Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

07. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மாணிக்கம் மகளிடம் திருமண விஷயத்தை சொல்லவில்லை. மாறாக மகளுக்கு அவர் பெரிதாக ஒன்றும் சேர்த்து வைக்கவில்லையே, ராஜகுமாரன் போன்ற மாப்பிள்ளை அவரது வீட்டுப் பெண்ணை கேட்டு வந்திருக்கிறான். அவனுக்கேற்ற ராஜகுமாரிதான் மகள். ஆனால் அந்த குடும்பத்திற்கு மகளை வெறும் கையோடு எப்படி அனுப்புவது? கல்யாணத்தில் அவளுக்கு பொன் வைக்கும் இடத்தில் பூவைப்பது போல காது கழுத்திற்கு என்று பெரிதாக நகை எதுவும் சேர்த்து வைக்கவில்லை. இருக்கும் வீட்டை விற்றால் நல்ல தொகை கிடைக்கும் தான். அதை வைத்து திருமணத்தை சற்று கௌரவமாகவே நடத்தலாம். அதையும் இப்போது மகள் பெயருக்கு மாற்றியாகிவிட்டது. அதை விற்க அவள் சம்மதித்தாலும், பின்னாளில் அவளுக்கென்று எதுவும் பிடிமானம் இருக்காதே என்று மனதிற்குள்ளாக வைத்து போராடிக் கொண்டிருந்தார்.

இது எதுவும் அறியாத மதுவந்தி, பரீட்சையில் கவனமாக இருந்தாள். தந்தை தன்னிடம் திருமணம் பற்றி பேசாதது அவளுக்கு பெரிய விஷயமாகப் படவில்லை. அவளைப் பொறுத்தவரை அவள் தான் மனோகரியின் மருமகள் என்று தெரிந்துவிட்ட பிறகு அவளது மனம் அமைதியாகிவிட்டது. முழுமூச்சாய் படிப்பில் மூழ்கிவிட்டாள்.

மனோகரியும் பிறைசூடனும் கூட வெளியே போவதும் வருவதுமாக பெரும்பாலும் வீட்டிலேயே தங்கவில்லை.

இடையில் கிடைத்த சமயத்தில் மதுவந்தி, மனோகரியின் வீட்டிற்கு சென்ற போது" அப்பா ஏதும் சொன்னாராம்மா?" என்று வினவினாள் பெரியவள். இல்லை என்று பதிலிறுத்தாள். உண்மையும் அதுதானே? தனக்கு தெரிந்திருந்த போதும் முறையாக அவளிடம் வராத செய்தியைப் பற்றி எப்படி கூற இயலும்?

பரீட்சை முடிய இரண்டு தினங்கள் இருந்த நிலையில் பிறைசூடன் தம்பதி மும்பைக்கு கிளம்பிய போது தங்கள் விலாசம் மற்றும் கைபேசி எண்ணையும் கொடுத்துச் சென்றிருந்தனர். மனோகரியைப் பிரிந்ததில் மதுவந்திக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இத்தனை கஷ்டமாக இருக்கும் என்று அவள் எண்ணவில்லை. ஆனால் தினமும் மனோகரி கைப்பேசியில் அழைத்து பேசியதால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஒருவழியாய் பரீட்சை முடிந்துவிட பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால் அதன் பின் பொழுது போவதே தெரியாமல் போகும் நிலை வரப்போவதை அப்போது மதுவந்தி அறியவில்லை.

எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள்தானே வாழ்வின் சுவாரசியங்கள்?? ஆனால் சில நேரங்களில் அவை என்னமாதிரி வாழ்வை புரட்டிப் போடும் என்றும்தான் யார் அறிவார்??...

விடுமுறை விட்டு ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில்...

அன்று வழக்கம் போல மாணிக்கம் பணிமுடிந்து வரவேண்டிய நேரம் கடந்துவிட்டது. அப்படி ஆகும் போது தகவல் கொடுத்துவிடும் தந்தை அன்று போன் செய்யவில்லை. மதுவந்தி கதை புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருந்தவள் படித்து முடித்துவிட்டு மணி பார்த்த போது மனம் பதற ஆரம்பித்தது.

