Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

18. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மகதியை வீட்டில் கொணர்ந்து விட்ட மகேந்திரன், மாலதியின் அழைப்பிற்கு இணங்கி உள்ளே வந்தான். மாலதி செய்திருந்த இனிப்புடன் இருவருக்கும் டிபன் பரிமாறினாள். பெயருக்கு சாப்பிட்டு எழுந்துகொண்டு,

“போதும் அத்தை அங்கே அம்மாவும் செய்து வைத்திருப்பார்கள்”என்று கை கழுவப்போனான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்ற, அவனது அம்மாவை கைப்பேசியில் அழைத்து பேசினான். அப்புறம் ஸ்பீக்கரை உயிர்பித்து மாலதி மற்றும் மகதியிடம் பேசச் சொன்னான்.

அதன்படி மங்களம்,” நாளைக்கு இருவருக்கும் நிச்சயதார்த்ததிற்கு டிரஸ் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறேன் அண்ணி. உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள்” என்றார்.

“இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது அண்ணி? நல்ல விஷயத்தை ஏன் தள்ளிப் போடனும். உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்”.

“மகேன் மருமகள் வந்து புடவை செலக்ட் பண்ணனும்னு பிரியப்படுகிறான் அண்ணி”.

“தாராளமாக கூட்டிக்கொண்டு போங்கள் அண்ணி. இதற்கு என்ன தயக்கம்?”

“அப்படி என்றால் காலையில் ஒன்பது மணிக்கு மருமகளை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிடுகிறீர்களா அண்ணி?”

“சரி அண்ணி, நாங்கள் வந்துவிடுகிறோம்”,என்று பேச்சை முடித்ததும், கைப்பேசியை அணைத்துவிட்டு,

“அத்தை ஒரு முக்கியமான விஷயம் நாளை நீங்கள் புடவை எடுக்கப்போகிற விஷயம் உங்கள் சின்ன மகளுக்கு தெரியவேண்டாம். அப்படி கிளம்பும் போது பார்த்தாலும் கோவிலுக்கு போவதாக சொல்லி விடுங்கள் என்றான்.

மாலதிக்கு ஒருபக்கம் குன்றலாக இருந்தது, மகேந்திரன் உண்மை அறிந்த பின்னும் மகதியை ஏற்க முன் வந்திருக்கிறான் என்று பெரும் ஆறுதல் உண்டாயிற்று. அதோடு முன்தினம் வரை எதையும் தன்னிடம் மறைக்காத பெரிய மகள் அவனிடம் உண்மை சொன்னதை மறைத்து இருக்கிறாள் என்றால் அவளுக்கு மகேந்திரனை பிடித்து இருக்கிறது என்பதை அந்த தாய் ஆனந்தமாக உணர்ந்தாள்.

“சரி மாப்பிள்ளை” என்றவள் தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் மாப்பிள்ளை “என்று கைகூப்ப,

“அடடா அதற்கெல்லாம் அவசியம் இல்லை அத்தை. எல்லாம் நன்மைக்கே. நான் பார்க்க வந்தது மகதியைத்தான். அதனால் உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம், சரி அத்தை நான் கிளம்புகிறேன்” என்று அவன் விடைபெற்றுக் கிளம்பிய பிறகே, மகதியின் முகத்தில் இருந்த மாற்றத்தை கவனித்த மாலதி,

“ஹே, மகி இதென்னடா? உனக்கு மூக்கு குத்தவேண்டும் என்று சொல்லி இருந்தால், நான் அழைச்சிட்டு போயிருப்பேனேடா? என்றாள்.

“இது அவர் விருப்பம் அம்மா. கேட்டார், என்னால் மறுக்க முடியவில்லை. ஏன் அம்மா நன்றாக இல்லையா? என்று கவலைக் குரலில் கேட்க,

“ரொம்ப அழகாக இருக்கிறது. எனக்கும் தோன்றியது தான். ஆனால் இந்த காலத்தில் இதெல்லாம் உன் வயது பெண்கள் விரும்புவதில்லை என்று விட்டுவிட்டேன். மாப்பிள்ளை அதை செய்திருக்கிறாரே. நல்லதாயிற்று. வைரத்தில் உனக்கு மூக்குத்தி வாங்கி விடுகிறேன்” என்றதும்,

“வேண்டாம் அம்மா, இதோ பாருங்கள் அவர் வாங்கி கொடுத்திருக்கிறார். நிச்சயதார்த்தம் அப்போ இதைத்தான் அணியவேண்டும் என்று சொன்னார் என்று கையில் வைத்திருந்த சின்ன நகைப்பெட்டியை காட்டினாள்.

