Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

01. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மலர்வதனி தவிப்புடன் அந்த மருத்துவமனை வாசலில் நின்றிருந்தாள். இரவு ஷிப்ட் பணி முடிந்து காலையில் அவள் வீடு கிளம்பும் நேரம் மழை பொழிய தொடங்கிவிட்டது. சற்று நேரத்தில் நின்று விடும் என்று எதிர்பார்த்தால், அது ஆக்ரோஷமாக பெய்து கொண்டிருந்தது.

முன்தினம் ஞாயிற்றுக்கிழமை. அன்று ஒரு நாள் தான் அவளுக்கு ஓய்வு. அன்றைக்கு அவளது உடைகளை துவைத்து பெட்டி போட்டு வைப்பது, சற்று புத்தகம் படிப்பது என்று கழிப்பாள். ஆனால் பேரன் வரப் போகிறான் என்று வீட்டை புரட்டிப் போட்டு எல்லாம் சுத்தம் செய்து திரைசீலைகள் முதல் மிதியடி வரை மாற்றச் செய்திருந்தாள் வீட்டின் முதியவள் காந்திமதி. ஓய்வு எடுக்க நேரமின்றி அப்படியே உடல் சோர்வுடன் இரவு வேலைக்கு ஓடிவந்தாள். அவளது நல்ல நேரமாக அங்கே சற்று ஓய்வு கிடைத்தது. அதனால் காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு நேரத்தோடு போய் அத்தை வடிவுக்கரசிக்கு உதவலாம் என்று வெளியே வந்தால் மழை பிடித்துக்கொண்டது. இப்போது அவள் ஏதோ வேண்டுமென்றே தாமதமாக வந்தார்போல அந்த பாட்டியம்மாள் வசை பாடப்போகிறாள்.

ஒருவழியாக அரைமணி நேரம் கழித்து மழை அவள் மீது இரக்கம் கொண்டார் போல நிற்க, மலர் வேக வேகமாக பேருந்து நிறுத்தம் வந்தடைந்தாள். அங்கே வெகு நேரமாக பேருந்து வராததால் கூட்டம் அலைமோதியது. இன்றைக்கு இன்னும் தாமதமாக கூடாது என்று ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். வழக்கம் போல அந்த வீட்டின் பின்வாசல் வழியாக அவளது அறைக்கு சென்றபோது அத்தை வடிவுக்கரசி சூடான காபியுடன் வந்து சேர்ந்தாள்.

காப்பியை வாங்கிக் கொண்டு,"உங்களுக்கு இருக்கிற வேலையில் இது வேறு கொண்டு வரவேண்டுமா? நானே அங்கே வந்து குடித்துக்கொள்ளமாட்டேனா அத்தை ? என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.

"நீ இப்போது அங்கே வரவேண்டாம் என்று தான் நானே வந்தேன். நேற்று அத்தனை வேலையையும் பார்த்து விட்டு, வேலைக்கும் போய்விட்டு வந்திருக்கிறாய். இப்போது காப்பியை குடித்துவிட்டு ஒரு குளியல் போடு,இதோ செல்லோவில் உனக்கு பலகாரம் வைத்திருக்கிறேன். நீ சாப்பிட்டு நல்லா படுத்து ஓய்வு எடு. பாட்டியை நான் சமாளித்து கொள்வேன்" என்றாள் அத்தை.

பதில் சொல்லாமல் அத்தையை அணைத்துக் கொண்டாள் மலர். அவளது விழிகள் கலங்கியது.

"அட அசடு, எதுக்கு இப்போது கண்கலங்குறே? போ நான் சொன்னபடி செய்" என்று அவளது கண்களை துடைத்து விட்டு நகர்ந்தவளிடம்,"அத்தான் வருகிறார் என்று விதவிதமான பலகாரம் செய்யணும்னு பாட்டி சொன்னாங்களே அத்தை. நீங்கள் தனியாக எப்படி எல்லாம். .. அது வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் தான். ஆனாலும் நானும் வந்து வேலை செய்தால் ஒத்தாசையாக இருக்குமே..

"உன் அத்தான் வந்து அத்தனையும் சாப்பிடப் போகிறானாக்கும்? என் பிள்ளையைப் பற்றி எனக்கு தெரியாதா? பாட்டிக்கு பேரன் மேலே வச்சிருக்கிற பாசத்தை காட்ட இது ஒரு வழி. அத்தோடு அவங்க மகள் வேறு குடும்பத்தோடு வரப்போகிறாள். அதுதான் அதிகமாக செய்யறது. எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ ரெஸ்ட் எடு" என்று வடிவுக்கரசி மேலே நில்லாமல் சென்று விட்டாள்.

மலர்வதனிக்கு இந்த அத்தை மட்டும் இல்லையென்றால் அவள் என்ன ஆகியிருப்பாள் என்று நினைக்கக்கூட முடியவில்லை. அவளுக்காக அவ்வப்போது மாமியாரிடம் வாங்கிக் கட்டிகொண்டாலும் அது எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகமாக வளைய வருவாள். பொதுவாக அத்தையின் முகமே சிரித்தார் போலத்தான் இருக்கும்.

