Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

23.அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
வீட்டிற்குள் நுழைந்த நிரஞ்சனுக்கு அப்போது இருந்த மனநிலையில் யாரையும் பார்க்க விருப்பம் இல்லாததால், அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றான். அங்கே பாதி இடத்தை இரும்பு கம்பிகளை கொண்டு கூரை போல அமைத்து அதில் மலர் கொடிகளை படர வைத்திருந்தனர். அங்கே அதிக வெயில் படாமல் அமர்ந்து பேச டானா வடிவில் ஒரு புறம் சிமெண்ட் பெஞ்சு போடப்பட்டிருந்தது. இன்னொரு புறம் ஊஞ்சலும் இருந்தது. அதில் அமர்ந்தபடி சற்று முன் மலர்வதனி பேசியதை மனதுக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான் .

அந்தச் சின்னப் பெண் மனதில் எத்தனை வலியை சுமந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு யாரும் இல்லை என்ற உணர்வை உண்டாக்கியதே பெரிய கொடுமை. அதைக் காட்டிலும் அவள் மனதில் உழைத்துதான் அடுத்த வேளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துவிட்டு, அவளை சுற்றி ஒரு வட்டத்தை போட்டு வாழும்படி செய்திருக்கிறார்களே? நிச்சயமாக அவளது பெற்றோர் அந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பில்லை. பாட்டியாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் அவள் வீட்டை விட்டு போவதாக அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள் போலும். ஆனால் இத்தனை காலமாக இல்லாமல் அவன் வந்த அன்றைக்கு கிளம்ப என்ன காரணம் ?? அவனது எண்ண ஒட்டத்தை தடைசெய்வது போல படிகளில் காலடி சத்தம் யாரோ வருவதை உணர்த்தியது. அநேகமாக அவனது அம்மாவாகத் தான் இருக்கும் என்று திரும்பிப் பார்த்தான்.

ஆம் வடிவுக்கரசிதான். மலர்வதனி அழுததன் காரணத்தை அறிந்து கொள்ளாவிட்டால் அவளால் நிம்மதியாக இருக்க முடியும் போல தோன்றவில்லை. அதனால் மகனைத் தேடி அங்கே வந்தாள்.

"என்னம்மா நீங்கள்? என்னை அழைத்திருக்கலாமே? எதற்காக இப்படி கஷ்டப்பட்டு ஏறி வந்தீர்கள்? என்றபடி அன்னையை எதிர்கொண்டு அழைத்து வந்து,"சரி, முதலில் இப்படி உட்காருங்கள்" என்று பெஞ்சில் அமரச் செய்தான்.

"அது வந்து ரஞ்சி, மலர் வந்ததும் வராததுமாக அழுதுகொண்டு இருந்தாளடா? எனக்கு அவளிடம் காரணத்தை கேட்க தயக்கமாக இருந்தது. ஒருவேளை உனக்கும் அவளுக்கும் வரும் வழியில் ஏதும்.. பேச்சுவார்த்தையில்... முழுமையாக சொல்ல முடியாமல் தடுமாறினாள் அம்மா.

மெலிதாக முறுவல் ஒன்று தோன்றி மறைய,"அடடா என்ன அம்மா நீங்கள் என்னிடம் கேட்பதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்? என்றவன்"நீங்கள் நினைப்பது போல எங்களுக்குள் சண்டை எல்லாம் இல்லை அம்மா. ஆனால் வேறு ஒரு விஷயமாக நானே உங்களிடம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னை தவறாக எண்ண வேண்டாம் அம்மா, என்று நிறுத்தினான்.

"என்ன விஷயம் ரஞ்சி, என்னை சொல்லிவிட்டு இப்ப நீ ஏன் தயங்குகிறாய்? என்றதும்

"வந்து...வதனியுடைய அம்மா அவளுக்கு என்று பணம் நகை ஏதேனும் கொடுத்துவிட்டு போனார்களா? என்று அவன் முடிக்குமுன்பாக.. பதற்றமாக நிமிர்ந்த வடிவுக்கரசி,

"இது.. இது யார் உன்கிட்டே சொன்னது ரஞ்சி? அப்பாவா? பாட்டியா? என்றாள்.

