Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

09. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
அங்கே வீட்டில்..

வடிவுக்கரசிக்கு உடல் நிலை சரியில்லை, என்றும் அவளை சத்தியமூர்த்தி மற்றும் மலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று பணிப்பெண் வந்து விவரம் சொல்லவும் காந்திமதிக்கு முதலில் அதிர்ச்சி உண்டான போதும், ஏனோ அவளால் அதை நம்ப முடியவில்லை. நிரஞ்சனிடம் கரிசனத்தை சம்பாதிக்க அத்தையும் மருமகளும் ஏதோ திட்டம் போட்டிருக்கிறார்கள். அதை உண்மை என்று அவளுடைய மகனும் உடன் போயிருக்கிறான். ஏற்கெனவே பேரன் சொல்லிவிட்டு போனதிலேயே அவள் கொதித்துப் போயிருந்தாள். இப்போது வீட்டில் கார் இருந்தும் ஓட்டுனர் இல்லை என்பதால் பின்னோடு கிளம்ப முடியாமல் போனது வேறு அந்த முதியவளுக்கு ஒரே ஆத்திரம்.

"நல்லா கல்லுகுண்டாட்டம் இருந்தவளுக்கு திடீரென்று என்ன கேடு வந்திருக்கும்? எல்லாம் சும்மா அந்த குட்டி அவளோட தம்பி மகள், ஆஸ்பத்திரியில் வேலை செய்யறாளே, அவள் தான் ஏதோ திருகுதாளம் பண்ணியிருக்கணும், நான் வயசானவ எனக்கும் தான் பேரன் இப்படி எவளையோ வீட்டுக்குள்ளாற கொண்டாந்து வச்சிட்டானேனு ஆத்திரமா வருது. அதனால எனக்கு நோவு வந்திருக்குன்னு சொன்னா நம்பலாம். நான் என்ன இன்னிக்கு நேத்தா சத்தம் போடுறேன்.

என் மவனையும் தானே திட்டினேன். அவனுக்கு வராத நோவு இவளுக்கு மட்டுமென்ன? அத்தோட நான் திட்டினதாலே தான் அவளுக்கு இப்படி ஆச்சுனு எல்லோரும் நினைக்க வச்சுட்டாளே? இதெல்லாம் நம்பறாப்லேயா இருக்கு? காந்திமதி புலம்பிக் கொண்டு இருக்க,

சந்திரமதிக்கு வந்த காரியம் கெட்டுப்போன ஆத்திரம் ஒருபுறம், இப்போது அண்ணிக்காரி எழுந்து நடமாடும் வரை எல்லா பொறுப்பும் அவள் மீது விழுந்து விடுமே என்ற பயம், தாயின் புலம்பலை கேட்க கேட்க எரிச்சல் உண்டாயிற்று,"அட என்னம்மா நீ? எதற்கு இப்படி புலம்பித் தள்ளுகிறாய்? என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கும்னு தான் கிளம்பி வந்தேன். ஆனால் உன் பேரன் இப்படி தலையில் கல்லைப் போடுவான் என்று நான் நினைக்கவே இல்லை. இப்பக்கூட பாரு, யாருக்கு வந்த விருந்தோ என்கிறாப்ல, அவன் அந்த ஊர் பேர் தெரியாத சிறுக்கியோடு வெளியே கிளம்பிவிட்டான். போதாக்குறைக்கு உன் மருமகள் வேற நோவு வந்து ஆஸ்பத்திரியில் படுத்துட்டா, இங்கன உட்கார்ந்து அவளுக்கு ஊழியம் பார்க்கனும்னு எனக்கு என்ன தலை எழுத்தா?? அதான் எவளையோ கூட்டியாந்திருக்கானே அவளை பணிவிடை செய்யச் சொல்லு, நான் அடுத்த பஸ்சில் ஊருக்கு கிளம்புறேன்" என்று வெடுவெடுத்தாள்.

