Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

03. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
"ராஜா நீ சொல்லு யார் அந்த பெண்? என்று பாட்டி விசாரணையில் இறங்க ,சந்திரமதி தன் மகளை அண்ணன் மகனுக்கு கட்டிவைக்கும் ஆசையுடன் காத்திருந்தால், அதை தகர்ப்பது போல எவளையோ கூட்டி வந்து நிற்கிறானே என்று ஆத்திரம் உண்டாக, எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல... "அதுதானே? யார் எவர் என்று ஒன்றும் தெரியாமல் வீட்டுக்குள் எப்படி சேர்த்துக்க முடியும்? மருமகனே அவள் யார் என்று சொல்லு"என்று எடுத்துக் கொடுக்க,

நிரஞ்சன் தனியாக தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்துகிறவன். அதற்கு முன்பும் தந்தையுடன் அவன் சிறப்பாக பணியாற்றிய காரணமாகத்தான் அவன் தனியாக தொழில் தொடங்க நினைத்தபோது, தந்தை சம்மதித்தார். அவனது பாட்டிக்கும் அவனது வளர்ச்சியில் பெருமைதான்.

பாட்டிக்கு பிரியமான பேரன் அவன். அதனால் அந்த வீட்டில் அவன் எது கேட்டாலும் கிடைக்கும். பெற்றவளைவிட அவன் அதிகமான நேரங்களை பாட்டியுடன் தான் கழித்திருக்கிறான். இத்தனை ஆண்டுகளில் அவன் பாட்டியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான். அவளுக்கு பிடிக்காததை செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டாள். இருந்தாலும் பேரனுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் அவன் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை.

அதிலும் அவனது அம்மா மிகவும் அழகாக நிலைமையை சமாளிக்க முயன்றாள் தான். ஆனால் எப்போதுமே பாட்டி அம்மாவை மட்டம் தட்டித்தான் வழக்கம். அப்பாவும் இப்படித்தான் மனைவிக்கு ஆதரவாக பேசாமல் மௌனம் சாதிப்பார். இனியும் அதை அவனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. அதிசயமாக இன்றைக்கு அத்தையும் சேர்ந்து அம்மாவை திட்டாமல் விட்டுவிட்டாள். எப்போதுமே அம்மாவும் பெண்ணும் சேர்ந்துவிட்டால் மாட்டிக்கொள்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். இன்றைக்கு அவன் நிலையும் அப்படித்தான் ஆயிற்று. வந்ததும் வராததுமாக பாட்டி குறுக்கு விசாரணையில் இறங்குவாள் என்று அவன் எண்ணவில்லை. ஒத்து ஊத கூடவே அத்தையும் இருப்பாள் என்றும் தான்.

ஆயினும் அவன் தெரிவிக்க வேண்டியது கடமை. கட்டாயமும் கூட என்று உணர்ந்தவனாக, உடன் வந்தவளைப் பார்த்து கண்ணால் சைகை செய்துவிட்டு,"இவள் பெயர் ஜாஸ்மின். இந்தியப் பெண்தான். கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருந்தீர்களே பாட்டி? நான் போயிருந்த இடத்தில் இவளை சந்தித்தேன், பிடித்துப் போயிற்று. நீங்கள் எங்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். அதனால் அங்கேயே திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

ஆனால் இவள்தான் இந்தியக் கலாச்சாரம், தமிழ் பண்பாடு பற்றி எல்லாம் பேசி, பெரியவர்கள் உங்கள் முன்னால் முறைப்படிதான் திருமணம் நடக்கவேண்டும் என்று பிடிவாதமாக தடுத்துவிட்டாள். இல்லாவிட்டால் இந்நேரம் உங்கள் கையில் கொள்ளுப்பேரனை கொடுத்திருப்பேன்" என்று அலட்டிக்கொள்ளாமல் உரைத்து முடிக்க...

