Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

29. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
குழந்தை பிறந்த செய்தியை பிறைசூடன் தம்பதிக்கு தெரிவிக்கப்படவில்லை. மதுவந்தியின் எண் ஸ்விட் ஆப் என்று வர நிகிலன் எண்ணும் ரவீந்தரனின் எண்ணும் பிஸியாக இருந்தது. சுமதியை சேர்த்திருந்தது ஏற்கனவே முதல் குழந்தையின் போது வந்த அதே மருத்துவமனை தான் என்று அவருக்கு தெரியும். நிகிலனின் வீட்டிலிருந்து பக்கம் என்பதும் அதே டாக்டர் தான் இந்த குழந்தை உருவானதிலிருந்து பார்த்து வருவதும் என்பதால் பிரசவத்திற்கும் அங்கே செல்ல வேண்டியாதாகிவிட்டது. நம் விதிக்கு மருத்துவமனையையோ மருத்துவரையோ குறை சொல்லி என்ன பயன்??

மருத்துவமனையை அடைந்ததும் மனோகரிக்கு அந்த இடம் ஏற்கனவே பார்த்த நினைவு வந்தது. ஆனால் எப்போது எதற்காக என்று நினைவிற்கு வரவில்லை. சுற்றிலும் மலங்க மலங்க பார்த்தவாறு கணவனை பின் தொடர்ந்த மனோகரிக்கு மனதில் அந்த நாள் நினைவில் வர, திகைத்தாற் போல அப்படியே நின்றிவிட்டாள்.

"சுமதி வலியில் துடித்தது, நல்ல மழை பெய்தது காரில் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தது, எல்லாமும் வரிசையாக நினைவிற்கு வர ஆரம்பித்தது.

பிறைசூடன் வரவேற்பில் சென்று விபரம் கேட்டதும் மகிழ்ச்சியில் மனம் பூரிக்க மனைவியிடம் பகிர எண்ணி,"மனோ கேட்டியா "என்று திரும்பிப்பார்த்தால், அவள் வாசல் புறத்தில் விழிகள் நிலைத்திருக்க சிலை போல் நின்றிருந்தாள்.

அப்போதுதான் அவருக்கு மனைவியின் நிலைமை நினைவுக்கு வர பதற்றத்துடன் அவளை நோக்கி வேகமாய் ஓடினார் பிறைசூடன். ஏதோ பயங்கர கனவு காண்பவள் போல அவள் முகம் வெளிறியிருக்க...

"மனோ என்னாச்சுமா? மனைவியின் தோளில் கைவைத்ததும் அவள்,"சுமதீ....சுமதீ...என்று கதறி அழலானாள்.

பிறைசூடனுக்கு கொஞ்சம் புரிந்தது. ஆனால் மீண்டும் அவள் பழைய நிலைக்கு போய் விடுவாளோ என்று பயந்தவராக, "மனோ மனோ விழித்துக்கொள்ளம்மா, சுமதியும் குழந்தையும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்" என்று அழுத்தமான குரலில் சொல்லும் போதே மயங்கிச் சரிந்தாள் மனோகரி.

காரில் ஏறிய ரவீந்தரன் வெளி வாசலுக்கு வந்த போது மதுவந்தியின் அருகே வந்த ஆட்டோவில் ஏறுவதை பார்த்தான். நிகிலன் வலியுறுத்தி சொன்னதால் அந்த ஆட்டோவை பின் தொடர முடிவு செய்தான். ஆட்டோ நகர ஆரம்பிக்க சட்டென்று ஒருவன் அந்த ஆட்டோவில் தாவி ஏறிக்கொள்ள ரவீந்தரன் ஒருகணம் திகைத்து உடனே சுதாரித்து வேகமாய் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்தான். ஆனால் அவர்கள் வீட்டிற்கு போகும் சாலையில் திரும்பாமல் பிரதான சாலைக்கு ஆட்டோ திரும்பவும் அவனது சந்தேகம் உறுதி ஆகியது. இது நிச்சயம் சதி தான். மதுவை யாரோ கடத்திப் போகிறார்கள். ஏன் எதற்கு என்று ஆராய இப்போது நேரமில்லை. கைபேசியில் சில எண்களை அழுத்தி தொடர்பு கொண்டு பேசியபடியே... ஆட்டோவை பின் தொடர்வது சிரமமாக இல்லை. மும்பையின் வாகன நெருக்கடியும் தங்களை யாரும் பின் தொடரக்கூடும் என்ற எண்ணமில்லாததாலும் ஆட்டோ மிதமான வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தது. அப்படி என்றால் மதுவுக்கு மயக்கம் கொடுத்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவள் கூச்சல் போட்டிருப்பாளே?

காரில் அவர்களை ரொம்ப தூரம் தொடர்வது சாத்தியமில்லை. அவர்கள் சந்தேகிக்ககூடும் என்று தோன்ற அந்தப் பகுதியில் இருந்த தன் நண்பன் விஜய்யை துணைக்கு அழைத்தான். அவனும், ரவீந்திரனின் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்தவனாக என்ன ஏது என்று கேட்டு நேரம் போக்காமல், அவன் கேட்ட பொருளோடு சற்று நேரத்தில் வழியோடு வந்து இணைந்தான். ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு விழ காரை நண்பனிடம் தந்து விபரம் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு பைக்கில் ஆட்டோவை தொடர்ந்தான். ஹெல்மட் வேறு உதவியாக இருந்தது.

ஆட்டோ மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்குள் சென்று சந்துக்களில் புகுந்து அங்கே புறநகர் பகுதிக்குள் நுழைந்தது.

