Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

32. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மாமனும் மருமகனும் அந்த அறையினுள் நுழைந்த போது சுமதி தூக்கத்தில் இருந்தாள். மனோகரி குழந்தையை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

இருவரையும் கண்டதும் முகம் மலர, "என்னங்க நியாபகம் வந்துவிட்டது. மதுவோட அப்பா போன் பண்ணினாரா? மது ரவி கல்யாண விஷயம் என்னாச்சு? மது தினம் போன்ல பேசுகிறாளா? அவள் என்னைப்பற்றி கேட்டிருப்பாளே? என்ன சொன்னீர்கள்? பாவம் சின்னப் பொண்ணு. அவளால் தாங்கியிருக்க முடியாது. படிப்பு முடிஞ்சதும் வேலைக்கு போகனும் ஆன்ட்டினு சொன்னா. இப்போது என்ன செய்கிறாள்? " படபட வென்று மனோகரி கேள்விகளை அடுக்க ஒருவரை ஒருவர் சிறு முறுவலுடன் அர்த்த பார்வை பார்த்துக் கொண்டனர்.

"மனோ, மனோ கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. எதுக்கு இவ்வளவு பதற்றம்? உன்னோட மது நல்லா இருக்கிறாள். நாளைக்கு சுமதிக்கு டிஸ்சார்ஜ். நாம இந்த நல்ல விஷயத்தை வீட்டுல போய் பேசலாமேம்மா? ஹாஸ்பிட்டலில் வைத்து வேண்டாமே? "என்றார் பிறைசூடன்.

"அதும் சரிதானங்க. எனக்கு இப்பவே மதுகிட்ட பேசனும்ங்க என் போன் எங்கே? என்றவள், "ஓ!அது உடைஞ்சிட்டுனு சொன்னீங்களே? சரி நான் வீட்டுக்குப் போய் அவகிட்ட பேசிக்கிறேன்,"என்றபோது பிறைசூடனுக்கு மனைவி முழுதுமாய் வெகு விரைவில் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கை தோன்றியது.



மதுவந்தியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்த பிறகு, வீட்டிற்கு அழைத்து வந்த ரவீந்தரனின் மனம் வெகுவாக குழம்பிக் கொண்டிருந்தது. யார் இந்தப் பெண்? என்னைக் காப்பாற்றவென்று அவள் உயிரை கொடுக்க துணிந்து விட்டாளே?? ரவீந்தர் என்று அழைத்தாளே? அதுபோல அவனை யாரும் அழைத்தது இல்லை. வீட்டில் அவனைத் தவிர மற்றவர்களுக்கு அவள் யாரென்று தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மாமா அவனிடம் அவளை கொண்டு போய் விட்டுவரச் சொல்லி வற்புறுத்தியிருக்க மாட்டார். இத்தனைக்கும் அக்காவின் குழந்தையை அவன் பார்க்கக்கூட இல்லை. அப்படி என்றால் அவளுக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதும் கூட மாமாவிற்கு தெரிந்துதானே இருக்கிறது? நிகிலனுக்கு உறவாக இருக்கக்கூடுமோ என்றால் அவனுக்கு தெரிந்து அப்படி யாரும் இல்லை. அப்படி இருந்தாலுமே அவள் இன்னார் என்று அறிமுகம் செய்திருப்பாரே? அவன் வந்தது முதல் அவள் ஒரு புதிராகத்தான் இருக்கிறாள்.

சாப்பாடு எல்லாமுமே அவனுக்கு அம்மா செய்து தரும் பக்குவத்தில் பிடித்தமானதாகத்தான் செய்து தந்தாள். அது எப்படி சாத்தியம்? அம்மா பார்த்த பெண் என்றால்கூட கொஞ்சம் ஒத்துவரலாம். இவளோ கொடைக்கானலில் இருந்தவள். அதிலும் அப்பா சொன்னது போல இவள் பார்க்க வட இந்தியப் பெண் போல தோன்றினாலும் இப்போது யோசித்தால் அதிலும் சந்தேகம் வருகிறது. எதற்காக இந்த கண்ணாமுச்சி ஆட்டம்? யார் ஆடுகிறார்கள்? யார் ஆட்டுவிக்கிறார்கள்? மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் அறிய முடியாமல் கட்டிலில் படுத்திருந்தவளை யோசனையாய் பார்த்திருந்தான் அவன்.

வலி மறக்க கொடுக்கப்பட்டிருந்த மருந்தின் காரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மதுவந்தி. ஒப்பனை ஏதுமின்றியே அவளது முகம் அழகோவியமாக தோன்றியது. பார்க்க பார்க்க இன்னதென்று தெரியாத ஏதோ ஓர் உணர்வு அவனை ஆட்கொள்ள, நடந்தவற்றை மனம் அசைப் போட்டது..

