Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

42. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
*அத்தியாயம் – 42*

விஸ்வநாதன் மகளிடம், அவர் உயிர் பிழைத்த கதையை சொல்லத் தொடங்கினார்.

நிரஞ்சன் மற்றும் சாரகேஷை அமர வைத்துவிட்டு, தானும் எதிரே அமர்ந்த மல்லிகா, பணியாளை விளித்து வந்தவர்களுக்கு குடிக்க பானம் கொண்டுவர பணித்தாள். இரு இளைஞர்களும் அறிமுகப் படலத்தை முடித்தபோது,"அங்கே வந்த நடுத்தர வயது மனிதர் கைத்தடியுடன் வந்தார்.

"வந்தவர்கள் மரியாதை நிமித்தமாக எழவும், கையமர்ததி அவர்களை அமரச் சொல்லி அவரும் ஓர் இருக்கையில் அமர்ந்தார்.

"இவர் என்னுடைய டாடி, மிஸ்டர் விஸ்வநாதன்"என்று அவரை மல்லிகா அறிமுகம் செய்துவிட்டு, அப்படியே,வந்தவர்களையும் அறிமுகம் செய்தாள்.

அப்போது விஸ்வநாதன், நிரஞ்சனை கூர்ந்து கவனித்துவிட்டு," தம்பி உன்னோட அம்மா பெயர் என்ன? என்றார்.

"வடிவுக்கரசி, ஏன் கேட்கிறீர்கள்? என்று நிரஞ்சனுக்கும் அந்த மனிதரை எங்கோ பார்த்த நினைவு மங்கலாக தோன்றியது.

"சொல்கிறேன் தம்பி, உங்க அப்பா பெயர் சத்யமூர்த்தி, உன் பாட்டி பெயர் காந்திமதி? சரிதானா? என்றார்

"ஆமாம் சார்.. உங்களுக்கு எப்படி தெரியும்? என்று வியந்தான் நிரஞ்சன். "எனக்கும் கூட உங்களை பார்த்தது போலத்தான் இருக்கிறது"என்றான் தீவிரமாக யோசித்தவாறு..

"ஏ...மாப்பிள்ளே, என்னை தெரியவில்லையா? நான் உன் விஸ்வம் மாமா என்றவர், ம்ம்... எப்படி ஞாபகம் இருக்கும்? நான் உன்னை கடைசியாக பார்த்தப்போ நீ சின்னப் பையன். பல வருஷங்கள் ஆகிவிட்டதே ? என்று சிரிப்பும் கண்ணீருமாக சொல்லிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.

அவர் சொன்னதை கேட்டுவிட்டு நிரஞ்சனும் பேச்சற்று திகைப்புடன் அமர்ந்திருந்தான். சில கணங்கள் அங்கு பலத்த நிசப்தம் நிலவியது.

"டாட்,என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க? ஏதாவது பிரச்சினையா? என்றாள் மல்லிகா கவலையுடன்.

ஒருவாறு சுதாரித்து கொண்ட விஸ்வநாதன், "அதெல்லாம் இல்லைம்மா..சந்தோஷத்தில் எனக்கு பேச்சு வரவில்லை, என்றவர்,"இவன் யார் தெரியுமா மல்லி? நான் எப்பவும் சொல்வேனே எனக்கு ஒரு அக்கா இருக்காங்க, அவர்களுக்கு ஒரு பையன் இருக்கிறான் என்று அவன் இவன்தான் மா"என்றார்.

"ஓ! நான் அவரைப் பார்த்ததும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன் டாட், எஸ், இப்ப நீங்க சொன்ன பிறகுதான் நினைவு வருது... நான் குழந்தையாக இருந்தபோது நீங்கள் இப்படித்தான் இருந்தீர்கள் என்றவள், முகம் மலர," இவர் வடிவுக்கரசி ஆன்ட்டியோட மகனா? வெரி கிளாட்டு மீட் யூ மிஸ்டர் நிரஞ்சன்"என்று மல்லிகா கை கூப்பினாள்.

பதில் வணக்கம் சொன்னான் நிரஞ்சன். ஆனால் அவனுக்கும் அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.. அத்தோடு அவன் மனது பாரமாகிப் போயிற்று.

அப்போதுதான் நினைவு வந்தவராக, சாரகேஷிடம், "தப்பாக நினைக்க வேண்டாம் தம்பி, பல வருஷங்களுக்கு அப்புறமாக அக்கா பிள்ளையை பார்த்ததில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்,"என்றார்.