ரவீந்தரனுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. நண்பனிடம் காதில் பொருத்தி பேசும் {bluetoth} கருவியையும் தருவித்து இருந்ததால் அதன் மூலம் அவன் தடையின்றி பேசியவாறே வண்டியை மிக மெதுவாய் விலாசம் தேடுவது போன்ற பாவனையுடன் தொடர்ந்தான்.

பிறைசூடனும் நிகிலனும் தீவிர சிகிச்சை அறை வாசலில் தவிப்போடு நின்றிருந்தனர்.

மயங்கிய மனோகரியை செவிலியர்கள் உதவியுடன் இங்கே சேர்த்துவிட்டு நிகிலனுக்கு தகவல் சொல்ல அவனும் வந்து இங்கே இருந்து கொண்டு அவரை சுமதியிடம் அனுப்பிவைத்தான்.

பேரனையும் மகளையும் சீக்கிரமே பார்த்துவிட்டு மனைவியிடம் திரும்பி விட்டார். உள்ளே எல்லா பரிசோதனைகளும் நடந்து கொண்டிருக்க மதுவந்தியை விட்டு வரப் போன ரவீந்தரனுக்கு பதிலாக அவனது நண்பன் கார் சாவியை கொணர்ந்து தரவும் நிகிலன் துணுக்குற்றான்.

விபரம் கேட்குமுன் அவன் உண்மையை மறைத்து ரவிக்கு அவசர வேலை வந்ததால் செல்ல வேண்டிய நிர்பந்தம். அதனால் அந்தப் பக்கம் வந்த தன்னிடம் காரை கொடுத்தனுப்பியதாக கூறி விடைபெற்றான்.

நிகிலனுக்கு விஜய்யின் பேச்சில் சிறிதும் நம்பிக்கை இல்லை. மதுவந்தியின் கைபேசிக்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை. ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஆக அவளுக்குத்தான் சுமதி பயந்தது போல ஏதோ ஆபத்து. இப்போது அவனால் இங்கிருந்து நகரக் கூட முடியாத நிலைமை.

சட்டென்று அவனுக்கு தெரிந்த போலீஸ் உயர் அதிகாரியின் நினைவு வர அவரை தொடர்பு கொண்டான். ஆனால் அவரோ வெளியூரில் இருப்பதாகவும் அன்று இரவுதான் ஊர் திரும்பப் போவதாகவும் தெரிவித்தார், இருப்பினும் தன்னால் ஆன உதவிகளை செய்வதாக வாக்களித்தார். நிகிலனுக்கு கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல். ஆனால் வயதுப் பெண் தங்களுக்காக உதவி செய்ய முன் வந்தவளை எப்படி காப்பாற்றுவது என்று பரிதவித்தவனுக்கு திடுமென் ஒருவேளை ரவீந்தரனும் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டிருந்தால்? என்ற எண்ணம் தோன்ற மனமும் உடலும் பதறிற்று.

அந்த எண்ணம் தோன்றிய பின் நிகிலனால் ஒருகணம் கூட இயல்பாக இருக்க முடியவில்லை. அதற்கு ஏற்றார் போல ரவீந்தரனின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக சொல்லப்பட்டது.

பிறைசூடனுக்கு மனைவியின் கவலையில் முதலில் நிகிலனிடம் தெரிந்த மாற்றம் புலப்படவில்லை. மருத்துவர் வந்து மனோகரிக்கு ஆபத்தில்லை என்றும் தற்போது நல்ல தூக்கம் தேவை என்பதால் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சொல்லிவிட்டுப் போக சற்று ஆசுவாசமனார். அதன் பிறகே மருமகனை கவனித்தார். மகன் பிறந்த பூரிப்பு இல்லாமல் ஏன் எதையோ பறி கொடுத்தார் போல இருக்கிறார்?? அடிக்கடி யாரையோ தொடர்பு கொள்ள ழுயற்சி செய்வதும் சோர்வதுமாக இருக்கிறாரே?

"என்னாச்சு மாப்பிள்ளை ஆபிஸில் ஏதும் பிரச்சனையா? என்று வினவ, நிகிலன் ஒருகணம் சொல்வது அறியாது திகைத்தான். இவரிடம் என்னவென்று சொல்வது? விவரமே ஒன்றுமே சரியாகத் தெரியவில்லையே...???

"அ..அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா. மதுவந்தியை பற்றி சுமதி சொன்னாள். அதைப் பற்றித்தான் யோசிச்சுட்டு இருக்கேன் என்று முழுதாய் மறைக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் உளறி வைத்தான்.

பிறைசூடன் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. அவன் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை அது மதுவந்தி சார்ந்த விஷயமாக இருக்ககூடுமோ? நினைக்கையிலேயே அவருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ள

"மாப்பிள்ளை மதுவந்திக்கு ஏதும் பிரச்சனையா? எதுவானாலும் மறைக்காமல் சொல்லுங்க நேரம் கடந்து விட்டால் காரியம் கை மீறிப்போய்விடும் மாப்பிள்ளை என்று பதறவும் அவனுக்கு தெரிந்தளவில் சொல்ல பிறைசூடன் அதிர்ந்து நின்றார்.

"ரவி போன் எடுக்க மாட்டேங்கிறான் மாமா எனக்கு அது வேற ஒரே பதற்றமா இருக்கு." என்று கவலையுடன் மேலும் நிகிலன் கூற.

பிறைசூடனுக்கும் எங்கே எந்த இடம் என்று எதுவும் தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல இருந்தது.
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top