Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

12. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
ஜாஸ்மின் திடுமென மன்னிப்பு கோரவும், சத்யமூர்த்தி புரியாமல் நோக்கி,"எதுக்கு மா மன்னிப்பு?"

"அது .. வந்து நிரஞ்சன் என்னை இங்கே அழைத்து வந்ததால் தான் ஆன்ட்டிக்கு இப்படி ஆகிவிட்டது அங்கிள், I'm really very sorry" என்று வருத்தம் தெரிவித்தாள்.

"நீ நினைக்கிறது போல எதுவும் இல்லைமா, அவள் எல்லாரையும் கவனிக்கிறவள், தன்னை கவனிக்காமல் விட்டுவிட்டாள். நானும் வேலை வேலைனு அவளை கவனிக்காமல் இருந்துவிட்டேன், என்றவர் நீ போய் தூங்குமா, நேரமாச்சு. காலையில் நான் சீக்கிரம் கிளம்பனும்"என்றவாறு சென்று கதவைத் தாழிட்டு விட்டு திரும்பியவரிடம்,

"காலையில் நானும் வருகிறேன் அங்கிள். என்னையும் கூட்டிக்கொண்டு போகிறீர்களா? "

"சரிம்மா, 7மணிக்கு தயாராக இருந்தாய் என்றால் அழைத்து போகிறேன்." என்று அவரது அறைக்கு சென்றுவிட,

ஜாஸ்மின் யோசனையுடன் அவளது அறைக்கு சென்றாள். அப்போது தான் நிரஞ்சன் காய்ச்சலுடன் வீடு திரும்பிய நினைவு வந்தது, இந்த நேரத்தில் போய் அவனை தொந்தரவு செய்வது சரியில்லை. காலையில் பார்த்துக் கேட்டுக் கொள்ளலாம்"என்று உடை மாற்றி படுக்கையில் விழுந்தாள்.

☆☆☆

மறுநாள் காலை ஏழு மணியளவில்... இரண்டு ஆண்களும் கிளம்பி வெளியே நிற்க, அவசரமாக வந்து சேர்ந்தாள் ஜாஸ்மின். சத்யமூர்த்தி முன்புறம் ஏறிக்கொள்ள, ஜாஸ்மின் பின்புறம் ஏறினாள். நிரஞ்சன் ஒட்டுனர் இருக்கையில் ஏறப் போகையில் வீட்டினுள் இருந்து நிகிதா ஓடி வந்து,"மாமா நானும் வர்றேன்"என்றவாறு பின் இருக்கையில் ஏறிக்கொள்ளவும்,

நிரஞ்சன், சங்கரனை விளித்து "தாத்தா நீங்கள் காரை எடுங்கள், என்று சொல்லிவிட்டு, சத்யமூர்த்தியிடம், "அப்பா திரும்பி வரும்போது அம்மாவும் வருவார்கள். அப்போது இடம் பற்றாது. அதனால் நான் பின்னால் பைக்கில் வந்துவிடுகிறேன்"என்றான்.

"அதுவும் சரிதான் ரஞ்சி, அப்ப நாங்க கிளம்பறோம், நீ பார்த்து பத்திரமாக வந்து சேர் "என்ற சத்யமூர்த்தி ஓட்டுனருக்கு சைகை செய்ய சொல்ல கார் கிளம்பிச் சென்றது.

அதற்குள்ளாக பணியாள் வீட்டினுள் இருந்து பைக் சாவியை கொணர்ந்து கொடுக்க, நிரஞ்சன் வாகனத்தை கிளப்பினான்.

☆☆☆

மலர்வதனி பணி நேரம் முடிந்து, சீருடையில் இருந்து சுடிதாருக்கு மாறியிருந்தாள். வடிவுக்கரசி இருந்த தீவிர சிகிச்சை பிரிவு அறைக்குள் சென்றாள். அங்கே வடிவுக்கரசி விழித்துவிட்டிருந்தாள். மருமகளைப் பார்த்ததும் கையை நீட்டி அழைத்தாள்.

வேகமாக ஓடிச்சென்று, அவளது கையைப் பற்றினாள் மலர். "இப்போது எப்படியிருக்கிறது அத்தை? என்றாள்.