"பரவாயில்லை சார், உங்க நிலைமை புரிகிறது, என்று புன்னகைத்தான்.

"அட இதென்னம்மா மல்லி, மாப்பிள்ளை சார்னு கூப்பிடுகிறார்? என்றதும்..

"அது வந்து ...கொஞ்சம் முன்னாடி நீங்க சொன்னதுதான், சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை என்றீர்களே, எனக்கும் இன்ப அதிர்ச்சியில் எனக்கும் வார்த்தை தடுமாறிவிட்டது" என்று சாரகேஷ் பதில் சொல்லவும் அங்கே லேசாக சிரிப்பொலி எழும்பியது... சிலகணங்கள் கழிய..

"மல்லி நீ மாப்பிள்ளைக்கு வீட்டை சுற்றி காட்டுமா, அப்படியே சமையலாளிடம் லஞ்ச் ரெடி பண்ண சொல்லிவிடுமா, இன்றைக்கு எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்"என்று அவளை அனுப்பி வைத்து விட்டு,

மருமகனிடம் திரும்பி "வீட்டில் எல்லோரும் சுகமா? ஆமாம் நீ எங்கே இங்கே? என்று விசாரித்தார்,

அதற்குள்ளாக ஒருவாறு சுதாரித்துக் கொண்ட நிரஞ்சன், "எல்லோரும் நல்லா இருக்கிறார்கள் மாமா. நான் இங்கே வந்து இரண்டு வருஷங்கள் ஆச்சு. ஒருத்தர் கூட பங்குதாரராக சேர்ந்து கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ் பண்றேன். அந்த பிராஜக்ட் இன்னும் 8 மாசத்தில் முடியுது... இங்கே இருக்கிறவர் தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டார். நான் அவ்வப்போது வந்து போனால் போதும் என்று ஏற்பாடு என்று தன்னைப் பற்றி தெரிவித்து விட்டு , "ஆமாம் நீங்கள் ஏதோ தீவிரவாதிகளிடம் சிக்கி... என்று தயக்கத்துடன் நிறுத்தினான்.

"ஓ! அவர்கள் என்னை கொன்றுவிட்டதாக செய்தி பரபரப்பி விட்டார்களோ? ஹூம்.. இப்படி நடப்பது தான்"என்று சில கணங்கள் அமைதியானவர் தொடர்ந்து,"சிக்கியது உண்மைதான். ஆனால் தருணம் பார்த்து நான் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியபோது ஒரு பள்ளத்தாகில் விழுந்து விட்டேன். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கிய என்னை அந்த பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். கண்விழித்த போது பழைய நினைவு இருக்கவில்லை. இடது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு, உள்ளே பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். அதனால் நான் கால் நடக்கும் அளவு குணமானதும் அந்த மருத்துவமனையிலேயே சொல்கிற வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். அப்போது வியாபார விஷயமாக இந்தியாவிற்கு வந்த ஒரு செல்வந்தர் விபத்துக்குள்ளாகி அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது பெயர் ஆனந்தன் அவருக்கு வசதி இருந்தபோதும் துணைக்கு என்று அருகில் இருந்து கவனிக்க யாரும் இல்லை. அதனால் நான் அவருக்கு ரொம்ப உதவியாக இருந்தேன். என்னை அவருக்கு பிடித்துப் போயிற்று. என் கதையை கேட்டுவிட்டு அவரோடு என்னை அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டார். பெரியவருக்கு ஒரே மகள். அவள் கல்லூரியில் படிக்கையில் காதல் என்று யாரிடமோ ஏமாந்து கைக்குழந்தையோடு திரும்பி வந்து மனநோயாளி ஆகிவிட்டிருந்தாள்.

