அதை சொல்லி உன்னை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். என்றாலும் அது எனக்கு அத்தனை உவப்பாக இல்லை,என்றுவிட்டு"சரி போகலாம் வா"என்ற நிரஞ்சனின் இதழில் சிரிப்பொன்று மலர்ந்தது...

கூடவே எழுந்த அவளும்,புரியாமல் அவனை பார்த்தாள்...

*அத்தியாயம் – 41*

நிரஞ்சனுடன் பைக்கில் பயணித்தபோது மலர்வதனி வீட்டில் இருந்து கிளம்பி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்த நேரத்தை கணக்கிட்டு பார்த்தாள். அதற்குள்ளாக அத்தான் அங்கே வருவது என்றால் அவளை பின் தொடர்ந்து வந்திருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் அப்படியே வைத்துக்கொண்டாலும்,தொடர்ந்து வருவானேன்? அங்கேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே? அந்த பையன் அவளது பையை பறித்ததும் கூட இந்த அத்தான் நடத்திய நாடகம் தான் என்பது தெளிவு. எல்லாம் எதற்காக? அவனது அன்னைக்காகவா? இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது அப்படி திடுமென என்ன ஞானோதயம் வந்துவிட்டது? இப்போது எங்கே அழைத்து போகிறான் என்றும் சொல்லவில்லை. ஏதோ புதையலை காட்டப் போவது போல பில்டப் வேறு.. பாட்டி மட்டும் வித்தியாசம் காட்டாமல் அவளிடம் நடக்கிறாள் என்றால் தான் அதிசயமே தவிர, இந்த உலகில் அவளுக்கு வேறு எதுவும் அதிசயம் இல்லை.

"இறங்கு வதனி",என்ற நிரஞ்சன் சொன்னப் பிறகே வண்டி நின்றுவிட்டதை உணர்ந்தாள். இறங்கியபடியே சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள் மலர்வதனி. அது புறநகர் பகுதி. புதிதாக ஆங்காங்கே நேர்த்தியாக எழும்பியிருந்த அப்பார்ட்மென்ட் குடியிருப்புகள்.. ஒரு புறம் பூங்கா. அதில் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்குமரம்... இன்னும் கூட சிலது இருந்தது. இன்னொரு புறம் நீச்சல்குளம், எங்கும் பசேல் என்று புள்வெளி.. எல்லாவற்றிற்றகும் வேலி போடப்பட்டிருந்தது. அது தனி உலகம் போல காணப்பட்டது.

"வா வதனி உள்ளே போகலாம்" என்று நிரஞ்சன் அழைக்க, பின்னோடு சென்றாள். முதல் தளத்தில் இருந்த ஒரு வீட்டின் முன்னே நின்று அழைப்பு மணியை அழுத்தினான். சுற்றிலும் பார்த்துக்கொண்டு நின்ற மலர்வதனி, கதவு திறக்கும் அரவம் கேட்டு திரும்பினாள். அங்கே ஜாஸ்மின்னை கண்டு ஆச்சரியப்பட்டாள். இவள் இங்கே என்ன செய்கிறாள்? என்று யோசித்தவளுக்கு, ஏதேதோ சிந்தனைகள் தாறுமாறாக மனதுக்குள் ஓட திகைத்து நின்றுவிட்டாள்.

"ஏய், வதனி, நீ நினைக்கிறபடி எதுவும் இல்லை. அப்படி ஒருநாளும் நடக்கவும் நடக்காது" என்ற நிரஞ்சன் அவளது கரத்தை பற்றி உள்ளே அழைத்துப் போனான்.

அவன் சொன்னதை கேட்டு மேலும் திகைப்பாக இருந்தது. வீட்டின் உள்ளே சென்ற போது பெரிய கூடத்தில் ஒருபுறம் சுவற்றில் தொலைகாட்சி பொருத்தப்பட்டிருக்க, இன்னொரு புறம் அதை பார்க்க ஏதுவாக சோபாக்கள்.. ஒரு சோபாவிலிருந்து எழுந்து நின்ற உயரமான மனிதரைப் பார்த்த மலர்வதனியின் கைகளில் இருந்தவை தவறி விழ.. "அப்பா" என்று உதடுகள் ஓசை இன்றி உரைக்க, அப்படியே நின்று போனாள்.
விஸ்வநாதன் சட்டென்று இரண்டே எட்டில் மகளை அடைந்து அரவணைத்துக் கொள்ள, விசும்பலுடன் அவரது மார்பில் சாய்ந்தாள் மலர்வதனி. ஆறுதலாக முதுகை வருடியபடி அவரும் கண்கள் கலங்க பேச்சற்று நின்றார். தந்தை மகளின் பாசப்பிணைப்பை பார்த்து நின்ற மற்ற இருவருக்கும் ஒருவித நிம்மதி உண்டாயிற்று.