"பொழுது சாயற நேரத்தில் எதுக்குடி சந்திரா? போனவுங்க வந்திரட்டும், நாளைக்கு காலையில் சாப்பிட்டு அப்புறமா கிளம்பு"என்றாள் காந்திமதி.

"அம்மா, அத்தைக்கு உடம்புக்கு முடியாத நிலைமையில் நாம் ஊருக்கு எப்படி போறதுமா? அட்லீஸ்ட், அவங்களுக்கு என்னாச்சு என்றாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? இருங்கள் நான் மாமாவுக்கு போன் பண்ணி கேட்கிறேன்" என்ற நிகிதா உடனே கைப்பேசியில் சத்யமூர்த்தியை அழைக்க அது அடித்துக்கொண்டே இருந்தது.

"மாமா போனை எடுக்கமாட்டேங்கிறார் அம்மா. அத்தைக்கு என்னாச்சுனு தெரியலையே" என்றாள் நிகிதா கவலையுடன் '

"வடிவுக்கு ஏதும் ஆகிருக்குமோ? அடக் கடவுளே இப்ப என்னடி பண்றது?" என்றாள் காந்திமதி பதற்றத்துடன்

"ம்க்கும் இப்ப வந்து கேளு, சாயந்திரம் நீ அவளை சத்தம்போட்டு கத்திட்டு உள்ளே போனதும் அண்ணி பின்னாடி ஓடிப் போச்சு, அப்புறம் திரும்பி வரலை. இதோ பாரும்மா நீயாச்சு உன் மருமகளாச்சு, நான் வயசுப் பெண்ணை வச்சிருக்கிறேன். அவளுக்கு நல்லது பண்ணி பார்க்கணும். அதனால் நாங்க கிளம்பறோம்"என்று சந்திரமதி அவசரமாக அவளுக்கான அறைக்குள் விரைய,

காந்திமதி திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.

ஆனால்...

☆☆☆

மலர்வதனி அவளது பணியை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, நிரஞ்சன் கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தான். அவன் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டிருந்ததை கண்டு நிம்மதியுற்றாள்.

சத்யமூர்த்தி கண்களை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தார். சங்கரனை அங்கு காணவில்லை.

" மாமா" என்று மெல்ல விளித்தாள்.

"என்னம்மா மலர், வேலை முடிஞ்சதா? என்றவர் நேராக அமர,

"ஆமாம் மாமா, ஏதும் அவசரம் என்றால் மட்டும் போனால் போதும் என்றவள், இந்த மாத்திரைகளை உங்க பிள்ளைக்கு கொடுங்க, அப்புறம் நான் உறையின் மீது குறித்திருப்பதுபோல் இதில் இருக்கிற மாத்திரைகளை காலையிலும் இராத்தியிலும் சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே அத்தையை நான் கவனித்துக் கொள்கிறேன். இப்போது நீங்கள் இரண்டு பேரும் வீட்டிற்கு கிளம்புங்கள் மாமா" என்று சொல்ல

அதற்குள் தன் பேச்சை முடித்துவிட்டு வந்த நிரஞ்சன்,"அப்பா இங்கேயே இருக்கட்டும். நான் காலையில் வந்ததும் அப்பா வீட்டிற்கு போகட்டும்" என்றான் அழுத்தமான குரலில்.

"ராத்திரியில் கண்விழிப்பது உங்கள் உடம்புக்கு ஆகாது மாமா. உங்களுக்கு சுகர் இருக்கிறதால், நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திரை போடனும், அத்தோடு உங்கள் பிள்ளை அழைத்து வந்திருக்கிற பொண்ணுக்கிட்டே பாட்டி என்னவெல்லாம் கேட்டு சங்கடப்படுத்துவாங்களோ? அதனால் அவர் கூட கிளம்புங்கள்"என்று மலர்வதனி உணர்ச்சி துடைத்த குரலில் சொல்ல... அதற்கு மேல் நிரஞ்சன் விவாதம் செய்யவில்லை.

