Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

05. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
வடிவுக்கரசி சாப்பிட்ட தட்டுகளை கொணர்ந்து சமையல் அறையில் கழுவி வைத்துவிட்டு மணி பார்த்தாள். மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடத்தில் பேச்சு குரல் நின்றிருந்தது. அங்கே சென்றால் உட்கார்ந்த நிலையில் நிரஞ்சன் தூங்கிக்கொண்டு இருந்தான். மெல்ல தட்டி எழுப்பினாள்.

திடுக்கிட்டு விழித்தவன், அன்னையை கண்டு முறுவலித்தான்.

"என்னமா ரஞ்சி உட்கார்ந்து தூங்குகிறாய்? போய் உன் அறையில் படுத்து ஓய்வு எடுப்பா"

"உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் பிரிட்ஜில் ஐஸ்கிரீம் எடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் சாப்பிட வருவீர்கள், அப்போது சொல்லிவிட்டு போகலாம் என்று காத்திருந்தேன் அம்மா, அப்படியே கண்ணயர்ந்து விட்டேன் போல... ஆமாம் நீங்கள் சாப்பிட்டீர்களா இல்லையா?

வடிவுக்கரசியின் இதயம் வேகமாக துடித்தது. இன்றைக்கு மகனின் அன்பும் அக்கறையும் அவளை திக்குமுக்காட வைத்தது. பெற்றவளாக மகனிடம் கிடைக்கக்கூடிய சின்ன சின்ன சந்தோஷங்கள் அவளுக்கு கிடைக்கவில்லை. எப்போதும் பாட்டியுடன் தான் அவனது சிறுவயது கழிந்தது. அதன் பிறகு ஹாஸ்டல் வாசம். அப்போதும் வீடு வந்தால் அம்மாவிடம் ஒட்டியதில்லை. ஒருவேளை மாமியார் அவளை பற்றி தவறாக சொல்லி வைத்திருந்தாளோ என்னவோ? இந்த மூன்று வருடப் பிரிவு அவனை மாற்றிவிட்டதா? மனதில் ஏதேதோ யோசனை ஒருபுறம் ஓட,

"இன்றைக்கு வேலை அதிகம். சரியாக சாப்பிடமாட்டேனாம். அதனால் சாப்பிட்டுத்தான் ஆகணும் என்று மலர் ஒரே அடம். அவள் அடம் பிடித்தால் காரியம் நிறைவேறும் வரை ஓயமாட்டாள். அதுதான் வேறு வழியில்லாமல் அவளோடவே சாப்பிட்டேன்"என்று மகனுக்கு பதிலளித்தாள்.

நிரஞ்சன் புன்னகை மாறாமல்,"ம்ம் சரி அம்மா. நான் போய் கொஞ்சம் ஓய்வு எடுக்கிறேன். நீங்களும் களைத்துதான் தெரிகிறீர்கள். போய் ஓய்வு எடுங்கள்" என்று எழுந்தான்.

"மணி மூன்றாகிவிட்டது ரஞ்சி. அதனால் இப்போது போய் வேலையை ஆரம்பித்தால் தான் மாலையில் தேனீருடன் சிற்றுண்டியை பறிமாற முடியும்"என்று சமையல் அறைப் பக்கம் செல்ல முயன்றவளின் கைப்பற்றி நிறுத்தி, "நோ, அம்மா"என்று உறுதியான குரலில் கூறியவன், தொடர்ந்து,மதியம் சாப்பிட்டதே ராத்திரி சாப்பாடு செல்லுமா என்று இருக்கிறது. அதனால் சிற்றுண்டி எல்லாம் வேண்டாம் அம்மா. அப்படியே யாரும் கேட்டால் வீட்டில் நீங்கள் எப்போதும் முறுக்கு, சீடை எல்லாம், செய்து வைத்திருப்பீர்களே அதை தேனீருடன் வைத்து கொடுங்கள். இப்போது பேசாமல் போய் சற்று ஓய்வு எடுங்கள்"என்று பற்றிய கையை விடாமல் அழைத்துப்போய் அவளது அறையின் முன்பாக விட்டு அவன் மாடிக்கு சென்றான்.

மகனின் சொல்லுக்கு இணங்கி அறைக்குள் சென்றவளுக்கு ஐஸ்கிரீம் நினைவு வரவே அவசரமாக சென்று பிரிட்ஜில் இருந்து எடுத்துக்கொண்டு போய் மருமகளிடம் விவரம் சொல்லி கொடுத்து விட்டு ஓய்வெடுக்க சென்றாள்.