“மாப்பிள்ளை ரொம்ப அட்வான்ஸா தான் இருக்கிறார், என்ற மாலதி, அது அவரது ஆசைக்கு வாங்கினது மகி, நானும் என் ஆசைக்கு ஒன்று வாங்கிவிடுகிறேன்” என்று புன்னகைக்க, கூடச் சேர்ந்து வெட்கத்துடன் புன்னகைத்தாள் மகதி,

“கல்யாணம் வேண்டாம் என்றாயே, மகி, நீ அதிர்ஷ்டசாலிடா. உன் மனசுபோல மாப்பிள்ளை அமைந்திருக்கிறார். அதுதான் அன்றைக்கு சொன்னேன் யாருக்கு யார் என்று கடவுள் தீர்மானிக்கிறதை நாம் மாற்ற முடியாது”.

“மகதி அன்னையை கட்டிக்கொள்ள, அவளது சங்கடம் புரிந்தவளாக, வேறு பேச தொடங்கினாள் மாலதி.

“வேற எங்கேயும் போகவில்லையாடா?? என்று மூக்குத்தியின் வேலைப்பாட்டை ஆராய்ந்தபடி வினவினாள்.

“பீச்சிற்கு போகலாம்னு சொன்னார் அம்மா. அங்கே போனால் நேரம் போவதே தெரியாது இல்லையா? அத்தை வேறு வீட்டில் காத்திருப்பார்கள் என்றேனா, “சரி பீச்சிற்கு இன்னொரு நாள் போகலாம் என்று, ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டு திரும்பி வந்துவிட்டோம். மூக்குத்தியை நீங்களே வைத்திருங்கள். இப்ப எனக்கு பசி இல்லை அம்மா. நான் ரூமிற்கு போகிறேன்” என்றுவிட்டு அவள் செல்ல,

மணியை பார்த்தாள் மாலதி. எட்டை தாண்டியிருந்தது. அதுவரையில் மதுமதி வீடு வந்திருக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தபோதும் , பெற்றவளாக கவலையும் உண்டாயிற்று. இந்த பெண் என்றைக்கு திருந்துவாள்? உறவுகளை எப்போது புரிந்து வாழப் போகிறாள்? ஒரு பெருமூச்சுடன் அவளது அறைக்கு சென்றாள்.

ஒன்பது மணியளவில் மதுமதி வீடு வந்தபோது உற்சாகமாக இருந்தாள். “அம்மா ரொம்ப பசிக்குது. சாப்பிட என்ன இருக்கிறது? என்று நேராக சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தாள்.

“இட்லி, சட்னி இருக்கிறது. நீ முதலில் போய் உடை மாற்றிவிட்டு பிரஷ்ஷப் ஆகி வா மது” என்றாள் அன்னை.

“என்னம்மா நீங்கள், கால் எல்லாம் வலிக்கிறது. இப்போது மாடி ஏறி இறங்கி, திரும்பவும் ஏறணும் அம்மா” என்று சிணுங்கினாள்.

“சரி சரி, கீழே இருக்கிற வாஷ்ரூம் போய் கை கால் மட்டுமாவது கழுவிவிட்டு வந்து சாப்பிடு” என்றுவிட்டு மாலதி அவளுக்கு தட்டை எடுத்து வைத்துவிட்டு, மாலையில் செய்யப்பட்டிருந்த இனிப்பை எடுத்துவர சமையல் அறைக்குள் சென்றாள்.

அதற்குள் மதுமதியின் கைப்பேசி ஒலித்தது.

பொதுவாக மாலதி மகள்களின் கைப்பேசியை எடுத்துப்பார்ப்பது இல்லை. இன்றைக்கும் அப்படித்தான் அது அடித்து ஓயும்வரை விட்டுவிட்டாள். திரும்பவும் ஒலிக்க, யார் என்று எட்டி பார்த்தாள். மோனீஷ் என்று இருந்தது. மாலதிக்கு அது பெரிதாக தோன்றவில்லை. மகளோடு படித்த சில பையன்கள் பற்றி அவளுக்கும் தெரியும்.

இந்த மோனீஷ்கூட தெரிந்த பையன்தான். ஆனால் எதற்காக திரும்ப திரும்ப போன் செய்கிறான் என்று யோசித்தவாறு நகர்ந்து இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். அதற்குள் மதுமதி வந்துவிட்டாள். ஓடி வந்து கைப்பேசியை எடுத்தாள், “ என்னடா மோனி, இப்பதானே மீட் பண்ணினோம். அதற்குள் ஏன் போன் பண்றே? “

“டேய் இவ்வளவு நேரம் சொன்னேன்ல ஒரு பிரச்சினையும் வராது. நாம போட்ட பிளான் படி எல்லாம் நடக்கும். நீ மட்டும் சொதப்பிடாமல் வந்து சேரு. ஞாபகம் இருக்குதுல்ல? சும்மா நை நைங்காதேடா. நீ முதல்லேயே முடியாதுன்னு சொல்லியிருந்தால், முரளியை ரெடி பண்ணியிருக்கலாம். ஆனால் இப்ப மாத்த முடியாது. நீதான் வரணும்.” சரிடா எனக்கு பசிக்கிறது சாப்பிடப்போறேன். டேக் கேர். பை.” என்று சாப்பிட அமர்ந்தாள்.

