Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

16. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
வடிவுக்கரசிக்கு அப்படி ஒரே இடத்தில் படுத்திருந்து பழக்கமில்லை. மாமியாரிடம் கூட சரியாக பேச விடாமல், அவளை ஓய்வெடுக்க சொல்லி கணவன், அறையில் கொண்டு விட்டதும் உள்ளூர சிறு கலக்கம் உண்டாயிற்று. அவளுக்கு பெரிதாக ஒன்றுமில்லை என்று மகனும் கணவரும் சொன்னபோது மலர்வதனி ஒரு கருத்தையும் சொல்லவில்லை. சொல்லப்போனால் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு அவள் முகத்தில் கவலையும் கண்களில் பயமும் தான் தெரிந்தது. உதடு மட்டும் பெயருக்கு புன்னகைத்ததோ?

அத்தைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினாளா?? அல்லது இனி அத்தை ரொம்ப காலம் இருக்கமாட்டாள். அப்புறம் அவளோட கதி என்னவாகும் என்று கலங்கினாளோ? அப்படித்தான் இருக்க வேண்டும். அப்பனும் மகனும் அவளிடம் மறைக்கிறார்கள். அவளது மருமகள் தான் உண்மை சொல்கிறவள், என்று தோன்ற, உடனடியாக மலர்வதனியை சந்தித்து விவரம் அறிய வேண்டும் என்று நினைத்தாள். கூடவே மாமியார் அவளை வீட்டிற்குள் விட மாட்டாளே என்று வருத்தமும் உண்டாக, படுக்கையில் படுக்க மாட்டாமல் உலவிக் கொண்டிருந்த போது தான் நிரஞ்சன் அவள் அறைக்குள் வந்தான்.

"தாயின் முகத்தில் தீவிரத்தையும், அவள் ஓய்வெடுக்காமல் உலவிக் கொண்டிருப்பதையும் பார்த்து ஒருகணம் பதறிப் போனான். "அம்மா என்னாச்சு? படுத்துக் கொஞ்சம் ஓய்வு எடுக்காமல் இப்படி பதற்றமாக இருக்கிறீர்களே? பாட்டி ஏதும் சொன்னார்களா அம்மா? என்றான்

வடிவுக்கரசிக்கு ஒரே ஆச்சரியமாகிப் போயிற்று. பாட்டியை ஒரு சொல் சொன்னால் பொறுக்காத பேரன் இன்றைக்கு அம்மா கவலைப்படுவதற்கு காரணம் பாட்டியாக இருக்கும் என்று யூகிக்கிறானே! நிஜமாக மகன் வளர்ந்து விட்டான் போலும்...

"என்னம்மா அப்படி பார்க்கிறீர்கள்? அப்போ பாட்டிதானா? என்ன சொன்னார்கள்? என்றவனின் கை முஷ்டி இறுகியது.

அதை கவனித்த வடிவுக்கரசி, அவசரமாக "சே சே அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை ரஞ்சி, என்றவள், அது வந்து மலர் உன் கூடத்தானே வந்தாள்? அவளை உடனே நான் பார்க்க வேண்டும்" என்று தயங்கியபடி கேட்டாள்.

"ஆமாம் அம்மா, நான் அவளைப் பத்திதான் உங்ககிட்டே பேச வந்தேன். நான் வண்டியை முன்புறம் கொணர்ந்தேன். வதனி அதற்குள் குதித்து ஓடிவிட்டாள் அம்மா"

"ஐயையோ என் கண்மணிக்கு ஒன்றும் ஆகவில்லையேடா? என்று பதறிய அன்னையின் கையை ஆறுதலாகப் பற்றி,"அடடா அம்மா அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை" என்றவாறு அழைத்துப் போய் கட்டிலில் அமர வைத்தான்.