ஒருவாறு அப்பாவும் மகளும் இயல்புக்கு திரும்பினர். ஆனாலும் சட்டென்று பேச முடியாமல் மௌனம் அவர்களை கட்டிப் போட்டிருந்தது. ஒரு இருக்கையில் மகளை அமர்த்தி தானும் அருகில் அமர்ந்தார் விஸ்வநாதன். மலர்வதனியின் மறுபுறம் நிரஞ்சன் அமர்ந்தான்

உண்மையில் மலர்வதனிக்கு உள்ளூர சிறுவியப்பு உண்டாயிற்று. வரும் வழியில் ஏதோ புதையலை காட்டப் போவது போல அத்தான் சொல்கிறானே என்று அவள் எண்ணியது போல, அவளுக்கு தந்தை கிடைத்தது புதையலே தானே? மிகுந்த சந்தோஷத்தில் பேச்சு வராது என்று கேள்விப்பட்டிருந்தாள், இன்றைக்கு அவள் அந்த நிலையை உணர்ந்து அறிந்தாள். எத்தனையோ கேள்விகள் கேட்க நினைத்தும் முடியவில்லையே..

"அக்கா, உனக்கு நிறைய பேச வேண்டியிருக்கும், அதை எல்லாம் நிதானமாக எல்லோரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் " என்று ஜாஸ்மின் அனைவருக்கும் சாப்பிட சிற்றுண்டி எடுத்து வந்து பரிமாறினாள்.

"அக்காவா? எந்த வகையில்? என்று மனதில் நினைத்தபோதும் அதைப் பற்றி கேட்கவில்லை. அத்துடன் கோவிலில் வைத்து ஏதேதோ காரணத்தை சொல்லி அழைத்துக்கொண்டு வந்த அத்தான் இப்போது மௌனச் சாமி ஆகிவிட்டானே? இதென்ன வருங்கால மனைவி இருக்கும்போது அவளை ஒட்டிக்கொண்டு அமர்ந்து இருக்கிறானே? ஏன்?

அவள் யோசனையில் இருப்பதை கவனித்துவிட்டு, "அக்கா, தைரியமாக சாப்பிடலாம். எனக்கு உன்னளவு சமையல் எல்லாம் தெரியாது என்பதால் அதை நான் செய்யவில்லை. கடையில் இருந்து தருவித்தது தான்"என்று ஒரு தட்டை எடுத்துக் கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

"உன் அக்கா இதை பார்த்து எல்லாம் பயப்படவில்லை மல்லிகா, அவளுக்கு நீ எப்படி தங்கை ஆனாய் என்று குழப்பம். அப்புறம் கட்டிக்கொள்ள போகிறவளை வைத்துக்கொண்டு அத்தான் நம் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறானே என்று அது வேறு குழப்பம்"என்றதும்,

மலர்வதனி உண்மையிலேயே மிரண்டு போனாள். மனதில் நினைத்ததை எப்படித்தான் இந்த அத்தான் புட்டுப்புட்டு வைக்கிறானோ? கூடவே மல்லிகாவா? ஜாஸ்மின் திடீரென எப்படி மல்லிகாவானாள்? என்று குழம்ப,

"நியாயமான குழப்பம் தானே மருமகனே? என்று அதுவரை மௌனமாக இருந்த விஸ்வநாதன் பேசவும், மலர்வதனிக்கு, சுழலுக்குள் சிக்கிவிட்டார் போலிருந்தது. இதென்ன அப்பா எல்லாம் அறிந்தவர் போல பேசுகிறாரே? என்று நினைத்தவளிடம் ஒரு சிற்றுண்டி தட்டை எடுத்து கொடுத்து,"முதலில் நீ இதை சாப்பிடு வதனி, உனக்கு மாமா எல்லாம் விவரமாக சொல்வார்"என்று சமாதானம் செய்யும் விதமாக சொன்னான் நிரஞ்சன்.

மறுக்காமல் வாங்கிக் கொண்ட மலர்வதனி மௌனமாக சாப்பிடச் தொடங்கினாள்.
"இன்னும் எதற்கு சஸ்பென்ஸ்? எல்லாம் சொல்லிவிடுங்களேன் டாட்"என்றாள் மல்லிகா.

"டாட்? அப்படி என்றால் என்று மலர்வதனி மேற்கொண்டு யோசிக்குமுன்,"நீ நினைப்பது போல் எதுவும் இல்லை வதனி,"என்றான் இதமான குரலில்...