நான் வந்தபோது மல்லிகா நான்கு வயது குழந்தை. என்னிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள். எனக்கு அவளிடம் பழகும்போது என் மகள் வதனியின் நினைவு அவ்வப்போது வரத் தொடங்கியது. அதனால் என்னை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து வைத்தியமும் பார்த்தார் அந்த நல்லவர். என்னோட நினைவு திரும்பிய போது இரண்டு வருஷம் ஓடியிருந்தது. என்னுடைய நிலையை புரிந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அங்கே ராணுவத்தில் நான் பிழைத்து வந்த விஷயத்தை தெரிவித்தேன். அப்போது அங்கே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், என்னால் தொடர்ந்து ராணுவத்தில் பணிபுரிய இயலாது என்று அனுப்பிவிட்டனர். எனக்கு அது சற்று வருத்தமளித்தாலும், வேறு வழியில்லை என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன் ஆனால் என் மனைவி, மகளை தீவிரமாக தேடத் தொடங்கினேன். என் மனைவிக்கு சொந்தம் என்று யாருமில்லை, என்றாலும் அவளுக்கு வட இந்தியாவில் தான் நல்ல பரிச்சயம். அதனால் நான் என் நட்பு வட்டத்தினரின் உதவியோடு எல்லா இடத்திலும் தேடினேன். ஆனால் அவர்கள் போன இடம் யாருக்குமே தெரியவில்லை.

அதனால் நான் மீண்டும் இங்கேயே திரும்பி விட்டேன். அப்போது தான் எனக்கு ஆதரவளித்தவருக்கு நன்றி கடனாக அவரது மகளின் நிலையைப் பார்த்து மனைவியாக ஏற்றுக் கொள்வதாக சொன்னேன். ஆனால் அவள் பூரண குணமடைந்த பிறகு, அவளும் சம்மதித்தால் அவருக்கு ஆட்சேபமில்லை என்று சொல்லிவிட்டார். அவளுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் கொஞ்சம் கொஞ்சமாக குணமாக ஆரம்பித்த சமயத்தில், ஒரு நாள் அவள் தற்கொலை செய்து கொண்டாள். அவளது மரணம், பெற்றவரை மிகவும் பாதித்து விட்டது.

அதனால் படுத்தபடுக்கையாகி விட்டார். அவர் இறக்கும் தருவாயில் பேத்தியையும் இந்த ஆஸ்தியையும் என்னிடம் ஒப்படைத்தார். நான் என் பெயரில் இருந்த நிலபுலன்களை விற்றுவிட்டு, அதில் வந்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு... இங்கேயே இருந்து விட்டேன். மல்லிகாவிற்கு அப்போது பதினைந்து வயது . அவளளோட அன்பு எனக்கு பெரும் மருந்தாக இருந்தது. நான் மனதார அவளை என் மகளாக ஏற்றுக்கொண்டேன், அவளும் மகளாக பாசம் காட்டினாள். அடிக்கடி உங்கள் எல்லோரையும் நினைப்பதோடு அவளிடமும் சொல்வேன். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறோம். திடீரென்று ஒரு பையனை விரும்புவதாக வந்து மல்லிகா சொன்னபோது எனக்கு சற்று அதிர்ச்சி தான். ஆனால் பையன் அவளுக்கு உடனே ஒப்புதல் தராததும் அதற்காக சொன்ன காரணங்களும் எனக்கு அவன் மீது மதிப்பு உண்டு பண்ணியது. அதனால் தான் அவன் மனதை அறிய அந்த பரீட்சை வைத்தோம்"என்று
புன்னகை செய்தார்.

நிரஞ்சன் பிரம்மை பிடித்தவனாக அமர்ந்திருந்தான். விஸ்வநாதன் கடைசியில் சாரகேஷ் பற்றி பேசியது எதுவுமே கருத்தில் பதியவில்லை. மாறாக அவனுக்கு ஐந்து வயது மலர்வதனி கண்முன்னே வந்து போனாள். அதன்பிறகு அவளை அவன் பார்க்காததும் நினைவு வந்தது. அந்த கணத்தில் ஏன் அப்படி செய்தோம் என்று தன்னையே நொந்து கொண்டான். மாமா சிறுபிள்ளையில் அவனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியதைக் கூட மறந்து போனானே? அவையும் கண்முன்னே தோன்ற உள்ளம் அவனை சுட்டது. இன்றைக்கு பார்த்ததுமே அவரது வழக்கம்போல மாப்பிள்ளே என்றாரே, அவன் அவரது மகள் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ காரணமாகிவிட்டான். நினைக்க நினைக்க, உட்காரமாட்டாமல் சட்டென்று எழுந்துவிட்டான்.

அவன் முகத்தையே பார்த்திருந்த விஸ்வநாதன் குழப்பத்துடன்,"என்னாச்சு மாப்பிள்ளே? அந்த பையன் சரியில்லையா? என்றதும் தான் சுதாரித்தான்.