தொடர்ந்து,"அம்மா அவள் தெருமுனையில் இறங்கிக் கொள்வதாக சொன்னாள், நான் தான் பிடிவாதமாக நிறுத்தாமல் காம்பவுண்ட்டிற்குள் ஓட்டி வந்து நிறுத்தினேன். அப்போது தான் அவள் குதித்து ஓடியது. எனக்கு அது ஏனென்று விளங்கவில்லை. நேற்றும் நீங்கள் அவளுக்கு சாப்பாடு எடுத்து போய் கொடுத்தீர்கள். அதைப் பற்றி அப்போது பேச நேரமில்லை என்றீர்கள். இப்போதும் கூட உங்கள் மனதுக்கு கஷ்டம் தரும் என்றால் அதைப் பற்றி பிறகு பேசிக் கொள்வோம். நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள், நான் உங்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வருகிறேன்" என்று நிதானமாக சொல்ல,

வடிவுக்கரசிக்கு இப்போதும் மாமியாரை மகனிடம் குறைத்து கூற வாய் வரவில்லை. என்னதான் இருந்தாலும் அவள் வயதானவள். கடைசிக் காலத்தில் பேரனின் பாராமுகம் அவளை கஷ்டப்பட வைக்கும். இத்தனை காலமாக அவள் அனுபவித்தது தானே? அதை மாமியாரும் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தவள், "அது நான்தான் ரஞ்சி, அவள் வயசுப் பெண் என்பதால் நீ வரும் நேரம் இங்கே வரக்கூடாது என்று அது அது..அவள் வேறு வீ.. வீட்டிற்கு கல்யாணம் ஆகிப் போக வேண்டியவள் இல்லையா? அதனால் ஊரில் தப்பான பேச்சு வந்து விடக்கூடாது என்று... என்று தடுமாறியபடி சொல்ல, சட்டென்று ஒரு விரலை அன்னையின் உதட்டில் வைத்து,

"புரிந்தது அம்மா விட்டுவிடுங்கள்,நான் இனி அதுபற்றி கேட்கவில்லை. சரி இப்போது உங்கள் மருமகளைப் பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள் போட்ட விதிமுறையை எப்படி நீங்களே மீறுவது என்று உங்களுக்கு தயக்கம். அதுதானே? நான் அவளை அழைத்து வருகிறேன். நீங்கள் மனதை அலட்டிக் கொள்ளாமல் படுத்திருங்கள்"என்றுவிட்டு அறையில் இருந்து வெளியேற, வடிவுக்கரசிக்கும் அப்போது தனிமை ரொம்பவே தேவைப்பட, அப்படியே கட்டிலில் படுத்தவள் அவளையும் அறியாமல் கண்ணயர்ந்தாள்.

அன்னையிடம் பேசிவிட்டு வந்த நிரஞ்சனுக்கு மனம் வலித்தது. அப்படியே மாடியில் இருந்த வராணடாவில் ஒர் இருக்கையில் அமர்ந்து விட்டான்.சொந்த தம்பியின் மகள் மீது இவ்வளவு பாசத்தை வைத்துக்கொண்டு, அவளை மூன்றாம் மனுஷி போல பணியாளர்கள் குடியிருப்பில் தங்க வைப்பாளா என்ன? பாட்டியை காப்பாற்றவென்று அம்மா பழியை தன் மீது போட்டுக் கொள்கிறாள். நிகிதாவும் அவனுக்கு முறைப் பெண்தானே? அவள் மட்டும் அந்த வீட்டில் சகல உரிமைகளோடு வந்து தங்கலாம். ஆனால் அவனுடைய மாமன் மகளுக்கு அந்த உரிமை இல்லை. இதென்ன அநியாயம்? பாவம் அம்மா அவளது வருத்தத்தை காட்டிக் கொள்ளாமல் வளைய வந்திருக்கிறாள். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அவனுக்கும் தான் அந்த சின்ன பெண்ணை பற்றி அக்கறை உண்டாக வில்லையே, என்ற நினைவில் மனம் குற்றவுணர்வில் குன்றியது.

