Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

04. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
நிகிதா சாப்பாட்டிற்காக மாமன் வீட்டிற்கு காலேஜ் கட்டடித்து வந்ததாக கூற, அதை கேட்டு மருமகன் மகளை கிண்டல் செய்து சிரிக்கவும் சந்திரமதிக்கு ஆத்திரம் உண்டாயிற்று. ஆனால் இப்போது மகளை கண்டித்தால் வேறு எதையாவது உளறி வைத்து மானத்தை வாங்கி விடுவாள். ஏற்கனவே அண்ணன் மகன் போட்ட அஸ்திரத்தில் அவள் கட்டியிருக்கும் கோட்டையின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டது. அத்தோடு மகள் சொன்னதில் உண்மை இருந்ததாலும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள்.

பொதுவான பேச்சுக்களுடன் ஒருவாறு வடிவுக்கரசியை தவிர்த்து மற்றவர்கள் உணவை முடித்துவிட்டு கூடத்திற்கு வந்து அமர்ந்தனர்."வடிவு, ஐஸ்கிரீம் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடு, அப்படியே எனக்கு வெற்றிலை பாக்கு கொண்டு வா"என்று காந்திமதி சொல்ல,

"அம்மா இன்னமும் நீங்கள் சாப்பிடவில்லையே? முதலில் போய் சாப்பிடுங்கள்"என்ற நிரஞ்சன் நிகிதாவிடம் "நிக்கி,வெற்றிலை பாக்கு எங்கே இருக்கு என்று கேட்டு எடுத்துப்போய் பாட்டிக்கு கொடு", ஐஸ்கிரீமை நான் எடுத்து கொடுக்கிறேன்,என்றவாறு எழுந்து உள்ளே செல்ல, தாயும் மகளும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டனர்.

காந்திமதி பேரன் வந்தது முதல் வித்தியாசமாக நடந்து கொள்வதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அதைவிட வந்திருக்கும் பெண்ணை முதலில் வீட்டில் இருந்து எப்படி அகற்றுவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். முன்பு போல இப்போது அவள் சொல்லுக்கு பேரன் மதிப்பு கொடுப்பானா என்பது வேறு அவளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது.

உள்ளே சென்று கொண்டிருந்த வடிவுக்கரசி தான் கனவு ஏதும் காண்கிறோமா என்று தன்னை கிள்ளிப் பார்த்தாள், அதற்குள் அவளருகில் வந்துவிட்ட மகன்,

"கனவெல்லாம் இல்லை அம்மா. நிஜமே தான்"என்று அவளுக்கு மட்டுமாக கேட்கும்படி கூற, ஆனந்தக் கண்ணீருடன் மகனை ஏறிட்டாள்.

"ம்ம்ஹூம்,என்று அவளது கண்ணீரை துடைத்து,"அம்மா, முதலில் உட்கார்ந்து சாப்பிடுங்கள்"என்று அவளை ஒரு இருக்கையில் அமரச் செய்து இலையை போட்டு பறிமாறப் போனான் நிரஞ்சன்.

"இருக்கட்டும் ரஞ்சிமா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு நான் சாப்பிடுகிறேன். நீ பிரிட்ஜ்ஜில் இருக்கும் ஐஸ்கிரீம் எடுத்துப் போ, என்றபோது நிகிதா அங்கே வந்தாள்.

"நிரு மாமா, எனக்கு நிறைய ஐஸ்கிரீம் கொடுக்கனும் சரியா? என்றாள் நிகிதா.

"ம்ம் சரி சரி தர்றேன். நீ இதோ இருக்கிற வெற்றிலை பாக்கு தட்டை கொண்டு போய் பாட்டிக்கிட்ட கொடு"என்று அவளை அனுப்பிவிட்டு அன்னையின் புறம் திரும்பினான். அவள் ஐஸ்கிரீம் டப்பாவையும் பரிமாற தேவையான கிண்ணங்கள், ஸ்பூன்களை எடுத்து ஒரு ட்ரேயில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

"அட அம்மா இதெல்லாம் நான் செய்து கொள்கிறேன். நீங்கள் போய் சாப்பிடுங்கள்,"இதை கொடுத்துவிட்டு வந்து நான் சாப்பிடுகிறேன் ரஞ்சி என்று, மூடியிருந்த ஒரு தட்டை பணிப்பெண்ணிடம் தந்து அவளை முன்னே செல்லுமாறு பணித்துவிட்டு அங்கே ஏற்கனவே எடுத்து மூடி வைக்கப்பட்டு இருந்த இன்னொரு சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு பின்கட்டுக்கு செல்ல,"ஓஹோ மகாராணி வந்து சாப்பிட மாட்டாங்களோ? என்றான் ஏளனக்குரலில்.