மதுமதி இதுவரை வெளியே யார் வம்புக்கும் போனதில்லை. யாரும் அவளை பற்றி தவறாக புகார் சொன்னதும் கிடையாது. அவளுக்கு பிடிக்காதவள் மகதி மட்டும்தான் என்று ஒவ்வொரு முறையும் காட்டியிருக்கிறாள். இப்போது மகதி இங்கே இருக்கும் போது அவள் திட்டம் என்றதும் ஏனோ மாலதிக்கு மகளின் பேச்சு சற்று உறுத்தியது.

“என்ன பிளான் மது? என்று வினவ, அன்னை அப்படி கேட்பாள் என்று எதிர்பாராத மதுமதி ஒருகணம் திடுக்கிட்டு உடனேயே சுதாரித்தாள். “பிளானா? அதெல்லாம் ஓன்றுமில்லை அம்மா”என்று சமாளித்தாள்.

நீ மோனீஷ்கிட்ட “பிளான்படி எல்லாம் நடக்கும் நீ மட்டும் சொதப்பிடாமல் வந்து சேரு” னு சொன்னாயே? அதுதான் கேட்கிறேன், என்றாள் அழுத்தமான குரலில்.

“மதுமதி அவசரமாக யோசித்து,”ஐயோ அம்மா, என் friend ஒருத்திக்கு வெளிநாட்டில் வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு ஒரு சர்ப்ரைஸ் farewell party கொடுக்கப்போறோம். அதுல சின்னதா ஒரு டிராமா போடுறோம். மோனீஷ்க்கு ஐயர் வேஷம் கொடுத்திருக்கிறோம். அதுதான் அந்த மொழி சரியா வரமாட்டேங்குதுன்னு சொன்னான். வேற ஒன்றும் இல்லை”.

மகளை கூர்ந்து நோக்கிவிட்டு, “இதோ பார் மது இந்த கல்யாணத்தில் ஏதேனும் தடை வருவதற்கு நீ தான் காரணம் என்று தெரிந்தால் அப்புறம் நீ என் மகளே இல்லை,” என்று தலை முழுகிவிடுவேன், ஜாக்கிரதை”, என்று எச்சரித்துவிட்டு மாலதி எழுந்து அவளது அறைக்கு செல்ல,

கண்களில் சினம் துளிர்க்க, அன்னை போவதையே பார்த்திருந்தவள் மனதுக்குள்,” பெற்ற மகளைவிட வளர்த்த மகள் அவ்வளவு உசத்தியாகிவிட்டாளா?? இருக்கட்டும், எல்லாவற்றுக்கும் முடிவு செய்கிறேன்” என்று பொருமினாள்.

அதே நேரம் வீட்டை அடைந்துவிட்டதாக தெரிவித்ததோடு” உன்னோடு பேசவேண்டும் நான் சாப்பிட்டு அறைக்கு போனதும் உன்னை அழைக்கிறேன். நீயும் அதற்குள் சாப்பிட்டுவிடு”. என்று மகதிக்கு தகவல் அனுப்பினான் மகேந்திரன்.

“சரி, நான் காத்திருக்கிறேன். நீங்கள் சாப்பிட்டு வாங்க”என்று பதில் அனுப்பினாள்.

சொன்னது போலவே மகேந்திரன், கைப்பேசியில் அழைத்தான்.

“சொல்லுங்க மகேந்திரன்.”

“உன் தங்கையை நீ பார்த்தாயா ? “

“இல்லை மகேந்திரன், நீங்கள் சொன்னது போல நான் அவள் வருவதற்கு முன்பாகவே அறைக்குள் வந்துவிட்டேன்”. இப்போதாவது சொல்லுங்க. என்ன விஷயம்? ஏன் அப்படி செய்ய சொன்னீர்கள்? “

“அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை மதி. எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைக்காகத்தான். நீ மூக்கு குத்திக்கொண்டது நாளை ஒரு நாள் அவளுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறாயா மதி?? உன்னால் முடியுமாடா?

“மகேந்திரனின் டா” வில் மனம் உருக , அவனது குரலில் கவலை இருப்பதையும், அது அவளுக்காகத்தான் என்பதும் புரிய,” சரி மகேன். நான் கவனமாக இருந்து கொள்கிறேன். வழக்கமாக அவள் தாமதமாகத்தான் எழுவாள். அநேகமாக அதற்குள் நாங்கள் கிளம்ப முயற்சி செய்கிறோம் “

“தேங்க்ஸ்டா” “குட் நைட் “டேக் கேர்”

“குட் நைட் மகேன்” யூ டூ டேக் கேர்” என்று போனை துண்டித்த மகதியை இன்ப கனவுகள் ஆக்ரமித்தது.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top