அப்போது தான் நடப்பிற்கு திரும்பிய நிரஞ்சன், அவர் கேட்ட விஷயத்தை உள்வாங்கி, "அவன் ரொம்ப நல்ல பையன் மாமா. அவனை நம்பலாம். என்ன ஒன்று அவனுடைய கடமைகளை முடிக்கிற வரை மல்லிகா காத்திருக்க வேண்டும் என்கிறான், அது நியாயம் தானே?"என்றான்

"ஆமாம் மாப்பிள்ளே, என் மகள் நிச்சயமாக காத்திருப்பாள்" என்றவர், "ஆனால் நீ எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தடுமாறிட்டு இருக்கிறே போலத் தோனுது என்ன விஷயம் என்று சொல்லுப்பா"

"என்னை முதலில் நீங்கள் மன்னிக்க வேண்டும் மாமா, என்ற நிரஞ்சனின் குரல் வேதனையில் தழுதழுப்பதை உணர்ந்து,

"அட என்ன மாப்பிள்ளே, எதுக்கு இப்ப மன்னிப்பெல்லாம் கேட்கிறே? விஷயம் என்னவென்று முதலில் சொல்லுப்பா"என்று அவனது கையை பற்றி தட்டிக் கொடுத்தார்.

அதன்பிறகு நிரஞ்சன் ஒன்றையும் மறைக்கவில்லை. அவன் அன்று வரை அறிந்ததையும், நடந்து கொண்ட முறையையும்.. மலர்வதனி இப்போது எப்படி இருக்கிறாள் என்பது வரையிலும் சொல்லி முடித்தவன்,"இந்த நிமிடம் முதலாக உங்கள் பெண்ணின் நல்வாழ்வுக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் மாமா. ப்ளீஸ் மாமா என்னை தயவுசெய்து மன்னித்தேன் என்று சொல்லுங்க" என்றவனை கட்டிப்பிடித்து,

"நிரஞ்சன், உண்மையாகவா? என் மகள் வதனி உயிரோடு இருக்கிறாளா? கடவுளே,
எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான செய்தியை கொடுத்திருக்கிறாய் தெரியுமா மாப்பிள்ளே? என்றவாறு அவனை விடுவித்தவர், தொடர்ந்து, "அவளை உங்கள் வீட்டில் எப்படி வைத்திருந்தாலும் பரவாயில்லைப்பா. அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதே எனக்கு எத்தனை நிம்மதியாக இருக்கிறது தெரியுமா? எனக்கு அவளை உடனே பார்க்க வேண்டும் மருமகனே, அவள் புகைப்படம்? என்றவர், நீதான் அவளை பார்த்ததில்லை என்றாயே, சரி நான் இந்தியா போய் அவளை அழைத்து வந்துவிடுகிறேன்"என்றார் விஸ்வநாதன் உணர்ச்சிவசப்பட்டவராக...

"மாமா, ப்ளீஸ் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். அப்புறமாக முடிவுக்கு வாருங்கள்" என்றபோது வீட்டை சுற்றிப்பார்க்க சென்ற மல்லிகாவும் சாரகேஷும் திரும்பி வந்து அமர்ந்தனர்.

"என்ன இரண்டு பேரும் ரொம்ப தீவிரமாக விவாதித்து கொண்டிருக்கிறீர்கள் போல" என்றாள் மல்லிகா.

"மல்லி, ஒரு குட் நியூஸ். உன் அக்கா வதனி உயிரோடு தான் இருக்கிறாளாம்" அதுதான் நான் போய் அழைத்து வரலாம் என்கிறேன். ஆனால் இவன் வேண்டாம் என்கிறான்,"என்று விஸ்வநாதன் வருத்தத்துடன் சொல்ல.

"வாவ், சூப்பர் டாட்." என்று கைத்தட்டி மகிழ்ந்த மல்லிகா,"ஏன் சார் வேண்டாம் என்கிறீர்கள்? என்று நிரஞ்சனிடம் விளக்கம் கேட்டாள்.

நிரஞ்சன் சுருக்கமாக விவரம் சொல்லிவிட்டு,"வதனியை உரிய மரியாதையோடு அந்த வீட்டிற்குள் அழைத்துப் போன பிறகு, மாமா உரிமையோடு அங்கு வருவது சரியாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்". என்று விளக்கம் கொடுத்தான்.