"வதனி" என்றவாறு அவளது அருகில் அமர்ந்தான்.

"எ... என்ன சொல்றே ரஞ்சி? அவளா ? அவளுக்கு இந்த விஷயமே தெரியாதே கண்ணா. அப்பா சொல்லியிருக்க மாட்டார். ஆனால் பாட்டியையும் சொல்லக்கூடாது என்று உன் அப்பா கேட்டுக்கொண்டாரே, பிறகு யார்? "

"அம்மா ரிலாக்ஸ். அப்படி என்றால் அது உண்மைதான் இல்லையா? ஆனால் அம்மா யார் அவளிடம் சொன்னார்கள் என்பது இப்போது முக்கியமில்லை. அதனால் என்ன விளைந்தது என்று கவனியுங்கள். வதனிக்கு இந்த விவரம் தெரிந்து தான் அம்மா அன்றைக்கு வீட்டை விட்டு கிளம்பும் முடிவு எடுத்திருக்கிறாள் என்பது என் கணிப்பு. அத்தோடு அவள் மனதில் தனக்கு யாருமில்லை. தானேதான் தன்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாக பதிந்துவிட்டது"

"ஐயோ ரஞ்சி என்ன என்னவோ சொல்கிறாயே? என் கண்மணி இப்படி ஒரு மனநிலையிலா இருக்கிறாள், என்று வருந்தியவள் சிலகணங்கள் ஏதோ தீவிரமாக யோசித்தவிட்டு,ரஞ்சி பேசாமல் அவளை மருத்துவ கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய் கண்ணா" என்றாள் வடிவுக்கரசி.

"நிஜமாவா சொல்றீங்க? வியந்தவன்" சற்று தயங்கியபடி, நேற்று வேண்டாம் என்றீர்கள். அது ஏன் என்று சொல்ல முடியுமா?"

கண்களை ஒருதரம் இறுக மூடித்திறந்து விட்டு,"ஆமாம் ரஞ்சி சொன்னேன் தான். அதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. வந்து என் உடல் நிலை நன்றாக இருக்கும்போதே அவளுக்கு திருமணத்தை, அதாவது ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். இப்போது நீ சொன்னதை கேட்ட பிறகு அவள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாளா என்று தெரியவில்லை. ஆனால் அவளுக்கு நாம் உறவுகள் என்பதும் இந்த வீட்டில் அவளுக்கு சகல உரிமைகளும் இருப்பதையும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அதற்கு இந்த படிப்பில் சேர்ப்பதுதான் ஒரே வழி"

"நீங்கள் சொல்வது தான் எனக்கும் சரி என்று தோன்றுகிறது அம்மா. அப்படியே செய்யுவிடலாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல உங்கள் உடம்பிற்கு ஒன்றும் குறை இல்லை. அதிக மன அழுத்தம், உளைச்சல் தான் அன்றைக்கு மயக்கம் வரக் காரணம். இப்போது தான் உங்கள் மனம் போல வதனி நம்மோடு வந்துவிட்டாளே? இனி அவளுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது பற்றி மட்டும் இனிமையாக கனவு காணுங்கள். அதுதான் உங்களுக்கு மருந்து." என்றான்.

"ம்ம்.. புரிகிறது ரஞ்சி, நீ எனக்கு ஒரு வாக்கு கொடுக்கவேண்டுமடா" என்றாள் தீவிரமான குரலில்.

"நிச்சயமாக, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க அம்மா"

"வந்து... என்ன மாதிரி சூழ்நிலை வந்தாலும், மலரோட படிப்பு நிற்க கூடாது. ஒரு வேளை ....அவள் படிப்பு முடிக்கிறதுக்குள்ள இடையில் எனக்கு என்னமும் ஆகிவிட்டால், அவள் உன் பொறுப்பு கண்ணா, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நீதான் அமைச்சு கொடுக்கனும். கொடுப்பேன் என்று எனக்கு வாக்கு கொடு ரஞ்சி"

"ஐயோ அம்மா, இப்போது தானே சொன்னேன். அதற்குள் இதென்ன பேச்சு? என்று தாயை கடிந்தான் நிரஞ்சன்.

