Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

08. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மலர்வதனி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தபோது சத்யமூர்த்தி ஒரு இருக்கையில் யோசனையாய் அமர்ந்து இருந்தார்.

"மாமா அத்தையை பார்த்தீர்களா? அவங்களுக்கு உணர்வு திரும்பிடுச்சா?

"பார்த்தேன் மலர். இன்னும் அவள் விழிக்கவில்லை, தூங்கறதுக்கு மருந்து கொடுத்திருக்கிறார்கள் என்று நர்ஸ் பொண்ணு சொல்லிச்சு"

"சரி, மாமா நான் போய் அத்தையை பார்த்துவிட்டு வருகிறேன், என்று அவள் வடிவுக்கரசி இருந்த அறைக்குள் சென்றாள்.

"வடிவுக்கரசி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளைப் பார்த்ததும் கண்கள் கலங்கியது. அடுத்தவரின் பேச்சுக்கு மதிப்பளித்து அவள் அப்படி ஒரு முடிவை எடுத்ததில் தவறில்லை என்று தோன்றியது. அதற்கு காரணம் அந்த வீட்டில் தொடர்ந்து இருந்தால் அத்தான் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று எப்போதும் ஜாக்கிரதையாக, இருக்க நேரிடும். அந்த அவஸ்தை இல்லாமல் சற்று சுதந்திரமாக இருக்கலாம் என்று எண்ணினாள். சொல்லப்போனால், அத்தையை தவிர அவளுக்கு உறவென்று யாருமில்லை. அப்படி பட்ட உறவை பிரிவது ஒன்றும் அவளுக்கு மகிழ்ச்சியான காரியமில்லை. மிகுந்த வேதனையை தரக்கூடியது தான். அப்படிப்பட்ட முடிவை எடுக்க அவள் ரொம்பவே சிரமப்பட்டாள். ஆனால் அது அவளது அத்தைக்கு இத்தனை பெரிய அதிர்ச்சியை தரும் என்றோ, அத்தையை இப்படி படுக்க வைத்துவிடும் என்றோ அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இனி எந்த சோதனை வந்தாலும் அவள் ஒருபோதும் அத்தையை பிரிவதாக இல்லை என்று முடிவு செய்தபிறகு சற்று மனம் லேசாக, அத்தையின் தலையை வருடிவிட்டு வெளியே வந்தாள்.

அப்போது...

அங்கே நிரஞ்சனை கைத்தாங்கலாக அழைத்து வந்தார் சங்கரன். அவர் வயதானவர் என்பதால் ஆறடி உயரமும் திடமுமாக இருந்த அவனை தாங்கிப்பிடிக்க சற்று கஷ்டப்படுவதை கண்ட மலர்வதனி, விரைந்து சென்று மறுபுறம் அவனது கையை தன் தோள் மீது போட்டுக்கொள்ள இருவருமாக அவனை சத்யமூர்த்தியின் அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.

"மலர், தம்பிக்கு டாக்டர் மருந்து எழுதி கொடுத்திருக்கார். அதைப் போய் வாங்கிட்டு வந்துடுறேன்மா" என்று சங்கரன் கிளம்ப,

"நீங்கள் இருங்கள் தாத்தா. நான் போய் மருந்தை வாங்கிவிட்டு, அப்படியே ரிஷப்ஷனில் பணமும் கட்டிவிட்டு வருகிறேன்" என்று மருந்து சீட்டுடன் அங்கிருந்து அகன்றாள் மலர்வதனி.

அதற்குள் சத்யமூர்த்தி மகனை அங்கே திடுமென காணவும், "ரஞ்சி .. நீ எப்படிப்பா இங்கே? மலர் உனக்கும் தகவல் கொடுத்தாளா? என்றவர்" ஆமாம் உன் முகம் ஏன் இவ்வளவு வாடிப் போயிருக்கு?? என்னாச்சு உனக்கு? கவலப்படாதேப்பா, அம்மாவுக்கு தான் ஒன்றுமில்லை என்று டாக்டர் சொல்லி விட்டாரே, அப்புறம் என்னப்பா? "என்றவாறு மகனின் கையைப் பற்றி தட்டிக் கொடுத்தார்.

