Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

19. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மகேந்திரன் மனதில் இருந்து மகதியை நீக்கப்போவதை எண்ணி அன்றைய இரவு மதுமதிக்கு உறக்கம் வர மறுத்தது. அவள் போட்டிருக்கும் திட்டம் அப்படிப்பட்டது. அவன் முன் தினம் அன்னையோடு மகதியை கொணர்ந்து இறக்கிவிட்ட போது தான் அன்னை அன்றைக்கு சும்மா அவளை வெறுப்பேற்ற அப்படி சொல்லவில்லை. நிஜமாகவே அவள் மகதியை மகேந்திரனுக்கே கட்டி வைக்க தீர்மனித்திருக்கிறாள் என்பது தெளிவாயிற்று.

அதன் பிறகு அவள் நிறைய யோசித்து மகதியை அகற்றிவிட்டு அவள் மகேந்திரனுக்கு மனைவி ஆவதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு திட்டம் போட்டாள். அதன்படி தான் இன்றைக்கு முதல் கட்டத்தை அரங்கேற்றினாள். அந்த மகேந்திரனுக்கு ருசு வேண்டுமாமே. அதையும் அவள் அப்போதே திட்டமிட்டாள்.

அதற்காக வரும்வழியில் அழகு நிலையம் சென்று சில மாற்றங்களை செய்து கொண்டு வந்திருந்தாள். ரொம்பவும் அதிசயமாக அம்மா அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை வீட்டில் மகதி பத்திரமாக இருப்பதால் பயமில்லை போலும். வழக்கமாக அம்மா முன் சற்று எச்சரிக்கையோடு தான் இருப்பாள்.

மறுநாள் நடத்தவிருந்த திட்டத்திலேயே மனது தீவிரமாக இருந்ததால் மோனீஷிடம் பேசும்போது வாயை விட்டாள். அதை கவனித்து மாலதி கேள்வி கேட்டபிறகே அவளுக்கு தன் தவறு புரிந்தது. எப்படியோ சமாளித்து விட்டாள் தான். அம்மா நம்பினாளா இல்லையா என்று தெரியாத போதும், அவளது திட்டம் பற்றி அம்மாவால் யூகிக்ககூட முடியாது என்று எண்ணினாள். யோசனையில் நேரத்தை கழித்துவிட்டு ஒருவாறாக அவள் தூங்க நல்லிரவு தாண்டி விட்டிருந்தது.

மறுநாள்... அதிகாலையில் மதனகோபால், அவரது ரெஸ்டாரண்ட்டின் புதிய கிளை தொடங்கும் விஷயமாக பாண்டிச்சேரி கிளம்பிச் சென்று விட்டதால், மாலதியும் மகதியும் ஒன்பது மணிக்கு முன்பாகவே கால் டாக்ஸியை வரவழைத்து கிளம்பி விட்டனர். அதுவரையிலும் மதுமதி எழுந்து வராததால், பணியாளரிடம், மகள் அவர்களை பற்றி விசாரித்தால், வேண்டுதல் நிறைவேற்ற இருவரும் மலைகோவிலுக்கு போய் இருப்பதாக தெரிவிக்கச் சொன்னாள் மாலதி.

குறிப்பிட்ட இடத்தில் மகேந்திரன் காருடன் நின்றிருக்க, கால் டாக்ஸியை அனுப்பிவிட்டு அவனது காரில் இருவரும் ஏறிக்கொள்ள, அவனது வீட்டை நோக்கி பயணமானார்கள். வீட்டை அடைந்ததும், மங்களம் ஆரத்தி எடுத்து மகதியை உள்ளே அழைத்தார்.