"ஓ கமான் டாட், இத்தனை காலமாக பெரியம்மா , அக்கா பற்றி எதுவும் தெரியவில்லையே என்று நீங்கள் வருத்தபட்டுட்டு இருந்தீர்கள். இப்போது அவள் நல்லபடியாக இருக்கிறாள் என்று சந்தோஷப்படுங்கள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. எட்டு மாதம் எட்டு நிமிடமாக மறைந்து போகும், என்ற மல்லிகா தொடர்ந்து ..." நிரஞ்சன் சார் சொல்றது தான் சரி டாட். இந்த சில மாதங்களில் நாமும் அங்கே என்ன மாதிரி செயல்படவேண்டும் என்று எல்லோருமாக சேர்ந்து திட்டமிடுவோம்" என்று உற்சாகமாக சொல்ல மூவரின் முகங்களும் பிரகாசமாயிற்று..

அவர்கள் போட்ட திட்டத்தின்படி, நிரஞ்சன் வெளிநாட்டில் இருந்து வந்தபோது, மற்றவர்கள் அவனை சந்தேகமாக பாராமல் இருப்பதற்காக முதல் கட்டமாக வரும் போதே பெரிய அதிர்ச்சியாக மல்லிகா என்கிற ஜாஸ்மின்னை வருங்கால மனைவி என்று அறிமுகம் செய்து நாடகத்தை அரங்கேற்றினான். அடுத்ததாக மலர்வதனியை பார்த்து பேசி பழக வேண்டும். அவளை அந்த வீட்டில் ஒருத்தி என்பதை உணரச்செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தான். இதற்கிடையில் விஸ்வநாதனுக்கு மலர்வதனியின் புகைப்படங்களை அனுப்பி வைக்கவும், அவர் உடனே இந்தியாவிற்கு கிளம்பி வந்துவிட்டார். அதற்குள்ளாக இங்கு நிரஞ்சனுக்கு விபத்து நேர்ந்து விட்டது...

எல்லாமும் கேட்டுவிட்டு சில கணங்கள் அப்படியே ஸ்தம்பித்து போய் அமர்ந்து இருந்த மலர்வதனிக்கு, தந்தை அவளை தேடினார் என்பதிலேயே மனம் அமைதியாகிவிட்டது. ஆனால் உயிர் பிழைத்ததை சொந்த சகோதரியிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று நினைத்ததோடு கேட்கவும் செய்தாள்.

"உன் அத்தையோட மாமியார் பத்தி தெரிஞ்சும் நான் அவளோட எப்படிம்மா தொடர்பு கொள்ள முடியும்? என்னால் அக்காதான் பாதிக்கப்படுவாள். உன் அம்மா அங்கே போவாள் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஏனென்றால் அந்த பக்கம் அவள் வந்ததே கிடையாது. அதனால் உன்னை அவள் அங்கே சேர்ப்பாள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் வேறு மாதிரியாக முடிவெடுக்காமல், அப்படி செய்ததும் ஒருவிதத்தில் சரிதான் என்று நினைக்கிறேன் வதனி, என்றவர்,

இத்தனை காலமாக என்னை உயிர்ப்போடு இருக்க உதவியவள் மல்லிகா தான். அவள் கிடைத்ததில் இருந்து தான் எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உண்டாயிற்று. அவளுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். ஆனால் அதை எல்லாம் நினைத்து அவள் துவண்டு விடவில்லை. நாங்கள் இருவரும் உறவு முறையில் அப்பா மகள் தான். என்றாலும் பெரும்பாலும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். நம் குடும்பத்தில் இன்னொரு நபராக நீ வரப்போகிறாய் என்றதும் அவளது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. சொல்லப்போனால் அவள்தான் அந்த திட்டத்தை போட்டவள் என்ற விஸ்வநாதன்,"ஒன்று கேட்கவா வதனி? உண்மையை சொல்ல வேண்டும்! என்றார்.

"நீங்கள் என்ன கேட்கப்போறீங்கன்னு புரியுது அப்பா. மல்லிகாவை மகளாக ஏற்றதில் எனக்கு எந்த சங்கடமோ கோபமோ இல்லை. சொல்லப்போனால் நான் இப்போது உங்களோடு பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் அவள்தானே? சாரகேஷை மட்டும் அவள் காதலித்திருக்காவிட்டால் நாம் ஆளுக்கொரு திசையில் வாழ்ந்து மடிந்திருப்போம் அப்பா"என்றாள் மலர்வதனி.