☆☆☆

அன்று மாலையில் வடிவுக்கரசி சற்று நேரம் ஓய்வாக படுத்திருந்துவிட்டு, வந்து பார்த்தால் அங்கே பிரட் அல்வா செய்து முடித்திருந்தாள் மலர்வதனி.

"சபாஷ் மலர், அல்வா சூப்பராக இருக்கிறது"என்று மருமகளை பாராட்டி அரவணைத்துக் கொண்டாள் அத்தை.

"ம்ம் நான் உங்கள் மருமகள் ஆயிற்றே அத்தை. நீங்கள் ஒன்றை ஆசைப்பட்டு அசை செய்யாமல் இருப்பேனா? சரி, சரி நான் போய் டூட்டிக்கு தயாரகிறேன். நைட் சாப்பாடு வேண்டாம் அத்தை நான் கேண்டீனில் பார்த்துக் கொள்கிறேன்" என்று கிளம்ப,

"இரு இரு மலர், இந்தா அல்வாவும் தட்டையையும் வச்சிருக்கிறேன், கையோடு கொண்டு போ, என்றவள் ஆமாம் இன்றைக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பறே? வழக்கமா 6மணிக்கு தானே கிளம்புவாய்?"

மலர் உடனே பதில் சொல்லவில்லை. மௌனமாக அத்தையை ஏறிட்டுவிட்டு, "அது வந்து அத்தை" என்று தயங்கினாள்.

"ஏய் என்னடி? என்ன விஷயம்? உன் முகமே சரியில்லையே? யாராவது ஏதாவது சொன்னார்களா? "

"சே சே அதெல்லாம் இல்லை அத்தை. இது நானாக எடுத்த முடிவு தான்"

"முடிவா? என்ன முடிவு? என்னனு சொல்லேன்டி. எனக்கு வயிற்றை பிசைகிறது"

"இனிமேல் நான் பெண்கள் விடுதியில் தங்கிக்கொள்ள முடிவு செய்து விட்டேன் அத்தை. அறை பார்க்க ஒரு தோழி வரச் சொன்னாள். அது தான் சற்று முன்னதாக கிளம்புகிறேன் அத்தை"

"என்னடி உளறுகிறாய்? உனக்கு பைத்தியமா என்ன? யாருக்கிட்டேயும் கலந்து கொள்ளாமல் நீயாக முடிவு எடுக்கும் அளவிற்கு பெரிய மனுஷியாகி விட்டயா? இதோ பாரடி நான் சொல்வதை நன்றாக கேட்டுக்கொள், நீ எங்கேயும் போகக்கூடாது. அப்படி போனால் என்னை " என்று சொல்லும்போதே சாப்பாட்டு அறை பக்கம் காந்திமதி வரும் அரவம் கேட்க, மருமகளை இழுத்துக்கொண்டு புழக்கடைப் பக்கம் சென்று,"நீ போனால் அப்புறம் இந்த அத்தையை உயிரோடு பார்க்கமாட்டாய்" என்றதும் சட்டென்று அவளது வாயைப் பொத்தியவள், கண்ணீர் பெருக,"ஐயோ அத்தை அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். உங்களை விட்டால் இந்த உலகில் எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் ஒன்றும் நிரந்தரமாக பிரிந்து போவதாக சொல்லவில்லையே அத்தை. அத்தான் கல்யாணம் ஆகிற வரைக்கும் நான் வெளியே இருந்து கொள்கிறேன். அப்புறமாக இங்கே வந்துவிடுவேன் அத்தை. ப்ளீஸ் அத்தை. எனக்காக ஒப்புக் கொள்ளுங்களேன்" என்று கெஞ்சினாள்.

"உன் அம்மா என்கிட்ட தான் உன்னை ஒப்படைச்சுட்டு போனாள். உனக்கு திருமணம் பண்ணி ஒருத்தன் கையில் பிடித்து கொடுக்கிறவரை நீ என்னோட பொறுப்புடி"வடிவுக்கரசிக்கு இறுகிய குரலில் கூற

"அத்தை நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை"என்று மலர்வதனி சொல்லிக்கொண்டு இருக்கையில் பணிப்பெண் சொக்கி அங்கு வந்து,"அம்மா உங்களை பாட்டிம்மா வரச் சொன்னாங்க" என்றாள்

மருமகளின் பேச்சில் ஒருகணம் அதிர்ந்து நின்ற வடிவுக்கரசி, சுதாரித்து "சரி, இதோ வர்றேன்னு சொல்லு" என்று அவளை அனுப்பிவிட்டு, "நீ உன் அறைக்கு போ. நான் இங்கே வேலை முடிச்சுட்டு வர்றேன். அதுவரை நீ எங்கேயும் போகக்கூடாது"என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு உள்ளே விரைந்தாள்.