"ஐயா தம்பி உடம்புக்கு முடியாமல் போய் ஏதேட்சையாக இங்கே வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் பாப்பா தகவல் சொல்லித்தான் வந்திருக்கார்னு நினைச்சுட்டு பக்கத்தில் போனால் நிற்க முடியாமல் ஜுரத்தோடு தள்ளாடிட்டு இருந்தார். அப்புறம் நான்தான் உள்ளே கூட்டிவந்தேன். அப்படியே மலர் பாப்பாக்கிட்டே விஷயத்தை சொன்னேன். இப்போது தான் டாக்டர் வந்து பார்த்து விஷக்காய்ச்சல்னு ஊசி போட்டுவிட்டு போனார். சின்னம்மா விஷயத்தை கேள்விப்பட்டதும் இங்கே வரனும்னு சொன்னதால் நான் கூட்டியாந்தேன் ஐயா"என்று விவரம் தெரிவித்தார் சங்கரன்.

நிரஞ்சனால் இயல்பாக பேசக்கூட முடியவில்லை. அவனுக்கு இலகுவாக எங்காவது படுத்துக்கொண்டால் தேவலாம் போலத் தோன்றியது. ஆனால் பெற்ற அன்னை உடம்புக்கு முடியாமல் இருக்கையில் அவன் அப்படி எல்லாம் வசதியை தேடுவது சரியில்லை. அவன் நினைத்து வந்தது ஒன்று நடந்தது வேறாகப் போய்விட்டதே? என்ன காரியம் செய்துவிட்டான்? இப்போது தெய்வாதீனமாக அம்மா உயிர் பிழைத்துவிட்டாள். இனி மேற்கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான்?? உடலும் மனமும் இன்னமும் சோர்ந்தது.

அப்போது ஒரு வார்டு பாய், மலர் சொன்னாள் என்று," சத்யமூர்த்திக்கும் , சங்கரனுக்கும் டீயை கொடுத்துவிட்டு, நிரஞ்சனுக்கு இரவு உணவு என்று பிரட்டும் பாலும் தந்துவிட்டு போனான்.

மற்ற இருவரும் டீயை குடிக்க, "எனக்கு எதுவும் வேண்டாம் " என்று நிரஞ்சன் சோர்ந்த குரலில் சொல்லும்போதே மலர் அங்கே வந்து சேர்ந்தாள்.

"மாமா, வெறும் வயிற்றில் மாத்திரை போடக்கூடாது. அதனால் உங்கள் பிள்ளையை முதலில் இதை சாப்பிடச் சொல்லுங்க" என்றாள் சற்று கறாராக.

"மலர் சொல்வது சரிதானே ரஞ்சி? நீ ரொம்பவும் சோர்ந்து தெரிகிறாய். இதை சாப்பிட்டு, மாத்திரையையும் போட்டுக் கொண்டால் தான் தெம்பாக இருக்கும் "என்று தந்தை சொல்ல, நிரஞ்சன் மறுப்பாக தலையை அசைக்க,

"ஏன் அத்தை ஒருத்தர் உடம்பிற்கு முடியாமல் படுத்திருப்பது பத்தாதா? இப்போது இவரும் அட்மிட்டாகனுமா மாமா?, பேசாமல் பிரட்டை சாப்பிட்டு மாத்திரையைப் போடச் சொல்லுங்க"என்று பொறுமையை இழுத்துப் பிடித்தபடி மலர் சொல்ல,