☆☆☆

வடிவுக்கரசியின் தம்பியின் மகள் தான் மலர்வதனி. அவளது தம்பி விஸ்வநாதன் ராணுவத்தில் வேலை செய்தபோது ஒரு வடக்கத்திப் பெண்ணை மணந்து கொண்டான். அதனால் அவனை இந்த வீட்டில் சேர்க்க கூடாது என்று விட்டாள் மாமியார்.
ஆனால் திடுமென ஒருநாள் அதிகாலையில் ஐந்து வயது பெண் குழந்தையுடன் வடிவுக்கரசியின் தம்பி மனைவி பூமிகா வீட்டு வாசலுக்கு வந்தாள். யார் செய்த நல்வினையோ அந்த சமயத்தில் மாமியார் காந்திமதி பேரனை அழைத்துக்கொண்டு அவளது மகள் ஊருக்கு சென்று இருந்தாள். நிற்ககூட முடியாமல் கையில் வைத்திருந்த பையுடன் படியிலேயே அமர்ந்து விட்டாள். அவளை உள்ளே வருமாறு அழைத்தும் மறுத்துவிட்டு, "என் கணவரை தீவிரவாதிகள் கொன்று விட்டதாக தகவல் வந்தது. அவரது உடல் கூட கிடைக்கவில்லை என்றார்கள். அவருக்கு பிறகு எனக்கு வாழ பிடிக்கவில்லை. அப்போதே நானும் உயிரை விட்டிருப்பேன். இது ஆண் குழந்தையாக இருந்தால் ஏதேனும் ஆசிரமத்தில் விட்டு நானும் போய்ச் சேர்ந்திருப்பேன். ஆனால் இது பெண் குழந்தை ஆயிற்றே.. அப்படி விட மனம் வரவில்லை ரொம்பவும் யோசித்து இங்கே அழைத்து வந்தேன். இந்த பையில் என்னோட நகைகள், இவளுக்காக போட்டிருக்கிற காப்பீடு விவரம், அது போக, வங்கிப் புத்தகம். எல்லாம் இருக்கிறது. எல்லாவற்றிலும் உங்களை என் பெண்ணிற்கு காப்பாளர் என்று குறிப்பிட்டு இருப்பதால் எந்த பிரச்சனையும் வராது. நான் போகிறேன். எங்கள் செல்வத்தை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவீர்கள் என்று நம்புகிறேன்"என்று யாசிப்பது போல பார்க்க, வடிவுக்கரசி கையைப் பற்றி அவளுக்கு உறுதியளிக்கவும், அதிலேயே நிம்மதியுற்றவள் போல சற்று நேரத்தில் மூச்சை விட்டிருந்தாள் அவள்.

அதன் பிறகு ஊரில் இருந்து வந்த காந்திமதி விவரம் அறிந்து வாரத்துக்கும் பூமிக்குமாக குதித்தபோது எப்போதும் மௌனம் காக்கும் சத்யமூர்த்தி,

"அம்மா இந்த வீட்டில் எத்தனை வேலையாட்கள் சாப்பிடறாங்க,தினமும் பசி என்று வந்தால் சாப்பாடு கொடுக்கிறோம். அதுபோல அந்த சின்னக் குழந்தையும் பசியாறட்டுமே? நாம அப்பா பெயரில் எத்தனையோ ஏழை பசங்களுக்கு படிக்க உதவி செய்யறோம். இந்த குழந்தைக்கும் செய்வோமே. அவளை வீட்டில் ஒருத்தியா நடத்த முடியலைன்னாலும் பரவாயில்லை அம்மா. யாரோ அனாதைப் பெண் குழந்தைக்கு ஆதரவு கொடுக்கிறதா நினைச்சுக்கோங்க. கடைசியாக ஒன்னு சொல்றேன் அம்மா. உங்களுக்கும் ஒரு பேத்தி இருக்கிறாள். அவள் நல்லா இருக்கனும்னு நீங்க நினைச்சா, இந்தக் குழந்தையோட பாவத்திற்கு ஆளாகாதீங்க. இதுக்கு மேலே உங்கள் விருப்பம்"அழுத்தமாக கூறினான். பொதுவாக அவன் தாயை எதிர்த்து பேசமாட்டான். அப்படி பேசினான் என்றால் அதில் உள்ளர்த்தம் இருக்கும் என்று தெரியும், கூடவே பேத்தியின் வாழ்வு குறித்து அவன் சொன்னது பலமாக பாதித்துவிட,

"நீ சொல்றதும் சரிதான் சத்யம், ஒரு மூலையில் இருந்துவிட்டு போகட்டும்"என்று காந்திமதி முடித்துவிட்டாள். அத்துடன் மலர்வதனியின் தாய் கொடுத்துவிட்டு சென்ற பணமும் நகையும் அவளது வாயை அடைத்தது எனலாம்.