"அண்ணி இப்போதே ஆரத்தி எல்லாம் எதற்கு? இன்னும் நிச்சயதார்த்தம் கூட முடியவில்லையே? என்று மாலதி வினவ,

"அதெல்லாம் ஊருக்காக அண்ணி. எப்போது என் மகன் உங்கள் பெண்ணை பிடித்ததாக சொன்னானோ அப்போதிருந்தே இவள் என் மருமகள் தான்," என்று மகதியை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, இருவரையும் அமரச் சொல்லி அவரும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

மகதியின் விழிகள் ரகசியமாக மகேந்திரனை நோக்க, கைகளை கட்டிக்கொண்டு இலகுவாக ஜன்னலில் சாய்ந்து நின்றிருந்தவன், அவளது பார்வையை சந்திக்கவும் புன்னகை விரிய ஒன்றை புருவம் உயர்த்தி என்ன என்று வினவ, சட்டென்று சிவந்த முகத்தை திருப்பிக்கொள்ள, பாரதது போல பார்த்திருந்த இரண்டு பெண்மணிகளும் முகத்தில் குறுநகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மகேந்திரன் மகதியை சகஜமாக்க எண்ணியவனாக, "அம்மா உங்கள் மருமகள் வந்ததும் என்னை மறந்து போனீர்களே?" என்றான்.

"உன்னை நான் எப்போதடா மறந்தேன்??

"ம்க்கும், பசியோடு இருப்பாயடா மகேன், சீக்கிரம் வந்து சாப்பிடுனு எட்டு மணிக்கே சொல்றவங்க, இன்னிக்கு சாப்பாடு பத்தி யோசிப்பதாக கூட காணோமே?? என்றான் சோகமாக.

"போடா டிராமா, டிபனை வைத்துக்கொண்டு நூறு தடவை கூப்பிட்டு அப்புறமாக வருகிறவன் பேசுவதை பாருங்கள்" என்றவர் எழுந்து,"சரி கிளம்ப வேண்டுமே, வாருங்கள் டிபன் சாப்பிடலாம்" என்று உள்ளே நடக்க, அவரை தொடர்ந்து மாலதி சென்றாள்.

பின்னோடு செல்ல இருந்த மகதியை பற்றி இழுத்து கைவளைவில் கொணர்ந்து,"ஒவ்வொரு தடவையும் நீ எனக்கு புதுசா தெரியறே மதி"என்று அவளது காதோரம் கிசுகிசுக்க, அவனது முதல் அணைப்பிலும், பெரியவர்கள் வந்துவிட்டால் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தவிப்பிலுமாக, முகம் சிவக்க,

"விடுங்கள், யாராவது பார்த்தால் என்ன ஆவது? என்றவளின் குரல் முணுமுணுப்பாக வர,

"யாரும் பார்த்து விடுவார்கள் என்பது தான் அம்மணிக்கு பிரச்சனையா, அப்படி என்றால் வா, அந்த அலுவல் அறைக்குள் போய்விடலாம்"என்று குறும்பாக கூறி கண்ணை சிமிட்டிவிட்டு, ஒற்றை விரலால் அவளது கன்னத்தில் தடவ,

அவனது பேச்சிலும் செயலிலுமாக, மேலும் வெட்கம் ஆட்கொள்ள, சட்டென்று அவனை விட்டு விலக முயல, இலகுவாக பிடித்திருப்பது போலிருந்தபோதும், அவனிடமிருந்து விடுபட முடியாது போக, "ப்ளீஸ் விடுங்க மகேன்"என்று கெஞ்சவும், மனம் இறங்கியவனாக," ம்ம்..ஓகே ஓகே அதற்கு முன்பாக, நேற்று நான் உனக்கு ஒன்று கொடுத்தேனே? நீ இன்னும் அதை திருப்பி தரவில்லையே, அதை கொடு விடுகிறேன்’’ என்றான்.

"ம்ஹூம் நான் மாட்டேன்’’லஎன்று சிணுங்கிய வேளையில்..