ஓசையின்றி பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, எழுந்து கீழே வந்தவன், நேராக மலர்வதனியின் அறைக்கு செல்ல முயன்றான். ஆனால் அவள் தனியாக இருக்கும் இளம் பெண். நாலு பேர் அவனை அங்கே காண நேர்ந்து, அதுபற்றி அவளிடம் யாரும் கேட்டு வைத்தால் அவளுக்கு சங்கடமாகிவிடும், என்று உணர்ந்தவனாக, பணிப்பெண் சொக்கியிடம் அன்னை அழைப்பதாக சொல்லி மலர் வதனியை அழைத்து வரச் சொன்னான். ஆனால் அவளோ குளிக்கப் போயிருப்பதாக தெரிவிக்க,

அவனது வருகையை எதிர்பார்த்து அன்னை காத்திருப்பாளே என்று எண்ணியவனாக வடிவுக்கரசியின் அறைக்கு சென்றால், அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள், ஆகவே அவனது அறைக்கு சென்று கைகால் கழுவிவிட்டு உடையை மாற்றிக் கொண்டு, காலை உணவிற்காக சாப்பாட்டு அறைக்கு சென்றான். அங்கே சந்திரமதியும், நிகிதாவும் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்க, அவர்களை பேருந்து நிலையத்திற்கு அழைத்துப் போக சத்யமூர்த்தியும் உடன் கிளம்ப ஆயத்தமாக நின்றிருந்தார்.

அப்போது தான் காந்திமதி சமையற்கட்டில் இருந்து வந்து ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

"அம்மா நாங்கள் போய் வர்றோம். ஏதாச்சும் விசேஷம் என்றால் போன் பண்ணு, என்றவள் நிரஞ்சனை பார்த்ததும்,"மருமகனே நாங்க போயிட்டு வர்றோம். இன்னும் இரண்டு நாள் இருந்து அண்ணியை கவனிச்சுக்கணும்னு தான் மனசு அடிச்சுக்குது. ஆனால் அங்கன நான் போட்டது போட்டபடியே வந்துட்டேனு உன்னோட மாமா உடனே கிளம்பி வரச்சொல்லி போன் போட்டுட்டே இருக்கார். அண்ணிக்கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பிடறேன் என்றவளின் பேச்சில் குறுக்கிட்டு, "அத்தை வேண்டாம். அம்மா தூங்குகிறார்கள். அப்புறமாக நான் சொல்லி விடுகிறேன். நீங்கள் கிளம்புங்கள். மாமாவை விசாரிச்சேனு சொல்லுங்க" என்றான் நிரஞ்சன்.

தாயின் பொய்யான பேச்சில் முகம் கடுத்தாள் நிகிதா. வேறு ஒரு சமயமாக இருந்தால் நன்றாக கேட்டிருப்பாள். ஆனால் இப்போது தான் அத்தை உயிருக்கு போராடி மீண்டு வந்திருக்கிறாள். இந்த நேரத்தில் அவள் ஏதும் பேசினால் அம்மா ஒப்பாரி வைத்துவிடுவாள், என்று எண்ணி, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், "நாங்கள் போய் வர்றோம் நிரு மாமா. அத்தையை நல்லா பார்த்துக் கொள்ளுங்கள். நான் Sem Holidays ல வர்றேன், என்று சொன்னவள், அவன் காதோரம் சென்று,"சீக்கிரம் கல்யாண பத்திரிக்கை அனுப்பி வையுங்கள் மாமா. அத்தோடு உங்க கல்யாணத்துக்கு எனக்கு புது டிரஸ் வாங்கித் தரணும் சரியா? என்று ரகசியமாக சொல்ல,

நிரஞ்சன் சிரித்தபடி, Sure Nikki, உனக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறேன். ஆனால் நீ செமஸ்டரில் நல்லா எழுதி பாஸ் பண்ணனும், deal ok தானே?"