"உண்மைதான் வதனி. நீ இப்போது சொன்ன கோணத்தில் நான் யோசித்துப் பார்க்கவே இல்லைம்மா"என்ற விஸ்வநாதன், "சரிம்மா நீ உடை மாற்ற வேண்டுமானால் அந்த அறையில் போய் மாற்றிக்கொள். அந்த அறை உனக்குத்தான் வதனி"என்றார்

"சரி அப்பா, ஆனால் மல்லிகா எங்கே தங்குவாள்? அவளும் நானும் அறையை பகிர்ந்து கொள்கிறோம்" என்று மலர்வதனி எழுந்தாள்.

"இல்லை வதனி. மல்லிகா அங்கே தான் தொடர்ந்து தங்கப் போவதாக சொன்னாள். அதாவது பாட்டி மனசு மாறுகிற வரை"

"ப்ச்சு... எனக்கு அவங்க மாறுவாங்கனு நம்பிக்கையே இல்லை அப்பா. பாவம் மல்லிகா தேவையில்லாமல் பாட்டிக்கிட்டே திட்டு வாங்கப் போகிறாள். என்னை கேட்டால் நாம் மூவரும் இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அத்தைக்காகத்தான் யோசிக்கிறேன்" என்று அறையை நோக்கி சென்றாள்.

விஸ்வநாதனும் எழுந்து ஜன்னல் பக்கமாக நின்று வெளியே ஆங்காங்கே விளக்குகள் ஒளிரத் தொடங்கியிருந்தது ரம்மியமாக இருக்கவே, வேடிக்கை பார்த்தவாறு நின்று மகள் சொன்னதைத்தான் அவரும் நினைத்தார். அக்காவின் உடல்நலம் கெடாதிருந்தால் அவர் நிச்சயமாக மகள்களுடன் கிளம்பியிருப்பார். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த அம்மாள் ஆட்டம் போடுவார் என்று பார்க்கலாம்" என்று நினைத்துக் கொண்டார்.
☆☆☆
அங்கே நிரஞ்சன் வீட்டில்...

நாலரை மணியை கடந்து சற்று தாமாதமாக எழுந்த வடிவுக்கரசி, பக்கத்து அறையில் மலர்வதனியின் தலைவலி பற்றி விசாரிக்கலாம் என்று கதவைத் தட்டினாள்.. சத்தமின்றி போகவும் இன்னும் தூங்குகிறாள் போல என்று எண்ணிக்கொண்டு கீழே சென்றாள்.

மாலை சிற்றுண்டியை செய்து முடித்துவிட்டு மேசையில் கொணர்ந்து வைத்தவள், மஞ்சுளாவை விளித்து மகனை அழைத்து வரச் சொல்லிக் கொண்டிருக்கையில்,காந்திமதி வந்து சாப்பாட்டு அறையில் அமர்ந்தாள்.

"ராஜா பையன் எப்ப திரும்பி வந்தான்? என்னை வந்து ஏன் பார்க்கலே? என்றாள் முதியவள்.

"அது வந்து அத்தை..நீங்க அப்பத்தான் தூங்கப்போனீங்க,. இன்னொரு விஷயம் அத்தை, அவன் போயிருந்த இடத்தில் அடிபட்டு, நெற்றியில் பிளாஸ்திரி போட்டு வந்தான். அதனால் தான் ரஞ்சியை சாப்பிட்டதும் ஓய்வு எடுக்க அனுப்பிட்டேன் அத்தை" வடிவுக்கரசி விளக்கவும்

"அன்னிக்கு ஒரு வார்த்தை சொல்லாமல் கிளம்பிட்டான். இப்போ அடிபட்டு வந்து நிற்கிறான். ஊருக்குள் வந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகலை. வந்ததும் வராததுமாக திரும்ப சுற்றுலா கிளம்பிப் போனால்.. எத்தனை கண்ணு பட்டுச்சோ?சரி, சரி பொழுது சாய்ஞ்சதும் அவனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்ரு" என்றவள், "ஏய் என்னடி வாய் பார்த்துக்கிட்டு நிற்கிறே? ஓடு போய் அவனை வரச்சொல்லு.. என்று அங்கே நின்றிருந்த மஞ்சுளாவை விரட்டினாள் காந்திமதி.