"மகேன், மருமகளுக்கு அப்புறமாக வீட்டை சுற்றி காட்டிக்கொள், இரண்டு பேரும் வந்து முதலில் சாப்பிடுங்கள். சீக்கிரம் கிளம்பிப் போனால் தான் நிதானமாக துணிமணி நகைகளை தேர்வு செய்து எடுக்க முடியும். நீயும் மதியத்தைக்கு மேலே எங்கேயோ போக வேண்டும் என்று சொன்னாயே" என்று மங்களம் குரல் கொடுக்கவும்..அவனது பிடி தளர வேகமாக விலகிய மகதி கண்களில் மலர்ந்த குறும்பு சிரிப்புடன் உள்ளே ஓட, அதை ரசிக்க முடியாத வகையில் தீவிர யோசனை ஆட்கொள்ள, அவளை தொடர்ந்தான் மகேந்திரன்.

💜💜💜

மாலதியும் மகதியும் கிளம்பிச் சென்று வெகுநேரம் கழித்து எழுந்த மதுமதி, தயாராகி, வாசலுக்கு வரும் வரையிலும் பணியாளர்களின் வினோதமான பார்வையை பாராதது போல பார்த்த மதுமதி, மனதுக்குள் தனக்கு சபாஷ் போட்டுக்கொண்டாள்.

மகதியைப் போல் உடையும் சிகை அலங்காரமும் செய்திருந்தாள். ஆனால் அவளுக்கு என்ற நடையையும் பாவனையையும் மாற்றிக்கொள்ள மறந்து போனதாலும், அன்று காலையில் மகதி புதிதாக மூக்கு குத்தியிருப்பதை ஒரு சிலர் பார்த்திருந்ததாலும் பல வருடங்களாக பணிபுரியும் பணியாளர்களுக்கு அவள் மதுமதி என்று எளிதாக கண்டுகொள்ள முடிந்தது என்பதை அவள் அறியவில்லை.

மகதியை போல உடையிலும் அலங்காரத்திலும் கவனம் செலுத்திய மதுமதிக்கு அவளது சில பழக்க வழக்கங்கள் தெரியாமல் போனது அவளது துரதிர்ஷ்டம். ஒருவரை போல ஒருவர் இருக்கலாம். ஆனால் குணம் என்பது அப்படியே இருக்க வாய்ப்பில்லை. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே அப்படி இருக்காத போது இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

அங்கே...

பெண்கள் மூவரையும் அழைத்து போய் புடவை மற்றும் மோதிரங்களை வாங்கி முடித்து உயர்தர உணவகத்தில் சாப்பிட்ட பிறகு, "மாப்பிள்ளை நாங்கள் டாக்ஸி பிடித்து போய் கொள்கிறோம்" என்று மாலதி சொன்னாள்.

"இல்லை அத்தை, நான் இப்போது ஒரு முக்கியமான விஷயமாக போகவேண்டி உள்ளது. அதற்காக மகதியும் என்னோடு வரவேண்டும். அதுவரை நீங்கள் எங்கள் வீட்டில் ஓய்வு எடுங்கள். நான் திரும்பி வந்து விபரம் சொல்கிறேன். அப்புறமாக உங்கள் இருவரையும் வீட்டில் கொண்டு விடுகிறேன்" என்று மகேந்திரன் சொன்னான்.

அவனது முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு, மாலதி கலங்கிப்போனவளாய்," மாப்பிள்ளை வேண்டுமானால் நானும் உங்களோடு வரட்டுமா?" என்று அவள் கேட்கவும்,

"அதற்கெல்லாம் அவசியமில்லை அத்தை. நீங்கள் பயப்படற மாதிரி ஒன்றுமில்லை அத்தை. அநாவசியமாய் கலங்காதீர்கள். எல்லாம் நாம் நினைக்கிறபடி நன்றாக நடக்கும். என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா?"

"நிச்சயமாக நம்புகிறேன் மாப்பிள்ளை. கவனமாக போய் வாருங்கள்",என்று விடை கொடுத்தாள் மாலதி.

மங்களத்திற்கு ஏதோ பெரிய விவகாரம் என்று புரிந்த போதும் அவர் எதையும் கேட்டு மாலதியை சங்கடப்படுத்தவில்லை.

ஆனால்..
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top