"Double ok மாமா" என்றவள் காந்திமதியிடம் திரும்பி,"டாட்டா பாட்டி. அடிக்கடி போன் பண்ணுறேன்" என்று விடைப் பெற்றுக் கொண்டாள்.

காந்திமதிக்கு சற்று மனத்தாங்கல் தான். அவசியமான நேரத்தில் மகள் இப்படி கிளம்புகிறாளே என்று, அதனால் ஒன்றும் பதில் பேசாமல் அவர்கள் செல்வதை பார்த்திருந்தாள்.

வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்த நிரஞ்சன்,"என்ன டிபன் பாட்டி?"என்று சாப்பிட அமர்ந்தான்.

"நேற்று ராத்திரி எல்லோரும் ஆஸ்பத்திரியில் இருந்து வந்து சாப்பிடுவீங்கனு, செய்த இட்லி மீந்து போச்சு, அதைத்தான் உதிர்த்து இட்லி உப்புமா பண்ணினாள் சொக்கி, தொட்டுக்க கொத்தமல்லி சட்னி செய்யச் சொன்னேன்"என்று சொக்கி கொணர்ந்து வைத்ததை பரிமாறினாள்.

"ஓ! சூப்பர், என்றவன்"நீங்கள் சாப்பிட்டீங்களா பாட்டி?

"நான் சாப்பிட்டேன் ராஜா, இப்போ கொஞ்சம் நேரம் போய் படுக்கனும், என்றவள் "சரி, இப்ப உன் அம்மா என்ன சாப்பிடனும்? சொன்னால் சொக்கிக்கிட்டே செய்யச் சொல்லிட்டு போறேன்,"என்ற பாட்டியை ஒருகணம் ஆச்சரியமாக பார்த்தவன்,



"ஆஸ்பத்திரி கேண்டீனில் சாப்பிட வைத்து மாத்திரை கொடுத்துதான் அழைத்து வந்தோம் பாட்டி, அதனால் கொஞ்சம் பொறுத்து பழச்சாறு கொடுத்தால் போதும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் படுங்க" என்று சாப்பிட ஆரம்பித்தான்.

காந்திமதி எழுந்து சென்றாள். நிரஞ்சன் சொக்கியை விளித்து மறுபடியும் மலர்வதனியை சாப்பிட அழைத்து வரச் சொல்ல, அவள் போன வேகத்தில் திரும்பி, மலர் அங்கே இல்லை என்றதும் துணுக்குற்றான்.

அப்போது அங்கே வந்த ஜாஸ்மின், "நிரஞ்ச், நல்ல பசிப்பா, ஆன்ட்டிக்கு வேற health சரியில்லை. இல்லையென்றால் டிபன் அனுப்பியிருப்பார்கள். அதனால் தான் நானே வந்துவிட்டேன், என்று அவன் அருகில் அமர்ந்தாள்.

நிரஞ்சன் அவளது பேச்சில் கவனம் செலுத்தவில்லை என்று புரிய, "என்னாச்சு நிரஞ்ச்? Any prblm? என்று அவனது தோளைத் தொட்டாள்.

நிகழ்விற்கு திரும்பியவன், புன்னகைத்தபடி, "Nothing baby, நீ முடிந்தால் இதை சாப்பிடு. இட்லி உப்புமா very tasty. உனக்கு அது பிடிக்காவிட்டால் சொக்கிக்கிட்ட தோசை ஊற்றி தரச் சொல்லு. நான் கொஞ்சம் அவசரமாக போக வேண்டும் என்று எழுந்து கொள்ள,

இதுவே போதும்ப்பா, என்றவள் தொடர்ந்து," நான் மொட்டை மாடியில் துணிகளை காயப் போடப் போனப்போ, அந்த பொண்ணு மலரைப் பார்த்தேன்ப்பா" என்றதும்