சில கணங்களில் திரும்பி வந்த பணிப்பெண்,"அண்ணன் அங்கே இல்ல பெரியம்மா" என்றாள்.

"நல்லா பார்த்தியாடி? பாத்ரூமில் இருக்கிறானோ என்னவோ? என்றாள் வடிவுக்கரசி.

"ரூமில் எல்லா இடத்திலும் பார்த்துட்டேன் காணோம்.. என்றாள்.

வடிவுக்கரசி வாசலுக்கு சென்றாள், எஜமானியை பார்த்துவிட்டு ஓடி வந்த சித்தையன்.
"தம்பி வெளியே போறதைப் பார்த்தியா சித்தையா?

'ஆமாங்கம்மா, ஒரு அரை மணிநேரம், முன்னாடி, இல்லை கூடுதலா இருக்கும் அவசரமாக கிளம்பிப் போனார்மா"

"காரில் தான் மறுபடியும் கிளம்பிப் போயிருக்கிறானா? என்று வினவிய வடிவுக்கரசிக்கு கலக்கம் உண்டாயிற்று.

"இல்லைங்கம்மா, பைக்கில் தான்... அதுவும் போன்ல யாருக்கிட்டேயோ பேசிட்டே ரொம்ப வேகமா கிளம்பி போனாரு.. என்று சித்தையன் அவளை மேலும் கலங்க வைத்தான்.

"ஐயோ கடவுளே, இப்ப தான் ஒரு கண்டத்தில் இருந்து தப்பிச்சு வந்திருக்கிறான். அப்படி என்ன அவசரம்?ஒரு வார்த்தை சொல்லி விட்டு கிளம்புவதற்கு என்ன? என்று விட்டு உள்ளே சென்றவள் நிலை கொள்ளாமல் தவித்தாள். அப்போது சத்யமூர்த்தி காரில் வந்து இறங்கினார்.

உடனே வாசலுக்கு ஓடினாள் வடிவுக்கரசி."என்னங்க ரஞ்சி எங்கே போயிருக்கிறான்" என்று உங்ககிட்டேயாவது சொன்னானா? என்றாள் பதற்றமாக..

"நான் செந்திருவை ரயில் ஏத்திட்டு அப்படியே கார் ஷோரூம் வரை போயிட்டு இப்பத்தான் வர்றேன். எதுக்கு இப்படி பதட்டபடுறே வடிவு? அவன் என்ன சின்ன குழந்தையா? வெளிநாடு வரை போய் வந்தவன், இது அவனுக்கு தெரிஞ்ச ஊர்தானே? ஏதாவது அவசியமான வேலையாக இருக்கும் போயிருப்பான்" என்று மனைவியை சமாதானம் செய்ய முயன்றார்

"இல்லைங்க, போன் பேசிட்டே பைக்கில் வேகமாக கிளம்பிப் போனானாம், சித்தையன் சொன்னான், அதுதான் ரொம்ப கவலையாக இருக்கு"

"அது ஒன்றும் இருக்காது வடிவு, அந்தப் பொண்ணு ஜாஸ்மின் இருக்கிறாளே, அவளோட அப்பா இங்கே வர்றதாக.. நேற்று.. என்றவர் கடைசி நிமிடத்தில் தான் உளற இருந்ததை உணர்ந்து சட்டென்று பேச்சை மாற்றினார், அது.. நேற்று அவளோட வந்துட்டு இருந்தப்போ சொன்னாள். ஒருவேளை அவரைப் பார்க்கத்தான் போயிருப்பான்மா நீ தேவையில்லாமல் கவலைப்படுறியே? என்றார்

"ஓ! அப்படியா ? நீங்க நேற்றே சொல்லியிருந்தால் நானும் இவ்வளவு பதறியிருக்க மாட்டேன்ப்பா, ஆனாலும் ரஞ்சி செய்தது தப்புங்க, ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போயிருக்கணும்" என்றவாறு கணவனுடன் மாடிப்படிகளில் ஏறிக்கொண்டே, "சரி அவன் வந்தப்புறமா பேசிக்கிறேன், நீங்க உடையை மாத்திட்டு வாங்க, அதுக்குள்ள நான் போய் மலரை எழுந்துட்டாளான்னு பார்த்து கூட்டிட்டு வர்றேன்" என்றவள் அவர்களது அறைக்கு அடுத்திருந்த அறையின் கதவை தட்டினாள் வடிவுக்கரசி.
 
Back
Top