"சரி, அப்பா நீங்கள் போய் காரில் உட்காருங்கள். நான் அம்மாவை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன், என்று வடிவுக்கரசி இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அன்னையை பார்த்ததும் அவனுக்கு குற்றவுணர்வில் தொண்டை அடைத்தது."இனி நான் உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன் அம்மா. உங்கள் மனம் வருந்தும்படி யாரும் நடந்துகொள்ள மாட்டார்கள். அதற்கு நான் பொறுப்பு அம்மா"என்று மானசீகமா சொல்லி அன்னையின் கையை பற்றி மிருதுவாக தடவிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு பக்கவாட்டில் இருந்த சாளரம் வழியாக வெளியே வெறித்தபடி நின்றிருந்த மலர்வதனியிடம் சென்றான். அரவம் கேட்டு திரும்பியவள் விழிகள் விரிய அவனை பார்த்தாள்.

இவன் எதற்காக நம்மை நோக்கி வருகிறான்? ஏனோ யாருமற்ற இந்த தனிமையில் அவனோடு என்ன பேசுவது என்று ஒருவித பதற்றத்துடன் கட்டியிருந்த கைகளை மேலும் இறுக்கியபடி நின்றாள்.

"வதனி" என்ற அழைப்பில் அவளது உள்ளம் ஒருகணம் திடுக்கிட்டது. கூடவே சட்டென்று அப்படி அழைத்த அன்னையின் நினைவும் வர, அவளையும் அறியாமல் கண்கள் குளமாயிற்று."சே என்ன இது சின்னப் பிள்ளை போல,தன்னையே கடிந்தபடி, கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டு வார்த்தை வராததால் அவனை கேள்வியாய் ஏறிட்டாள்.

அவனது அன்னையை எண்ணித்தான் அவள் அழுகிறாள் என்று நினைத்த நிரஞ்சன்,"நீ சாப்பிட்டாயா? உனக்கு பிரேக் உண்டு தானே? என்றான் இயல்பான குரலில்.

"சற்றும் சம்பந்தமே இல்லாமல் அவன் அப்படி கேட்கவும் ஒருகணம் அவள் விழிகள் வியப்பில் விரிந்தது. சட்டென்று பார்வையை தழைத்துக்கொண்டு,"இப்போது மணி ஏழுதானே? நான் சாப்பிட நேரமாகும்".

"உன் அத்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நீ முதலில் உன்னை நல்லா கவனிச்சுக்கணும் வதனி. அதனால் நேரத்தோடு சாப்பிடு"

"நான் தவறாமல் சாப்பிடுறேன்" என்று அவள் பதில் கூற,

ஒரு விலாச அட்டையை அவளிடம் தந்து,"அதில் என் போன் நம்பர் இருக்கிறது. குறித்துவைத்துக் கொள். நான் வீட்டிற்கு போனதும் போன் பண்ணுகிறேன். இரவில் ஏதும் அவசரம் என்றால் ஜுரத்தில் இருப்பவனை எப்படி அழைப்பது என்று நினைத்து என்னை கூப்பிடத் தயங்காதே. எனக்கு இப்போது பரவாயில்லை. உனக்கு பணி நேரம் முடிந்துவிட்டாலும் நான் காலையில் வரும் வரை காத்திருப்பாய் அல்லவா"என்றான்.

"காலையில் டாக்டர் வந்து என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொண்டுதான் நான் இங்கிருந்து நகருவேன்"என்றாள் உணர்ச்சியற்ற குரலில்

"நல்லது,நான் கிளம்பறேன்"என்று விட்டு கிளம்பிச் சென்றவனை மலர்வதனி பார்த்திருக்க,சற்று தூரம் சென்றவன் நின்று அவளை திரும்பி பார்க்க, உடனே அவள் அவசரமாக பார்வையை திருப்பிக்கொண்டதை கவனித்த நிரஞ்சன் இதழில் மலர்ந்த புன்னகையுடன் விரைந்து வெளியேறினான்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Last edited:
Back
Top