"அவள் அங்கேயா இருக்கிறாள்?இரண்டு எட்டுக்களை எடுத்து வைத்து நகரப் போன நிரஞ்சன் நின்று வினவ,

"இல்லை, பக்கத்தில் இருக்கிற libraryக்கு போவதை பார்த்தேன்ப்பா. அவளோட Hair அடேங்கப்பா எவ்வளவு நீளம்? அழகு ,பார்த்து நான் அசந்து விட்டேன்ப்பா" என்றவாறு சாப்பிடுவதில் முனைந்தாள்.

அதைக் கேட்ட பிறகு தான் நிரஞ்சன் வாசகசாலைக்கு வந்தது. அங்கே இந்த அம்மையார்,"நீ சொல்வதை நான் எப்படி நம்புவது என்று கேட்கிறாள். அவனுக்கு சற்று கடுப்புதான், ஆனால் அதை மறைத்து, திருப்பி அவளையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கையில், அவனது கைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தவனின் விழிகள் பிரகாசமாயிற்று. "உன் அத்தை தான். நீயே உன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்"என்றவன், கைப்பேசியை உயிர்பித்து, கூடவே ஸ்பீக்கரையும் ஆன் செய்து அவளை பேசுமாறு சைகை செய்ய, திகைப்புடன் அவனை ஏறிட்டாள் மலர் வதனி.

அதற்குள் வடிவுக்கரசி, நாலு முறை ஹலோ ரஞ்சி, சொல்லிவிட்டாள். அவள் குரலில் பதற்றம் தெரிய,அவசரமாக "ஹலோ அத்தை,நா நான், மலர் பேசுகிறேன். என்ன விஷயம் சொல்லுங்க,"என்றவள் குரலை சீராக வைக்க முயன்று தோற்றாள்.

"மலர், என்னாச்சுடி? வண்டியில் இருந்து குதித்தாயாமே? அடி ஏதும் பட்டுச்சா?

அத்தையின் அக்கறையில் கண்கள் கலங்க, அதை அருகில் நிற்வனுக்கு காட்டப் பிடிக்காமல், "எனக்கு ஒன்றும் இல்லை அத்தை. நான் நல்லா இருக்கிறேன்" குரல் கரகரக்க சொன்னாள்.

"அப்பாடி எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு,என்றவள், "அதென்னடி விஷயம் இருந்தால் தான் உன்கிட்டே நான் பேசனுமா? என்றாள் வடிவுக்கரசி பொய்க்கோபத்துடன்.

"அப்படி எல்லாம் இல்லை அத்தை" என்று அவள் சொல்லும்போதே, வடிவுக்கரசி குறுக்கிட்டு,

"அது சரி இது உன் அத்தான் போன் ஆச்சே? அது உன்கிட்டே எப்படி வந்துச்சு? அவன் எங்கே?"என்றாள்.

அத்தை நிரஞ்சன் முன்பாக அவள் அவனை கூப்பிடும் வித்தத்தை கூறவும்,மலர் வதனியின் முகம் லேசாக சிவந்தது. "அது வந்து அத்தை", என்று அவள் தடுமாற, அவளது முகத்யை கவனித்த நிரஞ்சன், அவள் கையில் இருந்து கைபபேசியை வாங்கி,"வதனி லைப்ரரிக்கு போயிருக்கிறாள் என்று சொக்கி சொன்னாள் அம்மா. அதுதான் அவளை உங்களிடம் அழைத்து வரலாம் என்று இங்கே வந்தேன். பத்து நிமிடத்தில் நாங்கள் அங்கே வருகிறோம், என்று போனை துண்டித்து விட்டு,"இப்போது உன் சந்தேகம் தீர்ந்ததா? போகலாமா?"என்று அவன் முன்னால் நடக்க,

மலர்வதனி அவனை வெறித்தபடி நின்றாள்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top