வடிவுக்கரசி திடுக்கிட்டு திரும்பி மகனைப் பார்த்தாள். அன்னையின் முகத்தை பார்த்துவிட்டு, குரலை இயல்பாக்கி, "உங்கள் தம்பி மகளுக்கு தானே அம்மா அந்த சாப்பாடு? சாப்பிடும் போதே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் ஏன் நம்முடன் சாப்பிட வரவில்லை? என்ற கேள்வியில் அவளுக்கு மீண்டும் ஆச்சரியம் உண்டாயிற்று.

மாமியாரைப் பற்றி மகனிடம் கூற தயக்கமாக இருந்ததால் அதை குறிப்பிடாமல் விடுத்து,"ஆமாம் ரஞ்சி, என்ற வடிவுக்கரசி, மகனை ஆழமாக பார்த்து,"இதுபற்றி இப்போது பேச நேரமில்லை, அப்புறம் சாவகாசமாக உட்கார்ந்து எல்லாம் சொல்கிறேன். இப்போது நான் போய் கொடுத்துவிட்டு வந்து சாப்பிட வேண்டும். அங்கே உன்னை காணாமல் பாட்டி தேடி வருமுன்பாக அந்த ட்ரேயை எடுத்துக்கொண்டு கிளம்பு ரஞ்சிமா" என்றுவிட்டு வடிவுக்கரசி விரைந்து வெளியேறினாள்.

நிரஞ்சன் சிலகணங்கள் அவள் போவதைப் பார்த்திருந்து விட்டு அன்னை சொன்னதை செய்யப்போனான். அதற்கு முன்பாக இரண்டு கிண்ணங்களில் ஐஸ்கிரீமை எடுத்து பிரிட்ஜில் வைத்தான்.

☆☆☆

உணவு தட்டை வைத்து விட்டு பணிப்பெண் அகன்றதும், மேசை மீது இலையை போட்டு பதார்த்தங்களை பரிமாறினாள் வடிவுக்கரசி.

"என் அத்தை இது ?மஞ்சுவிடம் கொடுத்து அனுப்ப வேண்டியது தானே? 3வருடங்களுக்கு பிறகு உங்க பிள்ளை வந்திருக்கிறார். அவரோடு பேசிக்கொண்டிராமல் நீங்கள் இங்கே ஏன் வந்தீர்கள் அத்தை? என்று படபடத்த மருமகளை இருக்கையில் அமர வைத்து, "தினமுமா என்னால் வரமுடிகிறது மலர்? இன்றைக்கு நிறைய வகைகள் சமைத்திருக்கிறேன். எல்லாம் உனக்கும் உன் அத்தானுக்கும் பிடித்தமானது. நீ இதில் பாதியைக்கூட எடுத்து போட்டு சாப்பிட மாட்டாய் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் நானே வந்தேன் என்ற வடிவுக்கரசி குரலை வெகுவாக தணித்துக் கொண்டு,"அதுமட்டுமல்ல உன்னோட அத்தான் என் ஆசையில் மண்ணள்ளி போட்டுவிட்டான். அதை நினைச்சா ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உன்னைத் தவிர நான் யார்கிட்டேயும் இதுபற்றி பேச முடியாது. நான் முக்கியமாக இங்கே வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்"என்றாள்.

"அப்படி என்ன செய்துவிட்டார் அத்தை??"

"நான் உன்னை அவனுக்கு கட்டி வைத்து அந்த வீட்டுக்குள் அழைத்துக் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால் அவன் யாரோ ஒரு பெண்ணை கூடவே கூட்டிட்டு வந்து, அவளைத் தான் கல்யாணம் செய்துக்க போறேன்னு சொல்றான்டி, என்னால் அதை தாங்கவே முடியவில்லை மலர்",என்று குரல் தழுதழுக்க சொன்னாள்.