கைபேசியில் தந்தையை தொடர்பு கொள்ள எண்ணிய வேளையில் அவளது கைபேசி ஒலிக்க பதற்றமாய் எடுத்தாள். திரையில் தந்தையின் எண்ணைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். அதுதான் அவள் நிம்மதியாக இருந்த கடைசித் தருணம்.

கைபேசியை உயிர்ப்பித்து "ஹலோ அப்பா" என்று ஆவலுடன் அழைத்தால், எதிர் முனையில் வேறு யாரோ பேசினார்கள். மீண்டும் பதறிய மனதை அடக்கிக் கொண்டு பேச்சை கவனித்தவளின் முகம் வெளிறிப்போயிற்று.

சொல்லப்பட்ட செய்தி இதுதான், அவளது தந்தை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிக்கிறார் என்பது தான். அவள் வாழ்வின் ஆதாரமாய் இருக்கும் தந்தைக்கு ஆபத்து என்றதும், மதுவந்தி நிலைகுலைந்து போனாள்.

ஆனால் அழவோ அரற்றவோ இது நேரமில்லையே. வீட்டைப்பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள். தெருமுனையிலேயே தெரிந்த ஆட்டோக்காரர் அப்போதுதான் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவர் மதுவந்தி விஷயத்தை சொல்லவும் உடனே வர சம்மதித்தார்.

அந்தத் தனியார் மருத்துவமனையின் வரவேற்பறையில் விசாரித்து தந்தை தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்ட விபரத்தை பெற்றுக் கொண்டு கண்ணீரை அடக்கியபடி மாடிப் படிகளில் விரைந்தாள் மதுவந்தி!

தீவிரச்சிகிச்சைப் பிரிவில் உள்ளே போகக் கூட அனுமதிக்கவில்லை. இன்னமும் அபாயக்கட்டத்தில் தான் இருக்கிறார் என்று அங்கே இருந்த நர்ஸ் தெரிவித்தாள், மேலும் முன் பணமாக ஒரு தொகையை கட்டச் சொன்னாள். அதைக் கேட்டதுமே மதுவந்திக்கு திகைப்பாக இருந்தது.

அவள் கொணர்ந்த பணம் ரொம்பவும் குறைவு அதுவே அவள் சிறுக சிறுக சேர்த்து வைத்தது தான். மேற்கொண்டு பணத்திற்கு கையில் நயா பைசா இல்லை. வங்கிக் கணக்கிலும் கூட ஒரு சில ஆயிரங்கள் தான் இருக்கும். அதுவும் கூட போதுமா என்று தெரியவில்லை.

கையில் இருந்த பணத்தை கட்டி விட்டு காலைவரை அவகாசம் கேட்டுக்கொண்டு மறுபடியும் தந்தை இருந்த பிரிவுக்கு வந்த போது மருத்துவர் அப்போதுதான் வெளிவந்தார். அவரிடம் விரைந்து விபரம் கேட்டவளை யோசனையாய் பார்த்துவிட்டு, உன்னுடன் வேறு யாரும் வரவில்லையாம்மா? என்று வினவினார்.

எதை எதையோ எண்ணி கலங்கிய மனதை அடக்கி திடத்தை திரட்டிக் கொண்டு," வேற யாரும் இல்லை டாக்டர்! நான் அவரோட மகள்தான் எதுவென்றாலும் என்னிடம் சொல்லுங்கள்" என்றாள்.

டாக்டர் சுற்றிவளைக்காமல் நேரடியாக விஷயத்தை தெரிவித்தார். எங்களால் முடிந்தவரை முயற்சி செய்துவிட்டோம்மா இன்னும் 12மணி நேரம் கழித்துதான் எதையும் உறுதியாக சொல்ல முடியும்." எதற்கும் உன் உறவினர்களுக்கு தெரிவித்துவிடம்மா. என்றுவிட்டு நகர்ந்து சென்றுவிட..

மதுவந்தி கதிகலங்கிப் போனாள்."கடவுளே! காப்பாற்று, எனக்கு யாருமில்லை. என் அப்பாவை காப்பாற்று என்று கண்ணீர் மல்க மனதில் உருப்போட்டவாறு அமர்ந்திருந்தாள்.

ஆதரவற்றவர்க்கு இறைவனைத் தவிர இவ்வுலகில் உதவி செய்திட யார் உண்டு??
 
Back
Top