Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

11. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மதுவந்திக்கும் மனோகரிக்கும் இருந்த ஒரே தொடர்பு கைபேசி எண் மட்டும்தான். அதுவும் இப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும் அவளுக்கு பதற்றமாகிவிட்டது. பலமுறை முயன்றும் தொடர்பு கிடைக்காமலே போகவும் மதுவந்தி ஒரே முடிவுக்கு தான் வர நேர்ந்தது. மனோகரிக்கு அவள் மீது கோபம் உண்டாகிவிட்டது. இப்படிப்பட்ட பொறுப்பற்ற பெண்ணின் தொடர்பு தேவையில்லை என்று எண்ணிவிட்டாள் போலும்.. மதுவந்தி மனதில் தோன்றிய காரணங்களை எல்லாம் எண்ணிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

சரளாவிற்கு அவள் தந்தையின் மறைவை எண்ணி அழுவதாக தோன்றியது போலும்,

"அட, ஏன் கண்ணு இப்படி போனவங்களை நினைச்சு அழுதாக்க வந்துரவா போறாக..? முகத்த கழுவிட்டு கொஞ்சம் சாப்பிடு கண்ணு. வயித்த காயப் போட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்? என்று அறிவுரை வழங்கவும்..

மதுவந்தி சுதாரித்துக் கொண்டு எழுந்து பின்முற்றத்திற்கு சென்றாள்! சரளாவும் மருதமுத்துவும் வீட்டில் இருப்பது அசௌகரியமாக இருந்தது. சமயத்தில் உதவி செய்தவர்கள் என்பதால் முகத்தில் அடித்தாற் போல் பேசவும் மனம் வரவில்லை. பத்தாம் நாள் காரியம் முடிந்தபின் எப்படியும் பேசிவிடவேண்டும், கூடவே படிப்பை இனி தொடருவதும் கேள்விக்குறிதான். ஒரு வேலையை தேடிக் கொண்டு ஹாஸ்டலில் அறை எடுத்துக் கொள்ளவேண்டும், முடிந்தால் படிப்பை தொடர வேணும். மதுவந்தி தனக்குள்ளாக போட்ட இந்த திட்டங்கள் தெரியாமல் உள் அறையில் தாயும் மகனுமாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

"ஏன்மா எவ்வளவு நாளுதான் இங்கன காத்துக் கிடக்கிறது? ப்ளாட்ஸ் கட்டுறவன் கம்பெனியில இருந்து போனுக்கு மேல போன் போட்டு நச்சரிக்கான்" அவனுக்கு என்ன பதில சொல்ல? என்று மருதமுத்து படபடத்தான்.

"அவசரப்பட்டாக்க காரியமே கெட்ரும்டா மருது, அந்தக் குட்டி நாலு எழுத்து படிச்சிருக்கா நாம எதுவும் பேசறதுன்னா யோசிச்சுதான்டா பேம். இல்லன்னாக்க நாம நினைச்சது எதுவும் நடக்காது" என்று சரளா தாழ்ந்த குரலில் கடைசியாக சொன்னது,

அந்தப் பக்கமாய் சென்ற மதுவந்தியின் காதில் விழ திடுக்கிட்டுப்போனாள்!

அப்படி என்ன அவர்கள் நினைத்திருக்கக்கூடும்? அப்படியானால் அது அன்பால் செய்யப்பட்ட உதவி இல்லை. ஏதோ எதிர்பார்த்து தான் செய்யப்பட்டிருக்கிறது! ஆனால் அவளிடம் எதிர்பார்க்க என்ன பெரிதாக இருக்கிறது?? மனம் படபடக்க அவள் எவ்வளவு யோசித்தும் புரிபடவில்லை. ஆனால் அடுத்துப் பேசிய மருதமுத்து அதை புரியவைத்தான்.

