Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

06. அத்தியயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
வெளியே போய் வருவதாக தெரிவித்து வாசல் நோக்கி சென்ற பேரனை தடுத்து நிறுத்தினாள் காந்திமதி.

பாட்டியின் குரலில் திரும்பி நின்றானே தவிர, பேசாமல் பார்த்திருந்தான்.

"இதோ பாரு ராஜா. யாரோ ஒரு வயசுப் பெண்ணை கொண்டு வந்து வீட்டில் தங்க வச்சிருக்கிற விஷயம் வெளியே தெரிஞ்சா நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க? முதலில் அவளுக்கு ஒரு முடிவு செய்துவிட்டு நீ எங்கே வேண்டுமோ போய் வா" என்றாள் அழுத்தமான குரலில்.

ஒருகணம் எல்லோரையும் கூர்ந்து கவனித்துவிட்டு,"பாட்டி, நான் தான் அப்போதே தெளிவாக சொல்லிவிட்டேனே? அவள்தான் என் வருங்கால மனைவி என்று. அவளுக்காக வாடகைக்கு ஒரு வீடு பார்க்கிறவரைக்கும் நம் வீட்டில் தான் தங்கியிருப்பாள். இப்போது எனக்கு நேரமாகிறது நாங்கள் போய் வருகிறோம்"என்றுவிட்டு தனது வேக நடையுடன் வெளியேறினான்.

காந்திமதி ஆத்திரத்தில் மகனையும் மருமகளையும் திட்டத் தொடங்கிவிட்டாள்."அவன் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போகிறான். நீங்க பெத்தவங்க இரண்டு பேரும் இப்படி குத்துக்கல்லாட்டம் இருந்தால் எப்படி? பெற்றவள் நீ அவனை ஒரு வார்த்தை தட்டிக் கேட்காமல் இருந்தால், பாட்டி தான் கெட்டவள் என்று அவன் நினைக்கட்டும் என்பது தானேடி உன்னோட திட்டம்? இதோ பாருடா சத்யம், அந்தப் பெண்ணை இந்த வீட்டுக்கு மருமகளாக நான் ஒருநாளும் ஒத்துக்கமாட்டேன். நிகிதா தான் என் பேரனுக்கு பெண்டாட்டி. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது, அந்தப் பெண் என் பேரனை விட்டு, இந்த வீட்டை விட்டு விலகிப் போயாகனும். இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது"என்றுவிட்டு அவளது அறைக்கு சென்றுவிட, பின்னோடு சந்திரமதியும் சென்றாள்.

வடிவுக்கரசி,விட்டால் போதும் என்று வேகமாக பின்கட்டிற்கு விரைந்தாள். சத்யமூர்த்தி மனைவி வருத்தத்துடன் போகிறாள் என்று எண்ணினார். ஆனால் அவளது சிந்தனை எல்லாம் மருமகளிடம் இருந்தது. அதனால் மாமியார் பேசியது எதுவும் மனதில் படவில்லை. அவளது கோபமும் பெரிதாக பாதிக்கவில்லை.

☆☆☆

மலர்வதனி அவசரப்பட்டு விட்டோமே என்று தன்னையே நொந்து கொண்டிருந்தாள். அத்தை முன்னதாக ஏன் கிளம்புகிறாய் என்றதற்கு, இத்தனை காலமாக அத்தையிடம் பொய் சொல்லி அறியாத காரணத்தால் சட்டென்று உண்மையையே சொல்லி மாட்டிக்கொண்டாள். அதைத்தான் உளறினாள் என்றால், அடுத்து அவள் மனதில் இருந்ததையும் சொல்லி தொலைத்துவிட்டாள். அத்தை ஏன் எதற்கு என்று அறிந்து கொள்ளாமல் விடமாட்டாள். வாயில் இருந்து வெளிவந்த வார்த்தைகளை இல்லை என்று மறுக்க முடியாது. தவறுதலாக சொல்லிவிட்டாள் என்று அத்தையை நம்ப வைக்கவும் முடியாது. அத்தை பார்க்கத்தான் ஒன்றும் தெரியாதவள் போல தோன்றுவாள். ஆனால் ரொம்ப புத்திசாலி. இப்போது என்ன சொல்லி அத்தையை சமாளிப்பது என்று தெரியாமல் கலங்கிக்கொண்டிருந்தாள்.