அத்தையின் ஆசையும், அத்தான் செய்திருக்கும் காரியமும் மலர்வதனிக்கு இருவித உணர்வுகளை தந்தது. ஒரு புறம் இன்ப அதிர்ச்சியாகவும் மறுபுறம் சற்று கஷ்டமாகவும் இருந்தது. அத்தை மகனைப் பற்றி பேசி பேசி அவளுள் அவன் மீது ஆசை உண்டானது உண்மைதான். ஆனால் அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று உணர்ந்து வீணாக கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாமல் மனதுக்குள் பொத்தி வைத்தாள். அதனால் இதற்காக அவள் வருந்தி ஆகப்போவது ஒன்றுமில்லை. இப்போது அத்தையை தேற்றுவதுதான் அவளது கடமை என்று எண்ணியவள், "அத்தை வாழப் போகிறவர் அவர்தானே? அது அவர் விரும்புகிற பெண்ணாக இருந்தால் நல்லது தானே? பெண் பார்க்க எப்படி இருக்கிறாள்? ?என்று மலர்வதனி இயல்பான குரலில் பேச,

வடிவுக்கரசி, கடுப்பாகி,"அடியேய் உன் வாழ்க்கை பறிபோகிறதே என்று எனக்கு வேதனையாக இருக்கிறது என்கிறேன். நீயானால் இப்பவே இரண்டு பேருக்கும் கல்யாணமே பண்ணி வச்சிடுவே போலிருக்கிறதே?" என்றாள் ஆதங்கத்துடன்.

"அத்தை எதுவும் நம்ம கையில் இல்லை எனும்போது சூழ்நிலையை அனுசரித்து போவதுதான் புத்திசாலித்தனம். குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால் அத்தானிடம் இதற்காக சண்டை போடாதீர்கள். அவர் படித்தவர். உலக ஞானம் உள்ளவர். அவர் பார்த்திருக்கும் பெண்ணும் நல்லவளாகத் தான் இருப்பாள் என்றவள் ஏதோ நினைவு வந்தவளாக,"ஆமாம் பாட்டி ஒன்றும் மறுப்பு சொல்லவில்லையா? அல்லது செல்லப்பேரன் என்று ஒப்புக்கொண்டு விட்டார்களா? என்றாள்.

"ம்க்கும்,அவங்களை பற்றி நல்லா தெரிஞ்சும் இப்படி கேட்கிறியே உன்னை என்ன செய்ய? கோபத்தில் கத்திவிட்டார்கள். எப்படியோ அந்த சமயத்தில் உன் மாமா நிலமையை சமாளித்து விட்டார். அத்தை அவங்க பேத்தியை கட்டி வைக்கனும்னு ஆசையோடு காத்திருக்காங்களே? அதனால் அப்படி சுலபமாக விட்டுவிடுவார்களா என்ன? சரி நீ சாப்பிடு மலர்,வேலைக்கு கிளம்பறப்போ ஒரு மெஸேஜ் அனுப்பு ராத்திரி் சாப்பாட்டை அனுப்பி வைக்கிறேன் என்ன? என்று எழுந்தவளிடம் "அத்தை இன்னும் நீங்கள் சாப்பிடவில்லை தானே?"

"எனக்கு பசியே இல்லையடி,சமையல் அறையை ஒதுங்க வைக்கனும். சாயங்காலத்துக்கு சிற்றுண்டி ஏதாவது செய்தாகனும். அதனால் நான் போய் அதை கவனிக்கிறேன்"

"அத்தை பேசாமல் இப்படி உட்காருங்கள் என்று கூறியவள்,நீங்கள் பரிமாறியதே எனக்கு போதும் அத்தை. இதோ இவ்வளவு சாப்பாடு இன்னமும் இருக்கிறதே, அதனால் இங்கே என்னோடு நீங்களும் சாப்பிடுங்கள்" என்று சற்று அதட்டலாக சொல்லவும் மறுக்காமல் அமர்ந்து சாப்பிட்டாள் வடிவுக்கரசி. அவர்கள் சம்பாஷணயை ஒரு ஜோடி காதுகள் கேட்டுக்கொண்டு இருந்ததையும் அவசரமாக அந்த உருவம் அங்கிருந்து அகன்றதையும் அவர்கள் இருவரும் அறியவில்லை.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Last edited:
Back
Top