"நல்லா இருக்கேன்டா, ஆமா இங்கே என்னை எப்படி கூட்டிக்கொண்டு வந்தாய்?"

முன்தினம் நிகழ்வை தெரிவித்துவிட்டு,"மன்னித்து விடுங்கள் அத்தை. உங்கள் மனதை நான் காயப்படுத்திவிட்டேன். ப்ளீஸ் அத்தை என்னை மன்னித்து விடுங்கள்" என்று அழுகையில் குலுக்கியவளின் கையில் தட்டிகொடுத்து,"ஷ் ஷ், நீ ஒரு தப்பும் செய்யவில்லையடா, அழாதே கண்ணம்மா, எனக்குத்தான் ஒன்றும் ஆகவில்லையே, நீ தான் என்னை காப்பாற்றிவிட்டாய் அல்லவா?"

"நான் மட்டும் அப்படி சொல்லாதிருந்தால் உங்களுக்கு இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டிருக்காது அத்தை. இந்த உலகத்தில் எனக்கு இருக்கிற ஒரே சொந்தமான உங்களை இழக்க இருந்தேனே, அப்படி மட்டும் ஏதும் ஆகியிருந்தால் என்னோட நிலைமை என்னவாகும் சொல்லுங்க அத்தை" என்றவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய,

"அடடா, முதலில் கண்களை துடைத்துக் கொள் மலர். இவ்வளவு வளர்ந்து விட்டாய், அதோடு நல்ல உயர்ந்த வேலையில் வேறு இருக்கிறாய், இப்படி சின்னப் பிள்ளை போல அழுகிறாயே, யாராவது பார்த்தால் சிரிக்கப் போகிறார்கள், என்றதும் அவள் அழுகையை நிறுத்தி வெட்கச் சிரிப்புடன், "எவ்வளவு வளர்ந்தால் என்ன அத்தை, உங்களுக்கு நான் குழந்தை தானே?" என்றாள்.

"ஆமாடி தங்கம், என்று அவள் மோவாயை தொட்டு முத்தமிட்டவள், "நாம் எப்போது வீட்டிற்கு போவது? எனக்கு இப்படி படுத்துக்கிட்டு இருக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்கு மலர்" என்றதும்,

"அத்தை, டாக்டர் எந்த நேரத்திலும் வந்துவிடலாம். அவர் வந்து பரிசோதித்து பார்த்து "வீட்டுக்கு போவதா, இங்கேயே இருக்கனுமானு சொல்வார். அதனால் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுத்திருங்கள். நான் வெளியே போய் இருக்கிறேன் சரியா?"என்று அத்தையின் கையை பற்றி ஆறுதலாக அழுத்திவிட்டு வெளியே வந்தாள்.

இருசக்கர வாகனத்தில் கிளம்பிய நிரஞ்சன், காரில் கிளம்பியவர்களை முந்திக்கொண்டு மருத்துவமனையை அடைந்தான். தீவிர சிகிச்சை பிரிவுக்கு வந்தபோது, பார்த்தது, அறையில் இருந்து வெளி வந்த மலர்வதனியின் அழுது சிவந்த முகத்தைத்தான். அம்மாவுக்கு தான் ஏதும் ஆகிவிட்டதோ என்று தோன்ற,

"என்னாச்சு வதனி? அம்மாவுக்கு? என்று பதறியவனிடம்,

"அத்தைக்கு ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க" என்று பதில் அளித்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அடுத்து இருந்ததில் அவன் அமர்ந்தான்.

சட்டென்று எழப்போனவளை எதிர்பார்த்தவன் போல், அவளது கையைப் பற்றி அமரச் செய்தான்."ஏன் பக்கத்தில் உட்கார்ந்தால் ஏதாவது ஒட்டிக்கொள்ளுமா? என்றான் சற்று கடுப்பான குரலில்.

"யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்" என்று கடிந்தவாறு கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள். அவனோ அவளது கையை விடாமல்,

"இது பொது இடம் இங்கே வருபவர்களுக்கு அவரவர் பிரச்சனையை கவனிக்கவே நேரமிருக்காது. இதில் யார் யாரோடு உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கவனிக்கப் போகிறார்களாக்கும். அப்படியே கவனித்தாலும் தான் என்ன? நாம் என்ன காதலா பண்ணிக்கொண்டிருக்கிறோம்?

மலர்வதனி, அவன் பேச பேச, ஏன்டா அப்படி சொன்னோம் என்று தன்னையே நொந்து கொள்ள, கடைசியாக அவன் சொன்னதை கேட்டதும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது, உறவு என்ற பெயர்தானே தவிர, முன்பின் பழகக்கூட இல்லாமல்,"கடவுளே இவன் என்ன இப்படி எல்லாம் பேசுகிறான்? என்ற எண்ணும்போதே முகம் சட்டென்று சிவந்துவிட, அதை அவன் பார்க்காமல் மறைக்க மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

அந்த நேரத்தில் சத்யமூர்த்தி, இரண்டு பெண்களுடன் அங்கு வந்து சேர, நிரஞ்சன் சட்டென்று, அவளது கைகளை விட்டுவிட்டு எழுந்து கொண்டான். "இத்தனை நேரம் டயலாக் விட்ட துரை, இப்போது எதற்காக துள்ளிக்கொண்டு எழுகிறார்? என்று உள்ளூர சிரித்துக் கொண்டு மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள் மலர்வதனி.

"என்ன ரஞ்சி டாக்டர் வந்து பார்த்தாரா? என்று தவிப்புடன் சத்யமூர்த்தி வினவ,

"இன்னும் இல்லை அப்பா, நீங்கள் இப்படி உட்காருங்கள், என்றவன் ஆமாம் ஏன் இவ்வளவு தாமதம் ஆச்சு? என்றான்.

"காலையில் எப்போதும் இப்படித்தான் ரஞசி,எல்லோரும் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதால் அதிகமாக போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சாலை விதிமுறைகளை சிலர் மீறி விடும் போது,கேட்கவே வேண்டாம். இன்னும் தாமதம் ஆகிவிடும்"அவர் சொல்லிக் கொண்டிருக்கையில்,

மருத்துவர் குழாம் வர, சட்டென்று அங்கே அமைதி நிலவியது. அப்போது தான் மலர்வதனி அந்த பெண் ஜாஸ்மினை கவனித்தாள். அழகாக இருந்தாள். தன்னிச்சையாக நிரஞ்சனிடம் அவளது பார்வை செல்ல அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான். அவளது பார்வையை நேராக சந்திக்கவும் ஒற்றை புருவம் உயர்த்தி எப்படி என்பது போல விழிகளால் வினவ, ஒருகணம் உள்ளூர திகைத்தாலும் அதை முகத்தில் காட்டாமல் புன்னகைத்து வைத்தாள்.

அதற்குள்ளாக உள்ளேயிருந்து மருத்துவர்கள் வெளியே வர அனைவரது கவனமும், அங்கே சென்றது. சத்யமூர்த்தி முன்னதாக, "என் மனைவி எப்படி இருக்கிறாள் டாக்டர்? அவளை வீட்டிற்கு கூட்டிப் போகலாமில்லையா?

"அவங்களுக்கு இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை. இப்போதே வீட்டிற்கு கூட்டிப்போகலாம், ஆனால் நான் எழுதித்தரும், மருந்துகளையும் டயட்டையும் ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும். அதனால் யாராவது ஒருவர் என்னோடு வாருங்கள்" என்று தலைமை மருத்துவர் நகர,

"நான் வருகிறேன் டாக்டர்," என்று மலர்வதனியும் நிரஞ்சனும் ஒரே குரலாக கூற, சத்யமூர்த்தி, இரண்டு பேருமாக போய் வாருங்கள். நான் போய் அம்மாவைப் பார்க்கிறேன்" என்று வடிவுக்கரசி இருந்த அறைக்கு சென்றார். ஜாஸ்மின் மற்றும் நிகிதா அவரை பின் தொடர்ந்தனர்.

மலர்வதனியும் நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் தீவிரமாக பார்த்தபடி நின்றனர்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top