☆☆☆

நிரஞ்சன் காரை ஓட்டிக்கொண்டு இருக்க அவன் அருகில் ஜாஸ்மின் அமர்ந்திருந்தாள்.

"கொஞ்சம் சீக்கிரம் போ, நிரஞ்ச். என்றாள் ஜாஸ்மின்

"ஏய் இதென்ன வெளிநாடா? வேகமாக போறதுக்கு? நீயே பார்க்கிறாய் தானே? எவ்வளவு ட்ராபிக் என்று. ஆனாலும் நீ கவலையே படாதே ஜாஸ், நாம் குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர்ந்து விடலாம்"

"ம்ம், அப்ப சரி" என்று இலகுவாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள் ஜாஸ்மின்.

"திரும்பும் போது எப்படி வருவாய்?" நான் வந்து பிக்கப் பண்ணிக்கவா?"

"இல்லை, அட்ரஸை மட்டும் கொடு, நான் வந்திருவேன். நீ அலைய வேண்டாம் நிரஞ்ச்"

"ஓகே, எனக்கும் கொஞ்சம் காய்ச்சல் வர்றமாதிரி இருக்கு. நான் ஹாஸ்பிட்டலில் காட்டிவிட்டு அப்படியே வீட்டுக்கு போகிறேன் ஜாஸ், நீ பத்திரமா வந்துவிடு. இல்லையென்றால் எனக்கு ஒரு போன் போடு, நான் நம்ம வீட்டு வண்டியை அனுப்பி வைக்கிறேன்".

ஜாஸ்மின் அவனது நெற்றியில் கைவைத்து பார்த்துவிட்டு, "ஏய் என்ன இது இப்படி நெருப்பாக கொதிக்கிறதே? நான் சாருவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடுறேன் நிரஞ்ச், நீ முதலில் ஹாஸ்பிடலுக்கு வண்டியை விடு, என்று பரபரத்தாள்.

"ஹேய், சாருவை disappoint பண்ணாதே ஜாஸ்மின். I will manage, என்றவன் போக்குவரத்தில் முன்னேறி , பிரானதான சாலைக்கு வந்து சற்று வேகமெடுத்தான்.

"Oh no Niranj, நான் சொல்வதை கொஞ்சம் கேள். நாங்கள் நாளைக்கு மீட் பண்ணிக்கிறோம்பா, உன் வீட்டில் சும்மாவே என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. இப்போது உனக்கு ஏதும் ஆகிவிட்டால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்"

"எனக்கு ஒன்றும் ஆகாது. நீ இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது"என்று அவளை அந்த பெரிய நட்சத்திர விடுதியில் இறக்கிவிட்டான்.

"சாருவை நான் இன்னொரு நாள் சந்திக்கிறேன் என்று சொல் ஜாஸ்மின். டேக் கேர்" என்று நிரஞ்சன் காரை நிறுத்தாமல் கிளப்பிக் கொண்டு செல்ல, ஜாஸ்மின் அந்த விடுதிக்குள் சென்றாள்.

☆☆☆

வடிவுக்கரசி சமையலறையை தாண்டிச் செல்லும் போது அங்கே சொக்கி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும், மாமியார் சொன்னது நினைவு வர, அவளிடம் சட்னியை அரைத்து வைக்கச் சொல்லிவிட்டு, மருமகளின் அறைக்கு சென்றாள்,

அங்கே மலர்வதனி குறுக்கும் நெடுக்குமாக பதற்றத்துடன் நடந்துகொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த வடிவுக்கரசி சட்டென்று கதவைத் தாழிட்டு விட்டு, மூச்சுவாங்க சிலகணங்கள் கதவின் மீது சாய்ந்து நின்றாள். உடனே மண்பானையிலிருந்து தண்ணீரை பிடித்து அத்தைக்கு குடிக்கக்கொடுத்தாள. குடித்ததும் சற்றே ஆசுவாசமாக கட்டிலில் அமர்ந்தவள்,

"நீயும் உட்கார் மலர், அப்போது ஏன் அப்படி சொன்னாய்? என்று நிதானமாக வினவினாள்.