"நீ என்னம்மா விஷயம் புரியாம பேசிக்கிட்டு இருக்கிற? அவகிட்ட எப்போ பேசி எப்போ கையெழுத்து வாங்கி அந்த கம்பெனிக்காரன்கிட்ட கொடுக்கிறது?? நமக்கு ஊரிலேயும் நிறைய வேலை கிடக்குது. இதை சட்டுபுட்டுனு முடிச்சிட்டு அவளையும் கூட்டிக்கிட்டு கிளம்பிடனும். இல்லைன்னாக்க வேற எவனாச்சும் வந்து எல்லாத்தையும் ஆட்டையப் போட்டுருவான். அதுக்குத்தானே உன் அண்ணி வழிச் சொந்தக்காரங்களுக்கு மாமா இறந்த விஷயத்தை சொல்லாம விட்டேன். இந்தா நாலு நாள் ஓடிருச்சு இதுக்குள்ள அரசல் புரசலா கேள்விப் பட்டு வந்து நின்னுட்டாக்க ஒன்னும் பண்ணமுடியாதும்மா. இந்த வீடு இவ பேர்ல இருக்க விசயம் வெளியே தெரியறதுக்குள்ள நாம சோலிய முடிச்சு நடைய கட்டிரணும் நாளைக்கு காத்தால நீ அவகிட்ட பேசிடு சொல்லிட்டேன்" என்றான் அழுத்தமாக.

மருதமுத்து இவ்வளவு நீளமாக தீவிரமாகப் பேசி மதுவந்தி கேட்டதேயில்லை. அதிலும் இத்தனை துல்லியமாய் திட்டம் போடுவான் என்றும் நினைத்திருக்கவில்லை. ஆக, இந்த வீட்டை எதிர்பார்த்துதான் இவ்வளவு உபகாரமும் நடந்திருக்கிறதா? இப்போது அவள் என்ன செய்வது? தெரிந்ததாக காட்டிக் கொண்டாலும் ஆபத்துதான். காலையில் சரளா எப்படி தன்னிடம் தொடங்குகிறாள் என்று பார்க்கவேண்டும். ஆனாலும் அவளுக்காக பேசவோ அவளை பாதுகாக்கவோ யாருமில்லாத இந்த சூழலில் எதிராக அவளால் எதுவும் பேசிவிட முடியாதே! மனம் பதற ஓசையின்றி தன் அறையினுள் பதுங்கிக் கொண்டாள் மதுவந்தி.

இரவெல்லாம் தூக்கமின்றி ஒருவிடையும் கிடைக்காமல் சோர்ந்து விடியும் தருவாயில் கண்ணயர்ந்தாள். ஆனால் அதுவும் கூட தூங்கவிடாது சரளா எழுப்ப வந்துவிட வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவளுக்கு முன் இரவு நிகழ்வு நினைவிற்கு வர கலங்கினாள் மதுவந்தி. இந்த ஓட்டுவீட்டை விற்று வரப்போகும் சொல்ப பணத்திற்காகவா இத்தனையும்? என்று அவள் மனம் கசந்தது.

"இந்தா மதுக்கண்ணு சீக்கிரமா போய் பல்லு விளக்கிட்டு வந்து காபிய குடி." என்றாள் சரளா அன்பொழுக...

மறுபேச்சின்றி சொன்னதைச் செய்தாள் மதுவந்தி! "இங்க பாரு கண்ணு, எங்களுக்கும் ஊரில நிறைய வேலை கிடக்குது. இங்கன வயசுப்புள்ள உன்னை விட்டுப் போட்டு எப்படி ஊருக்கு கிளம்புறது? உன் அப்பாவுக்கு கொடுத்த வாக்குப்படி உன்னை என் மருமகளா ஆக்கிக்கிறேன் கண்ணு. ஆனாக்க பாரும்மா, நீ எங்க கூட வந்துட்டாக்க இந்த வீடு பாழடைஞ்சு போயிரும். பேசாம வந்த விலைக்கு இதை வித்துப்போட்டு நாம கிளம்பிடலாம். என்ன சொல்றே மதுக்கண்ணு??"

சரளா சொல்ல சொல்ல மதுவந்திக்கு வயிறு காலியான உணர்வு உண்டாயிற்று...

காற்றடிக்கும் திசையில் செல்லும் பாய் மரக்கப்பல் போல பேதை அவள் திசை அறியாமல்.....???
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top