"மனித உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது கண்ணா. அத்தோடு நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது. என் மன அமைதிக்காகத் தான் உன்னிடம் வாக்கு கேட்கிறேன் ரஞ்சி. அதை கொடுப்பதில் என்ன கஷ்டம் உனக்கு? "

"சரி அம்மா. வதனியின் வாழ்வு இனி என் பொறுப்பு. எந்த சூழ்நிலையிலும் நான் அவளை கைவிட மாட்டேன்".

"இது போதுமடா, என்ற வடிவுக்கரசி, மகனின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு சிலகணங்கள் இருந்துவிட்டு எழுந்தாள். "சரி, நான் போய் உனக்கு பிடிச்ச இடியாப்பமும் தேங்காய் பாலும் செய்து வைக்கிறேன். நீ சீக்கிரம் குளித்துவிட்டு வந்துவிடு"என்று முகம் மலர சென்ற தாயைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான் நிரஞ்சன்.

☆☆☆

மலர்வதனி குளியல் அறைக்குள் நுழையப் போகையில் அவளது அறையை பெருக்குவதற்காக மஞ்சுளா வந்தாள்.

"ஹேய் மஞ்சு, அந்த துடைப்பத்தை எங்கிட்ட கொடுத்துட்டு நீ போய் அத்தைக்கு ஒத்தாசை பண்ணு. நான் பெருக்கிடுறன்" என்று கையை நீட்டினாள் மலர்வதனி.

"ஐயோ மலர், எதுக்கு இதெல்லாம் நீ ஏன் செய்றே? இந்த வேலை எல்லாம் செய்யத்தான் நாங்கள் இருக்கிறோமே?என்றவாறு பெருக்கத் தொடங்கினாள், தொடர்ந்து,"நீ அந்த சின்ன அறையில் இருந்தாலும் பெரியம்மாவோட தம்பி மகள் தான் மலர். பாட்டிக்காகத் தான் பெரியம்மா அந்த அறையில் தங்க வைச்சிருந்தாங்கனு எங்களுக்கு தெரியும். நீ இந்த வீட்டுக்குள் வந்ததில் எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு சந்தோசம் தெரியுமா? நிகிதா பொண்ணு எப்படியோ அப்படித்தான் நீயும் இந்த வீட்டுப் பொண்ணு தான்"என்று சொல்லிவிட்டு, அவளது பணியை முடித்து,சற்று நேரத்தில் பெருக்கிய குப்பையை அள்ளிக்கொண்டு வெளியேறினாள்.

மலர்வதனிக்கு அவளது பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் அந்த வீட்டில் பணிபுரிகிறவளிடம் போய் அவள் நிலைமையை என்னவென்று விளக்குவாள்? ஆனால் ஆத்திரத்தில் அத்தானிடம் எல்லாமும் தான் உளறி தொலைத்திருக்கிறாளே, அது வேறு எந்த பூகம்பத்தை கிளப்புமோ? என்று யோசித்தவாறு குளியல் அறைக்குள் நுழைந்த மலரவதனி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

உள்ளே உடை மாற்றுவதற்கான ஒரு அறை இருந்தது. அதைத் தாண்டித்தான் குளியல் அறை இருந்தது. உடை மாற்றும் அறையில் ஆளுயர கண்ணாடியுடன் சிறுமேசையும் அதில் சில அழகுசாதனப் பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. பக்கவாட்டு சுவரில் அலமாரிகள் காணப்பட்டது. உடைகள் வைப்பதற்காக போலும். மெல்ல அருகே சென்று ஒரு கதவைத் திறந்தவள் திகைத்துப் போனாள். அதில் நான்கு விலையுயர்ந்த புதிய நைட்டிகள் ஹாங்கரில் தொங்கியது. அவற்றின் விலை ஆயிரங்களில் இருக்கும் என்று துணியின் தன்மையும் அதில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தை பார்த்தாலே தெரிந்தது. இது எப்படி எப்போது இங்கே வந்தது? அதற்கு கீழே இருந்த டிராவில் உள்ளாடைகள். அவைகளும் புதியவைதான். அவளது பழைய உடைகள் எங்கே என்று அடுத்ததை திறந்தாள். அதில் பருத்திப் புடவைகள் பொருத்தமான ரவிக்கைகளோடு இருந்து. எல்லாம் சற்று விலையுயர்ந்தது புதியவையும் கூட. அடுத்ததில் டிசைனர் புடவைகள், முகம் சிவக்க, இதெல்லாம் யார் வேலை? அவளது பழைய உடைகள் அடங்கிய பெட்டி எங்கே? என்று யோசித்தபோது முன் தினம் இந்த அறைக்குள் நுழைய மனமற்றவளாய் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துப் போய் அத்தையிடம் அனுமதி கேட்டு அங்கேயே குளித்து உடைமாற்றிக் கொண்டது நினைவு வந்தது. கிளம்பும் அவசரத்தில் அவள் பெட்டியை மறுபடியும் இந்த அறையில் வைக்க மறந்துவிட்டாள்.