அவனது பிடியில் திமிறிக்கொண்டிருந்தவள் அது ரவீந்தரன்தான் என்று அறிந்ததும் அவள் பார்த்தப் பார்வை, அதில்தான் எத்தனை பாவங்கள் வர்ணஜாலமாய்.. ஆனந்தம் அழுகை நிம்மதி என்று கலவையாய்... அந்த முகம் அவனால் என்றேனும் மறக்ககூடுமா?? அவள் அவனை சந்தித்து நாலு நாட்கள் முழுதாக ஆகவில்லை. ஆனால் அவளோ ஜென்ம ஜென்மமாய் பரிச்சயமானவள் போல் அல்லவா நோக்கினாள். அவனுக்குமே அப்படித்தான் தோன்றியது. அவளை காப்பாற்றியே ஆகவேண்டும் என்று எது அவனை உந்தியது? அவளின் அந்தப் பார்வை சொன்ன செய்தி ஆத்மார்த்தமானது அல்லவா? அந்த நேசம் அவனுக்காய் உயிரையும் தரவல்லது என்று சொல்லாமல் உணர்த்திவிட்டாள் தானே? எப்படி ? அவனுக்கு இன்னமும் அது புரியாத புதிராகத்தான் இருந்தது. ஆனாலும் மனதுக்குள் இனம்புரியாத உவகை உண்டாவதை அவனால் தடுக்க முடியவில்லை. அழைப்பு மணி ஒலிக்க நிகழ்விற்கு வந்தான் ரவீந்தரன்.

பிறைசூடன்தான் வந்திருந்தார். மதுவந்திக்கு காயம் பட்டது என்று நிகிலன் சொன்னதிலிருந்து அவரால் அங்கே இருக்க முடியவில்லை. கூடவே மகனும் இப்போது பெரும் குழப்பத்தில் இருப்பான் என்று அவருக்கு தெரியும்.

"மதுவந்தி எப்படி இருக்கிறாள்?? உள்ளே நுழையும் போதே கேள்வியுடன் வந்தவரை யோசனையாய் பார்த்தான் மகன். அவள் பெயர் மதுவந்தியா? தனக்குள்ளாக கேட்டுக் கொண்டான்.

"என்னாச்சு ரவி? கவலைப் படும்படியாக ஏதுமில்லை என்று மாப்பிள்ளை சொன்னாரே? நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கிறேப்பா" பிறைசூடன் பதற்றமாய் வினவ,

"அவள் தூங்குகிறாள் அப்பா. வலிக்காக மருந்து கொடுத்திருக்கிறார் டாக்டர். எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க அப்பா" என்ற மகனிடம்,

"நீ என்ன கேட்க வர்றேன்னு தெரியும். மதுவந்தி யார் என்று கேட்க வருகிறாய். அது தானே ரவி?" அதுதான் நான் ஏற்கனவே சொன்னேனேப்பா. சுமதிக்கு கம்பெனியனாக இருப்பதற்காக கொடைக்கானலில் இருந்து அழைத்து வந்தேன் என்று. ஆனால் உனக்கு சொல்லாத விஷயம், பெற்றவர்கள் இல்லாத பெண். ஆதரவில்லாததால் அவளது முறைப்பையன் தொந்தரவிலிருந்து பாதுகாப்பாக இருக்கட்டும் என்றும் நினைத்தேன். இத்தனை தூரம் அவன் வரக்கூடும் என்று நான் எண்ணவில்லை" நல்ல வேளையாக நீ அவளை தக்க சமயத்தில் காப்பாற்றிவிட்டாய் ரவி." பிறைசூடன் கோர்வையாய் சொல்லி முடித்தார்.

அது முற்றிலும் உண்மை இல்லை என்றாலும் பொய்யும் இல்லையே. அவளுக்கு பெற்றோர் இல்லை முறைப்பையன் தொந்தரவு தருவது இவை நிஜம்தானே?

ஆனால் ரவீந்தரனுக்கு இன்னும் ஏதோ ஒன்று இருக்கிறது, தந்தை மறைக்கிறார் என்று புரிந்தது. இன்னமும் ஏன்? அவனுக்கு தெரிந்தால் என்ன செய்து விடப்போகிறான்?? தனக்குள் எண்ணினாலும் வாய்விட்டு கேளாமல் விடுத்தான்.

மகன் நம்பினானா என்று தெரியவில்லை. அவன் மேலும் ஏதும் கேட்க இடம் கொடுக்காமல் தொடர்ந்து, "இப்போ இங்கே மதுவந்தி இருக்கவேண்டாம் அவளை நான் போய் கொடைக்கானலில் விட்டு வருகிறேன் என்றதும் ரவி திடுக்கிட்டான். "அப்பா, என்ன சொல்கிறீர்கள். இந்த நிலையில் அவளை எங்கே அழைச்சிட்டுப் போறீங்க? பாவம் நமக்காக உதவி செய்ய வந்து இப்ப காயத்தோட கிடக்கிறாள். ஏன் அப்பா இந்த திடீர் முடிவு? என்று பதற்றத்தை மறைக்க முயன்றவாறு கேட்டான்.

உள்ளூர திருப்தியடைந்தவராக, "நீ சொல்வது எல்லாமும் உண்மைதான் ரவி! ஆனால் உன் அம்மா வந்தால் அவள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது ரவி, அதனால் மது இங்கே இருப்பது சரியில்லை. அவளுக்கு இருந்த ஆபத்தும் இப்போது நீங்கிவிட்டது. தற்காலிகமாய்த்தான் என்றாலும் பயமில்லை. நாளைக்கு அம்மா வரும் போது மதுவந்தி இங்கே இல்லாது இருப்பது நல்லது. சந்திரமௌலி வீட்டில் அவள் பாதுகாப்பாய் இருப்பாள். அவரிடமும் நான் பேசி விட்டேன்" என்றவாறு மதுவந்தி படுத்திருந்த அறையை நோக்கி சென்றார்.
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top