அங்கிருந்த எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சி உண்டாயிற்று

வடிவுக்கரசி உலகமறியாத பெண்ணான தம்பி மகளின் வாழ்க்கையை எண்ணி முதல் முறையாக கலங்கினாள். அவளை மகனுக்கு கல்யாணம் பண்ணி தன்னுடனே வைத்து பார்த்துக் கொள்ள நினைத்திருந்தாள். இனி அவளது மருமகள் கதி என்ன?? என்ற கவலை உண்டாயிற்று,

அதற்குள் அங்கே மாமியாரின் குரல் ஓங்கி ஒலிக்கவும் திடுக்கிட்டு மறுபடியும் கூடத்திற்கு விரைந்தவளுக்கு மாமியாரின் கோபத்திற்கு காரணம் பேத்தியை பேரன் ஒதுக்கி வேறு பெண்ணை விரும்புவதாக சொன்னதாலா? அல்லது வேற்று இனத்து பெண்ணை மணக்க விரும்புகிறேன் என்று சொன்னதாலா என்று குழம்பி நின்றாள்.

"ஐயோ, ஐயோ இந்த அநியாயத்தை நான் எங்கே போய் சொல்லுவேன். என் பேரன் இப்படி செய்வான் என்று நான் கனவுலகூட நினைக்கலையே?? தொழில் பண்ணப் போனால் அதை மட்டும் பார்க்காமல் இது என்ன புத்திடா? இங்கே உனக்குனு ஒருத்தி காத்துக்கிட்டு இருக்காளே? அவளை நினைச்சுப் பார்த்தியா? அவள் பிறந்ததில் இருந்து உனக்கு தான்னு உன்னோட அத்தை சொல்லிட்டு இருக்கிறாளே? எதையும் யோசிக்காமல் இப்படி ஒருத்தியை கூட்டிட்டு வந்து நிற்கிறியேடா? அவளோட குலம் கோத்திரம் எதுவும் தெரியாமல் நீ பாட்டுக்கு வீட்டுக்குள் அழைச்சிட்டு வந்திருக்கிறியே?

"அட பாட்டி எதுக்கு இவ்வளவு கோபம்? அத்தோடு இப்போது அம்மா சொன்னது போல் இதை எல்லாம் அப்புறமாக பேசுவோம். எனக்கு நல்ல பசி. பயண அலுப்பு வேற,ப்ளீஸ் பாட்டி புரிஞ்சுக்கோங்க"

வடிவுக்கரசிக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை. அவளுக்காக பேசியது மகன் தானா? மகனின் அன்பான வார்த்தைக்காக ஏங்கியிருந்த அந்த தாயின் மனம் குளிர்ந்தது.

"டேய் நான்... என்று காந்திமதி மேலே பேசுமுன் குறுக்கிட்டு, "அம்மா, தங்கச்சியையும் பாப்பாவையும் அழைச்சிட்டுப் போய் சாப்பிட வைங்க. அவன் இனிமேல் இங்கே தானே இருக்கப் போகிறான்? அதனால் எதுவானாலும் அப்புறமா பேசிக்கலாம்" என்ற சத்யமூர்த்தி தொடர்ந்து, "வடிவு, பிள்ளைங்க ரொம்ப தூரம் பிரயாணம் செய்து வந்திருக்காங்க, முதலில் களைப்பு நீங்க ஏதாவது குடிக்கக் கொடுத்து அனுப்பிட்டு ,சீக்கிரம் எல்லாருக்கும் இலை போடு, நானும் உடை மாற்றிவிட்டு வருகிறேன்,என்று அவரது அறைக்கு சென்றுவிட,

அங்கே சட்டென்று அமைதி பரவ, மகன் பேரனுக்கு சாதகமாக பேசுவது போல தோன்றினாலும் அப்போதைக்கு மறுத்து பேசாமல் மகளுடன் காந்திமதி சாப்பாட்டு அறைக்கு சென்றாள்.