"அ. அதுதான் சொன்னேனே அத்தை? அத்தான் கல்யாணம் வரை நான் ஹாஸ்டலில் தங்கிக்கொள்கிறேன். அப்புறம் இங்கே திரும்பி வந்து விடுவேன்"என்று மலர்வதனி சொல்ல,

"மலர், உன்னை வளர்த்தவள் நான். என்கிட்ட நீ தந்திரமாக பேசாதே. நீ வீட்டை விட்டு போவதைப் பற்றி ஏற்கனவே நான் முடிவு சொல்லிவிட்டேன். இப்போது நீ மழுப்பாமல் சொல்லுடி, எதுக்கு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னே? எனக்கு காரணம் தெரிஞ்சே ஆகனும்."என்றவளுக்கு லேசாக மூச்சு வாங்கியது.

ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த மலர் சிலகணங்கள் மௌனமாக,வெளியே தெரிந்த இருட்டை வெறித்துவிட்டு ஒரு பெருமூச்சை ஓசையின்றி வெளியேற்றிவள்,"சரி அத்தை காரணத்தை சொன்னால் நீங்கள் என் வேண்டுகோளுக்கு சம்மதிப்பீர்களா?" என்றாள்.

"இதோ பார் மலர், அங்கே உன் அத்தான் உண்டு பண்ணியிருக்கிற பிரச்சனையை எப்படி தீர்க்கறதுன்னு புரியாமல் நானும் மாமாவும் ரொம்ப குழம்பிட்டு இருக்கிறோம். இதில் நீ வேறு புதிதாக எதையாவது இழுத்து வச்சிடாதே" என்ற வடிவுக்கரசி தன்னோட நெஞ்சில் கையை வைத்து அழுத்தியவாறு, மேலே பேசமுடியாமல் அப்படியே கட்டிலில் சரிய,

"ஐயோ, அத்தை.. அத்தை உங்களுக்கு என்ன செய்யுது? என்று மலர்வதனி ஒருகணம் பதறிவிட்டு உடனே தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தாள். அப்போதும் அவள் எழாமல் போகவே, பணிப்பெண் மூலமாக காரை பின் வாசலுக்கு கொணர்ந்து நிறுத்தும்படி டிரைவருக்கு தகவல் அனுப்பினாள். அதன்படி கார் வந்து நிற்க, அதற்குள் சத்யமூர்த்தியை கைப்பேசியில் அழைத்து விவரம் சொல்ல அவரும் உடனே வந்து சேர்ந்தார்.

"என்னாச்சுமா வடிவுக்கு? என்று மனைவியின் நிலையை பார்த்து பதற,

"பயப்படாதீங்க மாமா, அத்தைக்கு ஒன்றும் ஆகாது. ஹாஸ்பிடலுக்கு போகனும், சீக்கிரம் அத்தையை தூக்குங்கள்"என்று துரிதப்படுத்த அவரும் நேரத்தை வீணாக்காமல் மனைவியை தூக்கிப் போய் காரின் பின்புறம் ஏற்கனவே அதில் ஏறியிருந்த மலர்வதனியின் மடியில் கிடத்திவிட்டு முன்புறம் சென்று ஏறிக்கொண்டார்.

மலர்வதனி பணிபுரியும் மருத்துவமனைக்குள் கார் சென்று நிற்க, ஏற்கெனவே அவள் கைப்பேசியில் தகவல் தெரிவித்திருந்ததால் அங்கே தயாராக ஸ்ட்ரெக்சருடன் வார்டு பாய்கள் காத்திருந்தனர். அதனால் சீக்கிரமே அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துப்போய் விட்டனர்.

சத்யமூர்த்தி மனைவியின் இந்த நிலைக்கு அவருடைய தாயும் அவரும்தான் காரணம் என்று எண்ணி கண் கலங்கினார். உட்கார மாட்டாமல் தவிப்புடன் அந்த அறையின் வாசலையே பார்த்தவாறு இருந்தார்.

அப்போது...
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top