"அடேங்கப்பா, அக்கா நினைக்கிறதை உடனுக்குடன், கண்டுபிடிச்சிடறாரே டாட், உங்க மருமகன்"என்று சிலாகித்தாள் மல்லிகா.

"ம்ம்..., அயல்நாட்டில் போய் தொழில் நடத்துகிறான் என்றால் சும்மாவா மல்லி? என்ற விஸ்வநாதன்,"இதற்கு மேல் என் மகளை குழப்ப நான் தயாரில்லை, என்றதும்

"எனக்கும் தான் மாமா, என்ற நிரஞ்சன் சொல்லத் தொடங்கினான்.

☆☆☆

எட்டு மாதங்களுக்கு முன்பு...

நிரஞ்சன் வெளிநாடு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியிருந்தது. அப்போது ஒருநாள்..

நிரஞ்சன் தொழில் நடக்கும் இடத்தில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அவனது மேனேஜர் சாரகேஷ், வந்து,"தெரிந்தவர் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது, அவசரமாக போக வேண்டுமென்று கேட்டான். சரி என்று அனுப்பி வைத்தான்.

மறு நாள் வேலைக்கு வந்த சாரகேஷிடம் அந்த நோயாளி எப்படி இருக்கிறார்? பிழைத்துக் கொண்டாரா?என்று விசாரித்தான் நிரஞ்சன்.
தலையை குனிந்து கொண்டு, "மன்னிக்க வேண்டும் சார்"என்றான் சாரகேஷ்.

"என்னாச்சு சாரகேஷ்? உன்னால் சரியான நேரத்திற்கு போய் சேர முடியவில்லையா? "

"அது.. நான் சரியான நேரத்தில் போனதால் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் நான் ரத்தம் கொடுக்க போவதாக சொன்னது பொய் சார்"

"கொஞ்சம் புரியும்படியாக சொல் சாரகேஷ்"என்றான்.

"ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பணக்கார வீட்டு பெண் சார். என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுவதாக சொன்னாள். நான் இப்போது தான் பணியில் சேர்ந்து இருக்கிறேன். ஊரில் திருமண வயதில் தங்கை இருக்கிறாள். அப்பா வைத்துவிட்டு போன கடன் கொஞ்சம் இருக்கிறது. அதெல்லாம் முடித்தபின் தான் என் கல்யாணம் பற்றி நான் சிந்திக்க முடியும், அத்தோடு அவளுக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது என்று சொல்லி மறுத்து விட்டேன். ஆனால் அவள் அதை எல்லாம் கருத்திலேயே கொள்ளாமல் பிடிவாதமாக என்னையே சுற்றி வந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது நேற்றைக்கு முன்தினம்,மாலையில் நான் பணி முடிந்து என் அறைக்கு சென்று கொண்டிருந்த போது அவள் வந்து, வீட்டில் வரன் பார்த்து இருக்கிறார்கள். என் மனதில் நீதான் இருக்கிறாய். அதனால் இன்றைக்கு எனக்கு இறுதியாக ஒரு பதில் சொல்லு, என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லையா? என்று கேட்டாள். நான்,"அது ஒருநாளும் நடக்கப்போவது இல்லை" என்று சொன்னதும்,

"சரி உன் முடிவை நீ சொல்லிவிட்டாய் என் முடிவை கேட்டுக் கொள், கடைசியாக என்னை மணக்க உனக்கு சம்மதம் என்றால் நாளை காலையில் பதினொரு மணிக்கு என் வீட்டு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நீ வா. இல்லாவிட்டால் என்னோட மரணச் செய்தி உனக்கு வரும்"என்று சொல்லி போய்விட்டாள்.

"எனக்கு இரவெல்லாம் உறக்கமே வரவில்லை. என்னோட கடமைகளை முடித்துவிட்டு கல்யாணம் பண்ணிக் கொள்வது என்றாலும் அந்தஸ்து பேதம் தான் என்னை மிகவும் மிரட்டியது. காலையில் நான் வேலைக்கு கிளம்பி வந்துவிட்டேன். ஆனால் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் சொன்ன நேரம் நெருங்க நெருங்க என் மனம் புரிந்து போயிற்று சார். அப்போது எல்லாம் விளக்கி சொல்ல அவகாசம் இல்லாததால் பொய் சொல்லிவிட்டேன். அங்கே பூங்காவில் அவளை தேடி கண்டுபிடிப்பதற்குள் நான் தவித்த தவிப்பு இருக்கிறதே, அய்யோ யாருக்கும் அந்த சோதனை வரக்கூடாது சார். ஒருவழியாக நான் அவளை கண்டபோது, அழுதபடி கையில் விஷப்பாட்டிலை திறந்து கொண்டிருந்தாள். பாய்ந்து சென்று அதை பிடுங்கி தூர எறிந்த பிறகு தான் நான் வந்ததையே அவள் கவனித்தாள். என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள் சார் என்று மீண்டும் மன்னிப்பு கேட்டு நிறுத்தினான் சாரகேஷ்.