அதனால் இந்த உடைகளை வைத்தது அத்தையாகத்தான் இருக்கும் என்று எண்ணும்போதே இன்னொன்று இடித்தது. அத்தை இதை எல்லாம் வாங்க வேண்டுமானால் வெளியே போய் தானே வாங்கவேண்டும். அது எப்படி ஒரே இரவில் இத்தனையும் வாங்க முடியும்? அப்படியே வாங்கினால் அவளிடம் சொல்வாளே? இப்போது அவள் என்ன செய்வது ? அத்தையை கேட்டுக் கொள்ளலாமா? நேரம் வேறு ஆகிறது. இரவு சரியாக உண்ணாதது வேறு இப்போது அதன் வீரியத்தை காட்டுகிறது. அவசரமாக போனை எடுத்து அத்தையை அழைத்தாள் ரிங் போய்க்கொண்டு இருந்தது. எடுக்கவில்லை. இரண்டு முறை அழைத்தும் வடிவுக்கரசி எடுக்க காணோம். வேலையாக இருக்கிறாளோ அல்லது போனை அறையில் விட்டுப் போயிருக்கிறாளோ? என்று யோசித்தவாறு மீண்டும் டயல் செய்தாள்.. இரண்டு ரிங் போனதும் எடுக்கப்பட்டுவிட

,"அத்தை நான் மலர் பேசுறேன், என்னோட பெட்டி எங்கே? உங்கள் அறையில் இருக்கிறதா? இங்கே வந்து... எல்லாம் புது ட்ரஸ்ஸா இருக்கிறது, இதை எல்லாம் நீங்கள் எப்ப வாங்கினீங்க? என்னிடம் அது பத்தி நீங்க ஒன்றுமே சொல்லவில்லை என்று படபடவென்று கேட்க..

"கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு பேசு வதனி,"என்ற நிரஞ்சனின் குரலில் திடுக்கிட்டுப் போனாள். கடவுளே அத்தை என்று நினைத்து பேசிவிட்டேனே? இந்த அத்தான் எங்கே வந்தார்? அவள் மனம் படபடக்க யோசிக்கையில்.. நிரஞ்சன் அவள் கேளாத கேள்விக்கு பதில் சொன்னான்.

"அம்மா வேலையாக இருக்கிறார்கள். நான் சாப்பிட வந்தேன். அம்மாதான் போனை எடுக்கச் சொன்னாங்க என்றவனின் குரலில் நகைப்பு இருந்ததை உணர்ந்த மலர்வதனியின் முகம் லேசாக சிவந்தது. தொடர்ந்து அவன் சொன்னான், அதெல்லாம் உனக்காக வாங்கி வைத்ததுதான் வதனி. அதனால் தயங்காமல் உடுத்திக்கொள். வேண்டுமானால் அம்மாவிடமே கேட்டுக் கொள்" என்றதும்

"இல்லை. வேண்டாம் நீங்கள் சொன்னதை நான் நம்புகிறேன், என்று தொடர்பை துண்டித்தாள். மலர்வதனி அவனிடம் அப்படி சொல்லிவிட்டு மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்து போனாள்.

நிரஞ்சன் கைபேசியை அணைத்து விட்டு சிறு முறுவலுடன், தாயிடம் சென்று அதை தந்துவிட்டு சில விவரங்களை தெரிவித்தான். வடிவுக்கரசியின் முகத்திலும் அந்த முறுவல் படர்ந்து விகசித்தது.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top