Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

21. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மதுவந்தியின் யோசனையைக் கேட்டு மனதுக்குள்ளாக வியந்த பிறைசூடன் வார்த்தை வராமல் சிலகணங்கள் மௌனம் காத்தார்.

அந்த சிலகணங்கள் மதுவந்தி தவித்துப் போனாள். எங்கே அவளது யோசனையை அங்கிள் மறுத்து விடுவாரோ என்று??

"அங்கிள்??"

நடப்பிற்கு திரும்பியவராய், "உன்னால் சமாளிக்க முடியுமாம்மா? நீ சின்னப் பொண்ணு. எப்படிம்மா? எனக்கு ரொம்பவும் யோசனையாக இருக்கு, உனக்கு முன் அனுபவம் இல்லாத வேலைம்மா " என்றார் கவலையுடன்.

"அதெல்லாம் நீங்க கவலையே படாதீங்க அங்கிள். இன்னிக்கு இன்டெர்நெட்ல இல்லாத விஷயமில்லை. நான் எல்லாம் பார்த்துக்கிறேன். ஆனால் இந்த விஷயம் உங்க பிள்ளைக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் அங்கிள்" என்றதும்,

"அது எப்படியம்மா முடியும்? நடக்கிற காரியமா? என்றவர் ஏதோ நினைவு வந்தவராய், ஒருகணம் தயங்கி,

" ஏனம்மா ரவிக்காக உன்னை பெண் கேட்ட விஷயத்தை உன் அப்பா உன்கிட்ட சொன்னாரா? இல்லையா? என்று கேட்க...

மதுவந்தி ஒருகணம் பார்வையை தழைத்துக் கொண்டாள். பிறகு "இல்லை அங்கிள்"அது உண்மையும் தானே? அவர் தெரியுமா என்று கேட்டிருந்தால் மதுவந்திக்கு சங்கடாமாகியிருக்கும். அப்பா கடைசிவரை சொல்லவில்லை தானே? என்று மனதோடு எண்ணிக் கொண்டவள் தொடர்ந்து "வந்து,அங்கிள் உங்கள் பிள்ளையிடம் என்னைப் பற்றிச் சொல்லிவிட்டீர்களா?? என்று தயக்கத்துடன் வினவினாள் சின்னவள்.

"உன்னைப் பற்றி போனில் உன் ஆன்ட்டி சொன்னதோட சரிம்மா. ஆனால் அவன் இன்னும் உன்னைப் பார்க்கலை. நாங்க அங்கே போனப்போ அவன் வேலை விஷயமா வெளிநாடு போயிருந்தான். மனோகரிக்கு அடிபட்டப்பிறகு தான் வந்து சேர்ந்தான். அப்புறமா உன்னைப் பற்றி பேசவோ நினைக்கவோ எங்களுக்கும் நேரமில்லைமா" என்று வருத்தம் தெரிவித்தார்.

"அப்படியே இருக்கட்டும் அங்கிள் இனிமேலும் நான்தான் அந்தப் பெண் என்று சொல்ல வேண்டாம். அம்மா இல்லாத எனக்கு அம்மாவோட பாசத்தை தந்தவங்க ஆன்ட்டிதான். அவங்களுக்கு நான் எவ்வளவு செய்தாலும் போதாது அங்கிள். நான் ஆன்ட்டிக்காகத்தான் எல்லாமும் செய்ய நினைச்சேன், இப்போ செய்யப் போறதும் அவங்களுக்காகத்தான் அங்கிள். நான் வந்தால் உங்கள் பிள்ளைக்கு என்னை அறிமுகப்படுத்தறதுல உங்களுக்கு சங்கடமாகிவிடும் என்று தான் அங்கே வரவில்லை. ஒருவேளை அவர் என்னைத் தப்பா நினைத்து விட்டால் ?? எல்லாருக்கும் நான் ஆன்ட்டி மீது வைத்திருக்கும் அன்பு புரியும் என்று எதிர்பார்க்க முடியாதே அங்கிள். அதைவிடவும் அந்த நிலையில் ஆன்ட்டியை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை பேசிக்கொண்டே வந்தவள் ,சட்டென்று குரல் உடைய அதுவரை அடக்கி வைத்த அழுகை வெடிக்க முகத்தை மூடிக்கொண்டு அந்த அறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்தாள்.

"சிஸ்டர் விஷயம் தெரிஞ்சதுல இருந்து அவள் ஒரு நிலையில இல்லை சார். அவங்களைப் பார்த்தால் எங்கே கதறிடுவோமோனு அடக்கிட்டு இருந்தா. இப்ப சொல்லக்கூட முடியலை," என்று சந்திரமௌலி தாழ்வான குரலில் கூறினார்.

"அது புரிஞ்சிடுச்சு சார், ரவிக்கு தெரியாம எப்படி சார் அவள் யோசனை நடக்கும்? அவன்கிட்ட சொல்லித்தானே ஆகணும்"என்றார் பிறைசூடன். குழப்பத்துடன்.

"வயசுப் பெண் ஒருத்தி வயசுப் பையன் இருக்கிற வீட்டுல போய் சேவை செய்யறதை இந்த சமூகம் தப்பாதான் சார் பார்க்கும். உங்க பையனே கூட, அவர் அப்படிப்பட்டவர் இல்லை தான். அவர் இடத்திலே யாராக இருந்தாலும் நினைக்க வாய்ப்பு இருக்கு. இப்போது இங்கே இருக்கிறாள் என்றாலும் அவள் அதே மாணிக்கத்தோட பொண்ணுதான். ஆதரவு இல்லாத ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கிறோம் அவ்வளவுதான். எல்லா உரிமையும் இருந்தாலும் அவளுக்கு என்று ஒரு வரைமுறை வச்சுதான் இருக்கிறாள். நானும் கட்டாயப்படுத்தவில்லை சார். அதனால அவள் விருப்பபடி நீங்க சம்மதிச்சு கூட்டிட்டு போங்க " என்று சந்திரமௌலி முடித்தபோது

முகத்தை கழுவித் துடைத்துவிட்டு அங்கே வந்து அமர்ந்து "சாரி "அங்கிள்" என்றாள் சின்ன குரலில்.

"சரிம்மா மது உன் விருப்பபடியே செய்யலாம். அதுக்கு முன்னடி எனக்கு ஒரு வாக்கு தரனும் நீ" என்றார் பிறைசூடன் உறுதியான குரலில்.

மற்ற இருவரும் அவரை கேள்வியாய் நோக்கினார்கள்...!

பிறைசூடன் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக கேட்கும் வாக்கு என்னவாக இருக்கும்.....??
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top