நிரஞ்சனுக்கு ஏதோ பரபரப்பான சினிமா பார்த்தது போன்ற உணர்வு உண்டாயிற்று. அந்த பெண்ணிடம் வியப்பும் தான். ஒன்றும் இல்லாதவன் என்று அறிந்த பின்னும் அவனையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள் என்றால் அவன் மீது அவளுக்குத்தான் எவ்வளவு அன்பு? என்று மனம் சிலாகிக்க, சாரகேஷின் தோளில் தட்டிகொடுத்து,"இட்ஸ் ஓகே! பட் ரியலி வெரி இன்ட்ரஸ்டிங் சாரகேஷ். யூ ஆர் வெரி லக்கி மேன்"என்று பாராட்டிவிட்டு, உங்கள் கல்யாணம் என் பொறுப்பு. நானே வந்து பெண்ணோட அப்பாவிடம் பேசுகிறேன்"என்று தைரியம் சொன்னான்.

அதன்படி சில தினங்களுக்கு பிறகு நிரஞ்சனை அழைத்து கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு போனான் சாரகேஷ்.

அங்கே அந்தப் பெண்ணே வந்து உற்சாகமாக வரவேற்றாள். அவள் தான் மல்லிகா என்கிற ஜாஸ்மின். நிரஞ்சனைப் பார்த்ததும் அவளுக்கு தந்தையின் இளம் பிராயத்து தோற்றம் நினைவு வந்தது. ஒருவரை போல ஏழு பேர் இருப்பார்கள் என்கிறார்களே அப்படியிருக்கலாம் என்று எண்ணிவிட்டு, உடனே சுதாரித்து, அவளது அப்பா சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று இருவரையும் அமர வைத்து உபசரித்தாள், என்று சொல்லிக்கொண்டு வந்த நிரஞ்சன் நிறுத்தி, மணியை பார்த்தான், தொடர்ந்து,"இந்நேரத்தில் அங்கே அம்மா வதனியை தேடிக்கொண்டு இருப்பார்கள் மாமா என்னையும் தான். அதனால் இப்போது நான் கிளம்பினால் தான் வீட்டிற்கு தாமதமின்றி போய்சேரமுடியும், மீதிக்கதையை நீங்களே அவளுக்கு சொல்லுங்கள்"என்றவாறு எழுந்தான் நிரஞ்சன்.

"அப்பாவும் மகளும் பல வருஷங்களுக்கு பிறகு சந்தித்திருக்கிறார்கள். மனம்விட்டு பேசட்டும். நான் உன்னோடு ஸாரி உங்களோடு வருகிறேன் நிரஞ்சன்" என்ற மல்லிகா நாளை சந்திப்போம் என்று அவனோடு கிளம்பிச் செல்ல..

ஜாஸ்மின் இல்லை இல்லை, மல்லிகா அத்தானுடைய காதலி இல்லை என்ற செய்தியை கேட்ட மலர்வதனிக்கு உலகமே அழகாக மாறிவிட்டாற் போலிருந்தது. துள்ளி குதித்து ஆடவேண்டும் போல தீவிரமாக எழுந்த எண்ணத்தில் அவளே ஒருகணம் திகைத்து விட்டாள். அப்படி எல்லாம் திடுமென செய்து வைத்தால், இத்தனை காலத்திற்கு பிறகு பார்த்ததில் மகளுக்கு மறை கழன்று போய்விட்டதோ என அப்பா கலங்கிப்போவார்,என்று நினைத்தவள், ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நடப்பிற்கு வந்து,"அப்புறம் என்னவாயிற்று அப்பா? நீங்கள் எப்படி பிழைத்து வந்தீர்கள்? பிறகு வெளிநாட்டிற்கு எப்போது போனீர்கள்? ஏன் என்னை தேடி வரவில்லை அப்பா? என்றபோது மலர்வதனியின் குரல் தழுதழுத்தது..

மகள் வருந்துவது தாங்காமல் விஸ்வநாதன், மகளின் கையை பற்றி தட்டி கொடுத்துவிட்ட, அவரது கதையை தொடர்ந்தார்...

































































 
Back
Top