ஜாஸ்மினுக்கு கண் ஜாடை காட்டிவிட்டு ஒரு மர்மப் புன்னகையுடன் தன்னுடைய அறை நோக்கி சென்றான் நிரஞ்சன்.

அதுதான் சமயம் என்று ஒரு பணிப்பெண்ணை அனுப்பி ஜாஸ்மினுக்கு விருந்தினர் அறையை காட்டிவிட்டு அவளுக்கு தேவையானதை செய்ய சொன்னாள் வடிவுக்கரசி.

☆☆☆

அங்கே வீட்டின் பின்புறம் இருந்த மலர்வதனியின் அறையில்...

வீட்டினுள் கேட்ட பாட்டியின் கோபக் குரல் கேட்டு எழுந்தவளுக்கு ஒன்றும் விவரம் புரியவில்லை. ஒரு கணம் அத்தானுக்கு தான் என்னவோ ஆகிவிட்டதோ என்று அவளது மனம் பதறிவிட்டது. ஆனால் அப்படி எதுவும் இருக்காது என்று உடனே மனதை அமைதி படுத்தியவள், அப்போது அந்தப் பக்கம் வந்த பணிப்பெண் செண்பகத்தை அழைத்து விவரம் கேட்க நினைத்தாள். ஆனால் எப்படியும் அத்தை அவளிடம் சொல்லத்தான் போகிறாள். அப்போது கேட்டுக்கொண்டால் போயிற்று. வீட்டு விஷயத்தை போய் அவளிடம் கேட்பானேன்? என்று அந்த எண்ணத்தை உடனே கைவிட்டாள். மெல்ல எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து அமர்ந்தவளுக்கு ஏதேதோ எண்ணங்கள் ஆட்கொண்டது.

இனி அவள் அந்த வீட்டுக்குள் போக முடியாது. சொல்லப்போனால் அவள் சற்று ஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும். முன்பென்றால் நிரஞ்சன் வரும் சமயங்களில் அறைக்குள் சிறை இருந்தாள். அதில் அவளுக்கு கஷ்டமாக இருக்கவில்லை. இப்போது அப்படி இல்லை. அவள் பணிக்கு சென்றாக வேண்டும். இந்த வாரம் பரவாயில்லை. இரவு நேரப் பணி. இரண்டு நாட்களில் பகல் வேலைக்கு போயாக வேண்டும். பொதுவாக அத்தை மகன் பின் பக்கம் வரமாட்டான். அவனது அறையில் நல்ல காற்றோட்டமான பால்கனி இருக்கிறது. அவனது பொழுதுகள் பெரும்பாலும் அங்கே தான் கழியும் என்று அத்தை மூலம் கேள்விப்பட்டிருக்கிறாள். இப்போதும் அப்படியே இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லாது போனால் பாட்டியம்மா அவளை அங்கே மேற்கொண்டு தங்கவிட மாட்டாள். அந்த மாதிரியானால் அவள் எங்கே போவாள்? இங்கே இருக்கும் பாதுகாப்பு எங்கே போனாலும் கிடைக்குமா என்ன? நொடியில் உலகை வலம் வரும் மனது கணக்கிட்டு அவளை கலங்க வைத்தது.

☆☆☆

சற்று நேரத்தில் கீழே சாப்பிட வந்து அமர்ந்த நிரஞ்சன், "நம்ம வீட்டு சமையலை சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு? என்று பதார்த்தங்களை பார்த்தவன்,"வாவ் அம்மா பறக்கிறது, ஓடுகிறது, மிதக்கிறது என்று எதையும் விட்டு வைக்கவில்லை போலிருக்கிறதே, மணமே இப்படி ஆளை தூக்குகிறதே, இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டப்போகிறேன்" என்றான்.