சமையல் அறைக்கு வந்த பிறகும் வடிவுக்கரசிக்கு படபடப்பு அடங்கவில்லை. திடீரென்று மலர்வதனி இப்படி ஒரு முடிவிற்கு வர என்ன காரணம் என்று குழம்பினாள். மகன் ஒருவிதமான அதிர்ச்சி அளித்தான் என்றால் இவள் வேறு புதிதாக அதிர்ச்சி கொடுக்கிறாளே? மனதை ஒருவாறு நடப்பிற்கு கொணர்ந்து மாலை சிற்றுண்டியை தட்டுகளில் பரிமாறி எடுத்துப் போய் சாப்பாட்டு அறையில் அமர்திருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு வந்து யோசனையுடனே தேநீரையும் தயாரித்து கொண்டு போய் கொடுத்தபோது, சாப்பாட்டு அறை நிசப்தமாக இருந்தது. நிகிதா அவளது கைப்பேசியுடன் ஐக்கியமாகியிருந்தாள். சத்யமூர்த்தி யாரையும் நிமிர்ந்து பாராமல் சிற்றுண்டியில் கவனமாக இருந்தார். தாயும் மகளும் ஏதோ ஜாடையாக கண்களால் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது நிரஞ்சன் வெளியில் செல்ல தயாராகி அங்கு வந்தான். அவனுக்கும் சிற்றுண்டி, டீயை கொணர்ந்து பரிமாறிவிட்டு, நகர்ந்தவளிடம்,

"அல்வா பிரமாதம் அம்மா"என்ற மகனை பார்த்து அப்போது அவள் இருந்த மனநிலையில் கண்ணில் வலியோடு ஒப்புக்கு புன்னகைத்தாள்.

அன்னையின் பார்வையில் எதை உணர்ந்தானோ,மேலே பேசாமல் சாப்பிடுவதில் முனைந்தான் மகன்.

வடிவுக்கரசி்க்கு உடனடியாக மருமகளிடம் சென்று பேச வேண்டும் என்று மனம் தவித்தது. அதே சமயம் மாமியார் இரவுக்கு ஏதும் விசேஷமாக சமைக்கச் சொல்லிவிட்டால் அந்த வேலையை சற்று முன்னதாக ஆரம்பிக்க நேரும் என்பதால்,"அத்தை ராத்திரிக்கு என்ன சமைக்கட்டும்?" என்று வினவினாள்.

"ராத்திரி சாப்பாட்டுக்கு தான் நிறைய நேரமிருக்குதே. இட்லி அவிச்சுடு, சொக்கிட்டே சட்னியை மட்டும் அரைக்க சொல்லு, அதுகூட மதியம் வச்ச குழம்பும் இருக்குமே போதும்"என்று காந்திமதி சொல்லும்போதே

"நாங்கள் வெளியே போகிறோம் அம்மா. அதனால் எங்களுக்கு சாப்பாடு வேண்டாம," என்றவாறு சிற்றுண்டியை முடித்துவிட்டு எழுந்தான் நிரஞ்சன்.

"உட்காரு ராஜா, நீ வந்ததும் வராததுமாக பேச வேண்டாம் என்று உன் அப்பன் சொன்னதால் அப்போதைக்கு விட்டுவிட்டேன். ஆனால் இப்போது பேசி ஒரு முடிவு எடுத்ததாக வேண்டிய காட்டாயம் வந்துவிட்டது" என்று காந்திமதி சொல்ல,

"மன்னிச்சிடுங்க பாட்டி. நான் இப்போது உடனடியாக வெளியே கிளம்பியாக வேண்டும். எதைப் பேசுவதானாலும் நீங்கள் நாளைக்கு காலையில் பேசுங்கள்" என்று நிரஞ்சன் வாசல் நோக்கி நடக்க தொடங்க,

"நில்லு நிரஞ்சன், என்று கறாரான குரலில் கூறினாள் காந்திமதி.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Last edited:
Back
Top