வடிவுக்கரசிக்கு மாமியார் ஒப்புதல் அளித்ததே போதுமானதாக இருந்தது. மருமகளிடம் அதிகம் உருகி வழியாமல் அளவான அன்பும் கண்டிப்பும் காட்டி வளர்த்தாள். மாமியார் எப்படியும் வீட்டோடு வைத்து அவளை கவனிக்க விடமாட்டாள் என்று உணர்ந்து பக்கத்து ஊர் பள்ளியின் விடுதியில் சேர்த்துவிட்டாள். அதில் காந்திமதிக்கு ஒருவகையில் திருப்திதான்.

மலர்வதனி எதற்காகவும் அடம்பிடித்து அழுதது இல்லை. காரணம் அவளை இங்கு கூட்டிவந்த அந்த நெடுந்தூர பயணத்தில் விழித்திருந்த நேரமெல்லாம் "அம்மாவை தேடக்கூடாது. இனி அத்தை சொல்வதை கேட்க வேண்டும். எதற்கும் அடம்பிடித்து அழவே கூடாது. வதனி பாப்பாவை எல்லோரும் குட் கேர்ள்னு சொல்லனும், என்று சொல்லிக்கொண்டே வந்த அம்மாவின் வார்த்தைகள் அந்த ஐந்து வயது பிஞ்சு மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து போனதுதான்.

அன்று முதல் அவளுக்கு அத்தை சொல் தான் வேதம். மலர்வதனி வளரவளர அந்த வீட்டின் சூழ்நிலையையும் மனிதர்களின் போக்கையும் ஒருவாறு புரிந்து கொண்டாள். அத்தையை தவிர பாட்டிக்கு மறைத்து அவளிடம் அன்பை காட்டியவர் மாமா சத்யமூர்த்தி.

மலர்வதனிக்கு வீட்டின் பின்புறம் இருக்கும் பணியாளர்கள் குடியிருக்கும் வீடுகளில், ஒன்றில் ஒரு அறையை மட்டும் கொடுத்திருந்தாள் காந்திமதி. மற்ற அறைகளில் பழைய சாமான்களை போட்டு வைத்திருந்தாள். அவளுக்கு அதில் வருத்தமில்லை. சொல்லப்போனால் அந்த அறையே அவளுக்கு சொர்க்க போகம்தான். ஒரு மின்விசிறி. ஒரு கட்டில் மெத்தை பழையது என்றாலும் அதுவே வரமாக நினைத்தாள். எழுத படிக்க மேசை நாற்காலி. அவளது உடமைகளை வைக்க ஒரு அலமாரி. அறையுடன் அட்டாச்டு பாத்ரூம். வேளைக்கு சாப்பாடு, பாட்டிக்கு தெரிந்து வருஷத்திற்கு நாலு உடைகளும், தெரியாமல் இரண்டு உடைகளும் அத்தை கிடைக்கச் செய்தாள். அவளது அன்னை தந்து சென்ற நகைகளில் சிலவற்றை மாற்றி அவளது காது,கழுத்து, கைகளில் மாட்டிவிட்டிருந்தாள் அத்தை.பள்ளி படிப்பு முடிந்ததும் நர்ஸ் கோர்ஸில் சேர்த்து விட்டாள். படிப்பு முடிந்தபின் அவளை சத்யமூர்த்தி அந்த ஊரின் பெரிய மருத்துவமனையில் வேலை வாங்கிக் கொடுத்தார். ஆறு மாதமாக அவள் அந்த பணிக்கு செல்கிறாள். வீட்டிலும் சமையல் அறையில், மற்றும் பாட்டி சொல்லும் வேலைகளையும் செய்தாக வேண்டும். ஆனால் பெரும்பாலும் அத்தையே அவளுக்கு பதிலாக சில வேலைகளை செய்து விடுவாள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த வீட்டினுள் அவள் போய் வந்து கொண்டிருக்கிறாள். அதுவும் பாட்டி அழைக்கும் போது தான். அதற்கு காரணம் அத்தையின் புத்திரன் வெளிநாட்டில் இருந்தான். இன்று அத்தை மகன் வரப் போகிறான். இனி அவளுக்கு வீட்டு வேலைகளில் இருந்து விடுதலை. அவன் இருக்கும் போது அந்த வீட்டினுள் செல்லக்கூடாது என்பது பாட்டியின் உத்தரவு. அது எதற்கு என்று சின்னவளுக்கு புரியாமல் இல்லை. இத்தனைக்கும் அவள் சகல உரிமைகளும் உள்ளவள், என்றாலும் அவளால் அத்தைக்கு எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

மலர்வதனி ஏதேதோ எண்ணங்களில் ஆழ்ந்தபடி குளித்து, உணவை உண்டுவிட்டு சற்று நேரம் கைப்பேசியில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து குறித்து வைத்தவள், அசதியாக இருக்கவே அப்படியே கண்ணயர்ந்தாள்.

ஆனால் சற்று நேரத்தில், திடுமென கேட்ட பாட்டியின் கூச்சல் சத்தத்தால் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் மலர்வதனி.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
சூப்பர் அம்மா ♥️♥️♥️♥️♥️♥️இந்த கதை படிச்சிருக்கேன் அம்மா oncemore படிக்கபோறேன் 😄😄😄😄😄😄
 
Back
Top