வடிவுக்கரசிக்கு உச்சி குளிர்ந்தது. சிறுவனாக இருந்தவரையில் அவனது விருப்பு வெறுப்புகளை பாட்டியிடம் தெரிவித்தானே தவிர,அவளது மகன் ஒருபோதும் அவளது சமையலை குறித்து பேசியதே கிடையாது. மகனுடைய இந்த திடீர் மாற்றம் ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் மனதுக்கு மகிழ்ச்சியை ஒருவித அமைதியை கொடுத்தது. அப்போது சாப்பாட்டு அறை வாயிலில் அரவம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க, நிரஞ்சன்,"ஹே, கமான் ஜாஸ்மின் ஏன் அங்கேயே நிற்கிறாய்? என்று அழைக்க, காந்திமதி குறுக்கிட்டு, "ராஜா, இங்கே நம்ம குடும்பமாக சாப்பிடும்போது முக்கியமான விஷயம் பேசுவோம். அவள் இந்த வீட்டுக்கு விருந்தாளி, அதனால என்றவள் மருமகளை விளித்து,"அந்த பொண்ணுக்கு அவளோட அறைக்கு சாப்பாடு அனுப்பி வச்சிடு" என்றதும்

ஜாஸ்மின் ஒரு கணம் அவனை நோக்கிவிட்டு திரும்பிச் செல்ல, வடிவுக்கரசி இரண்டு பணியாளர்களிடம் உணவு வகைகளை அனுப்பி வைத்தாள்.

நிரஞ்சன் திருப்தியுற்றவனாக சாப்பிடத் தொடங்கி விட்டு,"அம்மா இதென்ன புதுவகையாக இருக்கிறதே? கறிமாதிரி ருசி இருக்கிறது, கொத்துக்கறியில் செய்ததா? என்று வினவ,

வடிவுக்கரசிக்கு ஒருகணம் பேச்சே வரவில்லை. ஒருவாறு சுதாரித்து, "இல்லை ரஞ்சி, அது வாழைப்பூவில் செய்தது. அது ஒரு புத்தகத்தில் படித்ததாக மல..இல்லை, டிவியில் காட்டினார்கள். அதைப் போல செய்தேன்"

நிரஞ்சன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது."அருமையாக இருக்கிறது அம்மா. அந்த புது தினுசு முட்டை பொறியல் கூட ரொம்ப சுவையாக இருக்கிறது"என்று பாராட்ட கண்கள் குளமாயிற்று பெற்றவளுக்கு, அவசரமாக யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாள்.

"பேரன் தாயை பாராட்டியதை பொறுக்காமல் "ஆமாம், நீதான்டா மெச்சிக்கனும்,இப்போது எல்லாம் டிவியில் சமையல் நிகழ்ச்சிகள் பெருகிவிட்டது. உன் அம்மாவும் அதை பார்த்து தானும் செய்கிறேன் என்று எங்களை எல்லாம் சோதிக்கிறாள்" என்றாள் காந்திமதி.

அதுவரை சாப்பிட்டபடியே மொபைலில் நோண்டிக் கொண்டிருந்த நிகிதா, "போங்க பாட்டி, அத்தை சமையல் எப்பவும் சூப்பர் தான். அம்மா எப்பவும் சாம்பார், பொறியில், கறிகுழம்பு, மீன் குழம்பு அதை விட்டால் கருவாட்டு குழம்பு அவ்வளவுதான் செய்வாள். நான் இங்கே வர்றதே அத்தையோட சமையலுக்காகத்தான். அத்தை ஒவ்வொன்றும் தினுசு தினுசா செய்வாங்க, இன்னிக்கு நிரு மாமா வர்றதாலே அத்தை அதிகமான ஐட்டம் செய்திருப்பாங்கன்னு தான் காலேஜ் கூட கட் அடிச்சிட்டு கிளம்பி வந்தேன்."என்று விட்டு வாயில் கோழி வறுவலை எடுத்து அடைத்துக்கொள்ள,

"சரியான சாப்பாட்டு ராமி" என்று சிரித்தான் நிரஞ்சன்.

சந்திரமதி ஆத்திரத்துடன் மகளை நோக்கினாள்..
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Last edited:
Back
Top