நிரஞ்சனுக்கு,"அதென்ன நடுவில் அப்பாவை இழுக்கிறாள், ஏனாம் அதை இந்தம்மா நேராக என்கிட்டே சொல்ல மாட்டாங்களோ?"என்று லேசான கடுப்புடன் எண்ணும் போதே ,மலரின் அக்கறையான பேச்சிலும், தோரணையிலும் லயிப்பு உண்டாயிற்று "விட்டால் அடித்தே விடுவாள் போலிருக்கிறதே என்று உள்ளூர நகைத்தவன், அவளை மேலும் சீண்டிப் பார்க்க எண்ணியவனாய், "அப்பா நான் வீட்டில் போய் சாப்பிட்டுக்கொள்கிறேன், காலையில் வருகிறேன். நீங்கள் இங்கே அம்மாவுக்கு துணை இருங்கள்" என்றவாறு எழ முயன்று முடியாமல் தடுமாறி விழப்போனான். அவன் மீது ஒரு கண்ணை வைத்திருந்த மலர், சட்டென்று அவனைப் பற்ற, அருகே நின்ற சத்யமூர்த்தியும் மறுபுறம் பிடித்துக்கொண்டார்.

"எழுந்து நிற்கவே தெம்பு இல்லையாம், இதில் இவர் காரை வேறு ஓட்டிக்கொண்டு போகிறாராம்" என்று பல்லைக் கடித்தபடி முணுமுணுத்தவள் அவனை மறுபடியும் அதே இருக்கையில் அமர வைத்தாள். நிரஞ்சனுக்கு அவள் சொன்னது தெளிவாக கேட்டது, அவன் இதழில் புன்னகை ஒன்று தவழ்ந்தது.

அதற்குள்,"என்ன, ரஞ்சி இது? சும்மாவே அம்மாவிற்கு இப்படி ஆனதில் நான் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறேன். இன்னும் வீட்டில் அம்மாவிடம் வேறு சொல்லாமல் கிளம்பி வந்ததற்காக என்னமாதிரி கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார்களோ? மலர் தான் அவ்வளவு தூரம் சொல்கிறாளே நீ எதற்காக பிடிவாதம் பிடிக்கிறாய்? பேசாமல் சாப்பிடு கண்ணா"என்று கெஞ்சாத குறையாக சத்தியமூர்த்தி சொல்ல,

"பாட்டிக்கிட்டே விஷயத்தை நான் தெரிவிக்கச் சொல்லிவிட்டேன் மாமா. அதனால் பாட்டி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். நீங்கள் உங்கள் பிள்ளையை சாப்பிட வைங்க மாமா. நான் போய் என் வேலையை முடித்துக்கொண்டு வந்து அவருக்கு மாத்திரை கொடுக்கிறேன்."என்று மலர் அவளுக்கு பணி நியமிக்கப்பட்டிருந்த பகுதிக்கு விரைந்தாள்.

சரியான கறார் கண்ணாத்தாளாக இருக்கிறாளே"என்று எண்ணியபடி சாப்பிடத் தொடங்கினான் நிரஞ்சன்.

நிரஞ்சனுக்கு மலர்வதனியை பார்த்த பிறகு, அவன் குறுக்குவழியில் திட்டமிட்டிருக்க வேண்டாம் என்று புரிந்தது. ஆனால் உடனே ஜாஸ்மினை வீட்டை விட்டு அனுப்புவதும் சரியாகாது. சொல்லப்போனால் அவளைக் கொண்டு தான் முன்பு போட்டிருந்த திட்டத்தை மாற்றி வேறு கோணத்தில் செயல்படுத்தினால் அவன் நினைத்து வந்த காரியத்தை எளிதாக நிறைவேற்றி விடலாம் என்று தோன்றியது.

ஆனால் என்னதான் மனதில் ஆசையும் அன்பும் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளச் செய்வது அத்தனை சுலபமில்லை என்றும் அதற்கு அவசியம் போராடித்தான் ஆகவேண்டும் என்று அனுபவித்து தான் அறிந்தான் நிரஞ்சன்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Last edited:
Back
Top